Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘வீட்டுக்குச் செல்ல விடாமல் தெருவை மறித்து கம்பி வேலி’ – திருப்பூர் அருகே சாதிய கொடுமையா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, சரோஜாஎழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்24 நிமிடங்களுக்கு முன்னர்
”குப்பை அள்ளுற வேலையை சாயங்காலம் பார்த்துக்கோ. காலையில என் தோட்டத்துல வந்து வேலை பாரு என்று சொன்னார். நான் முடியாது என்று சொல்லி விட்டேன். அதனால் என்னுடைய சாதிப்பெயரைச் சொல்லி மிக மோசமாகத் திட்டினார். இந்த ஊருக்குள்ளேயே உன்னை குடியிருக்கவே விடமாட்டேன் என்றார். அவரும் அவருடைய மகனும் சேர்ந்து தான் இந்த வேலியைப் போட்டார்கள்”
தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் வழியில் தெருவை மறித்து அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியின் முன்பாக நின்று பிபிசி தமிழிடம் கண்ணீர் விட்டு அழுகிறார் முன்னாள் தூய்மைப் பணியாளரான சரோஜா.
பட்டியல் பிரிவைச் சேர்ந்த இவரின் வீட்டின் முன்பாக வீதியை மறித்து கம்பி வேலி போடப்பட்டு இருப்பதில், மற்றொரு சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணைத்தலைவரின் தலையீடு இருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதுகுறித்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு அதிகாரிகளிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பல மாதங்களாக அந்த வேலி அகற்றப்படாமல் இன்னும் அப்படியே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மூலனுார் அருகே கருப்பன்வலசு ஊராட்சிக்குட்பட்ட முளையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். அருகிலுள்ள சிறிய நகரமான மூலனுாரில் மூட்டை துாக்கும் தொழிலாளியாகவுள்ளார். இவரின் வீட்டின் முன்பாக வீதியை மறித்து கம்பிவேலி போடப்பட்டிருப்பதில் தனிமனித உரிமை மீறலும், பட்டியல் பிரிவினர் மீதான வன்கொடுமையும் நிகழ்ந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர், மாநில மனித உரிமை ஆணையம் வரை இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
படக்குறிப்பு, அய்யனாரின் வீட்டிற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள வேலிஎன்ன நடந்தது?
தாராபுரம் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முளையாம்பூண்டி கிராமத்தில் ஒரு வீதியின் முடிவில் அய்யனாரின் வீடு அமைந்துள்ளது. ஹாலோப்ளாக் கற்களை வைத்து, ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்டுள்ள அந்த மிகச்சிறிய வீட்டிற்குள் அய்யனாரும், அவரின் மனைவி சரோஜா மற்றும் 2 மகன்களும் வசிக்கின்றனர்.
இவர்களுடைய வீட்டிலிருந்து வீதி வழியாக பிரதான சாலைக்குச் செல்வதற்கு 20 அடி கான்கிரீட் சாலை உள்ளது. அந்த சாலைதான் தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த பல மாதங்களாக 2, 3 வீதிகளைச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது என அய்யனாரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இவர்களுடைய வீட்டிற்கு அருகிலுள்ள சரஸ்வதி, அவரின் கணவர் மாரிமுத்து ஆகிய இருவரும் தான், இந்த கம்பிவேலியை அமைத்துள்ளதாக பிபிசி தமிழிடம் அய்யனாரும், அவருடைய மனைவி சரோஜாவும் தெரிவித்தனர்.
வீதியிலிருந்து அய்யனார் வீட்டிற்குள் போக முடியாத வகையில், கான்கிரீட் சாலையின் நடுவில் ஹாலோபிளாக் கற்களை அடுக்கியும், அதற்கு மேல் கம்பிவேலி போட்டும் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் காட்டினார்கள். அதன் மீது பச்சை வண்ணத் திரையும் கட்டப்பட்டுள்ளது.
”இது நாங்கள் 32 ஆண்டுகளாக பயன்படுத்திய வீதி. சென்ற ஆண்டில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரஸ்வதியும், அவருடைய கணவர் மாரிமுத்துவும்தான் இந்த ரோட்டுக்கு நடுவே வேலி போட்டு மறித்தனர். அப்போதிருந்த ஊராட்சித் தலைவரிடம் சொல்லி, அதை எடுத்துவிட்டோம். ஆனால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக, கற்கள், கம்பியை வைத்து மீண்டும் வேலியை அமைத்துவிட்டனர். இதை எடுக்கச் சொல்லி, தாசில்தார், ஆர்டிஓவிடம் புகார் கொடுத்தும் இதுவரை எடுக்கவில்லை.” என்றார் அய்யனார்.
‘அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம்’
படக்குறிப்பு, அய்யனார்இதைப் பற்றி இன்னும் விரிவாக விளக்கிய அய்யனாரின் மனைவி சரோஜா, ”தாசில்தாரிடம் புகார் கொடுத்ததும் விஏஓ சுப்புலட்சுமி வந்து பார்த்துவிட்டு, அந்த ரோட்டைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உள்ளது என்றார். ஆனால் வேலியை அகற்றவில்லை. எங்களையும் அகற்றக் கூடாது என்று கூறிவிட்டார். அதற்குக் காரணம், முன்னாள் கிராம ஊராட்சித் துணைத்தலைவர் செல்வியின் தலையீடுதான்.” என்றார்.
வேலி அமைத்த சரஸ்வதியும், மாரிமுத்துவும் தனது உறவினர்களே என்று கூறிய அய்யனாரும், சரோஜாவும், அவர்களை முன்னிறுத்தி, இந்த வேலையைச் செய்தது கருப்பன்வலசு கிராம ஊராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் செல்விதான் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக, கருப்பன்வலசு கிராம ஊராட்சியில் துாய்மை பாரதத்திட்டத்தின் கீழ் துாய்மைப் பணியாளராக சரோஜா பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது செல்வி தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய அழைத்ததாகவும், அதற்கு மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் தங்கள் உறவினர்களான சரஸ்வதி, மாரிமுத்து மூலமே இந்த வேலியை அமைத்து விட்டதாகவும் சொல்கிறார் சரோஜா.
மாரிமுத்து தரப்பு பதில்
சரோஜா–அய்யனாரின் குற்றச்சாட்டு குறித்து, ஈரோட்டில் வசிக்கும் சரஸ்வதி–மாரிமுத்து ஆகியோரிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ”அது அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம். எங்களுடைய வீட்டுக்கு பட்டா இருக்கிறது. அய்யனார் வீடு உள்ளிட்ட பின்னால் இருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லை. அதனால் அறநிலையத்துறை சார்பில் அந்த ரோட்டில் வேலி போடப்பட்டிருந்தது. அதை அய்யனார் எடுத்துவிட்டார். அதன்பின் அப்போதிருந்த பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர், மூலனுார் போலீஸ் எல்லோரிடமும் சொல்லி நாங்கள்தான் எங்கள் பாதுகாப்புக்காக அந்த வேலியை அமைத்தோம்.” என்றனர்.
‘பட்டா இல்லாத வீடுகள்’
படக்குறிப்பு, அய்யனாரின் வீடுஆனால் தாங்கள் அங்கு குடியிருந்து வரும் 30 ஆண்டுகளில் அந்த வீதியில் எப்போதுமே வேலி இருந்ததில்லை, இவர்களால்தான் முதன் முதலில் வேலி அமைக்கப்பட்டது என்று அய்யனார் தெரிவித்தார்.
அந்த வீதி உட்பட அப்பகுதியில் எங்குமே அறநிலையத்துறை சார்பில் எந்த வேலியும் அமைக்கப்பட்டதில்லை என்று அப்பகுதியிலுள்ள சிலரும் பிபிசி தமிழிடம் கூறினர். அறநிலையத்துறைக்குச் சொந்தமான அந்த புறம்போக்கு நிலத்தில் பல வீடுகளுக்கு பட்டா இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவற்றில் முதலில் குடியேறிய 30 குடும்பங்களுக்கு, கடந்த 1991–1996 ஆம் ஆண்டு இடையிலான அதிமுக ஆட்சியின்போது, பட்டா வழங்கப்பட்டதாக சிலர் தெரிவித்தனர்.
அதற்குப் பின்பு குடியேறி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இவற்றில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த 10 குடும்பங்களுடன், வேறு பல சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களும் இருக்கின்றன.
படக்குறிப்பு, ’32 ஆண்டுகளாக குடியிருக்கிறது எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை’ என்கிறார் காமாட்சி.இவர்களில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த சிலருடைய வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. அறநிலையத்துறை சார்பில் வாடகை ரசீது தரப்பட்டதை வைத்து பல வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. அதுவும் சிலருக்குக் கிடைக்காததால் மின் இணைப்பு பெற முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பட்டியல் பிரிவைச் சேர்ந்த காமாட்சி, ”என் குடும்பம் இங்கேதான் 32 ஆண்டுகளாக குடியிருக்கிறது. இன்னும் எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை. எண்ணெய் விளக்கைத்தான் பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு பட்டா கொடுத்தால் எங்கள் வீட்டுக்கு மின் இணைப்புடன் இந்தப் பகுதிக்கு ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் போன்ற வசதிகளும் கிடைக்கும்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தற்போது எழுந்துள்ள பிரச்னை பற்றி கேட்பதற்காக சிவன்மலை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினம்மாளை தொடர்பு கொண்டபோது பதில் பெற முடியவில்லை. அதனால் இந்த தகவலை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
ஆளுங்கட்சி என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
படக்குறிப்பு, ஆதித்தமிழர் முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச் செயலாளர் காளிமுத்து.பட்டா இல்லை என்பதை வைத்தே பல வசதிகள் மறுக்கப்பட்டாலும், நடுவீதியில் வேலி அமைத்ததற்கும் பட்டா இல்லை என்பதற்கும் எந்த தொடர்புமில்லை என்கிறார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் காளிமுத்து.
இந்த விவகாரத்தில் அய்யனார் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆதித்தமிழர் முன்னேற்றக்கழகம் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி போன்ற சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்து, வேலியை அமைக்கக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வேலியையும் அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
“இதில் மனித உரிமை மீறல் மட்டுமின்றி, சாதிய வன்கொடுமையும் நிகழ்ந்துள்ளது. செல்வி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய எல்லா மனுக்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.” என்று காளிமுத்து குற்றம்சாட்டினார். .
தாராபுரம் தாசில்தார் துவங்கி, வருவாய் கோட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.சி.–எஸ்.டி. கமிஷன் உட்பட 13 மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
செல்வி தரப்பு பதில்
அய்யனார் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து, கருப்பன்வலசு கிராம ஊராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் செல்வியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”அத்தனையும் அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டுகள். நான் அவரை வேலைக்குக் கூப்பிடவுமில்லை. நாங்கள் வேலி அமைக்கவும் இல்லை. அது அய்யனார் வீட்டுக்கான பாதையே இல்லை. அது அய்யனாருக்கும், அவருடைய உறவினர் சரஸ்வதிக்குமான தனிப்பட்ட மோதல்.” என்றார்.
வெளியிலிருந்து ஆட்களைக் கூப்பிட்டு வந்து, சரஸ்வதி வேலி அமைத்ததாகக் கூறிய செல்வி, கிராம நிர்வாக அலுவலரிடமும் சொல்லிவிட்டுத்தான் அதை அவர் அமைத்ததாக கூறினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்வருவாய் வட்டாட்சியர் கூறுவது என்ன?
இந்த வேலி அமைக்கப்பட்ட பின், தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் திரவியம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து சென்று பல மாதங்களாகியும் இதுவரை வேலி அகற்றப்படவில்லை என்று அய்யனார் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுபற்றி வட்டாட்சியர் திரவியத்திடம் கேட்டதற்கு, ”அது இரு பெண்களுக்கும், இரு குடும்பத்துக்குமான பிரச்னை. அதில் பல மாதங்களாக நாங்கள் பேசியும் எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. அதனால் சோர்ந்து போய் அதை விட்டுவிட்டோம்.” என்றார்.
வீதிக்கு நடுவில் வேலி அமைத்ததில் மனித உரிமை மீறல் மற்றும் சாதிய வன்கொடுமை நடந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, ”அதனால்தான் இந்த விவகாரத்தில் அமைதிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கு எனக்கு அதிகாரமில்லை என்பதால் வருவாய் கோட்டாட்சியருக்கு இதுபற்றி அறிக்கை அனுப்பவுள்ளேன்.” என்றார்.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, ”அந்த பிரச்னை, இருவரின் தனிப்பட்ட பிரச்னையா அல்லது இரு வேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான பிரச்னையா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்த பின்பே நடவடிக்கை எடுக்கமுடியும். பட்டா நிலமாக இல்லாதபட்சத்தில் அதையும் விசாரிக்க வேண்டும். அதனால் தாராபுரம் வட்டாட்சியரிடம் இதுபற்றி அறிக்கை கேட்கப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு