பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? முப்படைத் தலைமைத் தளபதி பதில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்16 நிமிடங்களுக்கு முன்னர்

இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார்.

சிங்கப்பூரில் இன்று (2025 மே 31 சனிக்கிழமை) ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்பதை தெரிந்துக் கொள்வதை விட, சேதம் ஏன் ஏற்பட்டது என்பதை அறிவதே மிக முக்கியமானது’ என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஆறு இந்திய விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தானின் கூறியதை அவர் மறுத்தார்.

“ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்,” என்று பதிலளித்த அவர், சேதமடைந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் தான் ப்ளூம்பெர்க்கிற்கு அவர் நேர்காணலை வழங்கியுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில், முப்படைகளின் பிரதிநிதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, “நாம் போர்ச் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும்” என்று தெரிவித்திருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா இந்தக் கூற்றுகளை நிராகரித்தது.

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்ஜெனரல் அனில் செளகான் தெரிவித்த கருத்துக்கள்

இந்த மாதம் பாகிஸ்தானுடனான நான்கு நாள் ராணுவ மோதலில் இந்திய போர் விமானம் ஏதேனும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று சிடிஎஸ் அனில் செளகானிடம் கேட்கப்பட்டது.

இந்த பேட்டியின் ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் கொண்ட ஒரு பகுதியை ப்ளூம்பெர்க் டிவி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த காணொளியில், ஜெனரல் அனில் செளகானிடம், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தானின் கூற்றை உறுதிப்படுத்த முடியுமா என்று , ப்ளூம்பெர்க் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் செளகான், “ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமல்ல, இது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்” என்றார்.

முப்படைகளின் தளபதியிடம் இருந்து விசயத்தை தெரிந்துக் கொள்ள கேள்வி வேறுவிதமாக கேட்கப்பட்டது. “குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது, என்பது சரியா?” என பத்திரிகையாளர் வினா எழுப்பினார்.

” ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து பிறகு அதை செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு நாங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்.”

“ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. அந்த நாடு சொல்லும் கணக்கு சரியானதா?” என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்டார்.

“இது முற்றிலும் தவறு. ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று ஜெனரல் அனில் செளகான் பதிலளித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதற்கு முன்பு ராணுவம் என்ன சொன்னது?

மே 7ஆம் தேதியன்று, இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது .

அதற்கு பிறகு, பாகிஸ்தான் விமானப்படை ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறினார், அதில் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் விமானங்களும் அடங்கும் என்று கூறப்பட்டது.

“இதுவரை, மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு எஸ்.யூ-30 மற்றும் ஒரு மிக்-29 உட்பட ஐந்து இந்திய விமானங்கள் மற்றும் ஒரு ஹெரான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்” என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி தெரிவித்த வீடியோவை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பகிர்ந்தது.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் இந்தக் கூற்றுக்கு இந்தியா எந்தவித பதிலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை.

இருப்பினும் மூன்று படைகளின் பிரதிநிதிகளான, டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை டிஜிஏஓ (விமான நடவடிக்கைகள்) ஏர் மார்ஷல் ஏகே பார்தி மற்றும் கடற்படையைச் சேர்ந்த டிஜிஎன்ஓ (கடற்படை நடவடிக்கைகள்) வைஸ் அட்மிரல் ஏஎன் பிரமோத் மற்றும் மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஷார்தா ஆகியோர் மே 11 அன்று பாகிஸ்தானுடனான மோதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய தகவல்களை வழங்கினார்கள்.

பட மூலாதாரம், ani

ரஃபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி , “நாம் ஒரு போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகளும் அதில் ஒரு பகுதி தான். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? என்பதாகவே இருக்கவேண்டும். அதற்கான பதில் ஆம்” என்று சொன்னார்.

” நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம், நமது அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திபாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் ஒரு மதிப்பாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு முழு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோருகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் ஊடகப் பதிவில், இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா சுமத்திய குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரித்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் மொத்தம் ஒன்பது இடங்களை இந்தியா தாக்கியது. மே 7ஆம் தேதி மாலை ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவம் இந்தத் தகவலை வழங்கியது.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய ஆயுதப்படைகள் 2025 மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் , இதில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

பட மூலாதாரம், ani

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், CDS ஜெனரல் அனில் செளகான் ப்ளூம்பெர்க் டிவிக்கு வழங்கிய பேட்டியின் காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1999 ஜூலை 29ஆம் நாளன்று, அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம், தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் தந்தையும், மூலோபாய விவகார நிபுணருமான கே. சுப்பிரமணியம் தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழுவை அமைத்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தக் குழு அமைக்கப்பட்டு, 5 மாதங்களில் விரிவான அறிக்கையை மறுஆய்வுக் குழு சமர்ப்பித்தது.

தேவையான திருத்தங்களுக்குப் பிறகு, மறுஆய்வுக் குழுவின் ‘From Surprise to Reckoning’ என்ற என்ற அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது, என ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பாதுகாப்புப் படைத் தலைவர் அளித்த தகவலுக்குப் பிறகு மத்திய அரசு இப்போது அத்தகைய நடவடிக்கை எடுக்குமா? என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விசயம் தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், ஆனால் இப்போது அந்த அபாயம் நீங்கி வருவதாகவும் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்கில் மறுஆய்வுக் குழுவின் மாதிரியில், நாட்டின் பாதுகாப்பு தயாரிப்புகளை ஒரு சுயாதீன நிபுணர் குழு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோருவதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு