எங்கள் நாட்டின் அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

இந்த நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் பெண்களாகிய நாங்கள் எங்களுக்கும் முழுநாட்டுக்கும் வன்முறைகளற்ற வாழ்தலை உருவாக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

இலங்கையானது பல்தன்மை கொண்ட இயற்கைச் சூழல்களையும், மனிதர்களையும் கொண்ட அற்புதமான ஒரு தீவு.

அன்பையும், அகிம்சையையும் தங்கள் மதமாகக் கொண்டவர்கள் வாழும் நாடு. அன்பையும், அகிம்சையையும் போதித்த பல்மதங்களைப் பின்பற்றுவோர் வாழும் நாடு.

ஆனால், இந்த நம்பிக்கைகளுக்கு எதிரான அதிகாரமும், வன்முறைகளும் எங்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளன. எங்கள் வாழ்வின் எல்லாத்தளங்களிலும்; – குடும்பம், சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் வன்முறை ஒரு சாதாரண விடயமாக்கப்பட்டு வருகின்றது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் அதிகாரத்தையும், வன்முறையையும் பயன்படுத்துவதுதான் தீர்வு என்றும் நம்ப வைக்கபட்டுள்ளோம்.

இலங்கைப் பெண்களாகிய நாங்கள் வன்முறைகளின் கொடூர வடிவங்களை அனுபவித்திருக்கின்றோம் – அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றோம். இங்கு வன்முறையாளர்கள் வேறெங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல, இந்த நாட்டுக்குள்ளே எங்களில் ஒரு பெண்ணைத் தாயாகக் கொண்டு பிறந்து இந்த சமூகங்களால் வளர்த்து உருவாக்கப்பட்டவர்கள்.

எங்கள் பிள்ளைகள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதேநேரம் எங்கள் பிள்ளைகள் வன்முறையாளர்களாக இருப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டிய வாழ்தலை, வன்முறையால் கட்டியெழுப்புவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. வன்முறைகளை விதைக்கும், வளர்க்கும் பண்பாட்டை நாங்கள் நிராகரிப்போம்! வன்முறைகளை விதைக்கும் அரசியல்வாதிகளையும், மதத் தலைவர்களையும், வர்த்தக முதலாளிகளையும் இவர்கள் போன்ற அனைவரையும் நிராகரிப்போம்! அன்பையும் அகிம்சையையும் எங்கள் பண்பாடாக்குவோம்!.

அன்பினாலான வாழ்தல் காண்போம்!