Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தொடரும் ராமதாஸ், அன்புமணி மோதல் – பாமகவில் என்ன நடக்கிறது? கட்சி என்ன ஆகும்?
பட மூலாதாரம், @PSMFOfficial/X
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இரண்டாவது நாளாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. நேற்று (மே 29) பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று (மே 30) சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி ராமதாஸும், விழுப்புரம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸும் பரஸ்பரம் அறிக்கைகள் விடுத்துள்ளனர். மேலும் கட்சிப் பொருளாளரை நீக்கியும் இணைத்தும் வெளியாகி வரும் அறிவிப்புகள் உட்கட்சிப் பூசலை வெளிப்படையாக்கியுள்ளது.
கட்சி இரண்டாகப் பிளவுறும் சாத்தியக் கூறுகள் ஏற்படும் பட்சத்தில், கட்சியின் வாக்கு வங்கி பலவீனம் அடைந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். மேலும் இத்தகைய போக்கு தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தவொரு கட்சியுடனான பேச்சுவார்த்தையிலும் பாமக ஒரு பலவீனமான இடத்தில்தான் இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பாமகவில் என்ன நடக்கிறது? பொருளாளராக நீடிப்பது யார்? உள்கட்சி பிரச்னைக்குப் காரணம் என்ன?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஒரே நேரத்தில் நடைபெற்ற இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள்
தைலாபுரத்தில் ராமதாஸும், சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் கல்யாண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக மே 30ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் நடத்தி வந்தார்.
பாமக பொருளாளர் திலகபாமா தவிர இதர மூத்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் யாரும் அன்புமணியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற ராமதாஸின் கூட்டத்தில், பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ. அருள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைவர் அன்புமணி ராமதாஸ்?
பட மூலாதாரம், @draramadoss/x
ராமதாஸ், கட்சியின் பொருளாளராகச் செயல்பட்டு வந்த திலகபாமாவை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து, சையத் மன்சூர் உசேனை கட்சியின் புதிய பொருளாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். மே 29 அன்று அன்புமணி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், ராமதாஸ் இன்று அதிரடியாக சில கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியது கட்சியில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் சில நிமிடங்களில், அன்புமணி, திலகபாமா பாமகவின் பொருளாளராக நீடிப்பார் என்று பதில் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்றும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், பாமகவின் தலைவராகத் தொடர்ந்து “நானே செயல்படுவேன்” என்று ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவித்திருந்தார்.
தன்னை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து வருத்தம் தெரிவித்து தருமபுரியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, “நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நான் என்ன தவறு செய்தேன்” என்றும் பேசியிருந்தார். ஆனால் தற்போது அவர் கட்சியின் தலைவர் என்று தன்னை முன்னிலைப்படுத்தி வருவதும் பேசுபொருளாகியுள்ளது.
இன்று சென்னையில் இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய அன்புமணி, “கட்சியின் பொறுப்பில் இருந்து யாரும் யாரையும் நீக்க இயலாது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களான நீங்கள் எங்களைத் தேர்வு செய்தீர்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை யாராலும் நீக்க இயலாது,” என்று குறிப்பிட்டார்.
‘எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான்’
பட மூலாதாரம், @draramadoss/x
படக்குறிப்பு, கடந்த ஏப்ரல் மாதம், பாமகவின் தலைவராகத் தொடர்ந்து தானே செயல்படுவதாகவும், அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராகச் செயல்படுவார் என்றும் ராமதாஸ் அறிவித்திருந்தார்மே 29ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பகிரங்கமாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில் பொங்கல் நேரத்தில், வீட்டில் முகுந்தனுக்கு கட்சிப் பொறுப்பு கொடுத்தது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பாட்டில் ஒன்றை எடுத்து தனது தாயார் மீது அன்புமணி வீசினார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதற்கு பதிலளித்த அன்புமணி, “உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான். உலகிலேயே அவருக்கு மிகவும் பிடித்த நபர் நான்தான். அவர் மீது சிறு துரும்புகூடப் பட விடமாட்டேன்,” என்று தெரிவித்தார்.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க நிர்பந்திக்கப்பட்டதாக நேற்று ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.
டிசம்பர் முதல் அதிருப்தி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார்.
இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம், ராமதாஸ் தானே கட்சியின் தலைவராக நீடிக்கப் போவதாகவும் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார் என்றும் கூறினார்.
இதையடுத்து, நேற்று (மே 29) செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ராமதாஸ், அன்புமணி மீது பல பகிரங்மாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய ராமதாஸ், பாஜகவுடன் பாமக கூட்டணியில் இணைய அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும், ராமதாஸை நிர்பந்தித்ததாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
உட்கட்சிப் பூசல் பாமகவை எப்படி பாதிக்கும்?
பட மூலாதாரம், X/GK Mani
படக்குறிப்பு, மே 29ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இந்த உட்கட்சிப் பூசல் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடானது சரியாகிவிடும் என்றே தோன்றியது. ஆனால் தற்போது இரு தரப்பிலும் நடைபெறும் நிகழ்வுகள், இனி இந்த இரண்டு பிரிவினரும் இணைந்து ஒரே கட்சியாகப் பணியாற்றுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது,” என்று தெரிவித்தார்.
“ராமதாஸ், நேற்று அன்புமணியின் தலைமைப் பண்பை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, அவர் மீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது கட்சியில் வெளிப்படையான பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். அதே நேரத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் ராமதாஸுடன் கைகோர்த்து நிற்பதை இன்று நடந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன. வன்னியர் சமூகத்தினரும், கட்சித் தொண்டர்களும்கூட ராமதாஸுடன் கை கோர்க்கும் சூழல் வரலாம்,” என்று கூறினார் ரவீந்திரன் துரைசாமி.
“கட்சியின் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாமகவை இந்தப் பிளவு பலவீனப்படுத்தும். மேலும் ராமதாஸின் உதவியின்றி தனியாகவும் அன்புமணியே வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் களம் காண்பதும் கடினம். தொடர் தோல்வியில் இருக்கும் கட்சியில் ஏற்படும் பிளவு என்பதால், கூட்டணி வைக்க எந்தக் கட்சி முன்வந்தாலும் குறைவான தொகுதிகளையே இக்கட்சிக்கு வழங்குவார்கள்,” என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு வாக்கு வங்கி சரிந்ததைப் போன்று, தற்போது பாமக தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
அன்புமணி ராமதாஸ் தன்னை இக்கட்சியின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் போக்கு சரியானதா என்று கேள்வி எழுப்பியபோது, “கட்சியின் நிறுவனர் யாராக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவர்களே தலைவராகத் தொடர இயலும் என்பதுதான் நிதர்சனம். எனவே அன்புமணி கூறியது சரியானதே,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு