Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘சிறு தவறும் மரணத்தை தரலாம்’ – யுக்ரேன் வீரர்களை நகர விடாமல் முடக்கும் ரஷ்யாவின் புதிய ஆயுதம்
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், யோகிதா லிமாயே பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரோடின்ஸ்கி நகரத்தில் சங்கடம் தரும் போரின் வாசம் வீசுகிறது. அந்த சங்கடமான வாசம் எங்கிருந்து வருகிறது என்பதை நகரத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் தெரிந்துக் கொள்ள முயன்றோம்.
250 கிலோ எடையுள்ள கிளைட் குண்டு ஒன்று நகரத்தின் பிரதான நிர்வாகக் கட்டடத்தை சிதைத்ததுடன் 3 குடியிருப்பு வளாகங்களையும் இடித்துவிட்டது. குண்டுவீச்சு நடைபெற்ற அடுத்த நாள் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். இடிபாடுகளின் சில பகுதிகளில் இருந்து இன்னும் புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. நகரின் எல்லைப்புறங்களில் பீரங்கித் தாக்குதல்களின் சத்தத்தையும், துப்பாக்கிச் சூடு சத்தத்தையும் கேட்க முடிகிறது. அது யுக்ரேனிய வீரர்கள், டிரோன்களை சுட்டு வீழ்த்தும் சப்தம்.
போரில் பிடியில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரிலிருந்து வடக்கே சுமார் 15 கிமீ (9 மைல்) தொலைவில் உள்ளது ரோடின்ஸ்கி நகரம். தெற்கிலிருந்து போக்ரோவ்ஸ்க் நகரத்தைக் கைப்பற்ற கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இருந்து ரஷ்யா முயற்சித்து வருகிறது, ஆனால் யுக்ரேனியப் படைகள் ரஷ்ய வீரர்கள் உள்ளே நுழைவதை தடுத்து வருகின்றனர்.
எனவே தனது போர்த்திட்டத்தை மாற்றிக் கொண்ட ரஷ்யா, நகரத்தைச் சுற்றி வளைத்து செல்வதற்குப் பதிலாக, நகருக்கான பொருட்கள் விநியோக வழிகளைத் துண்டித்துவிட்டது.
கடந்த இரு வாரங்களாக, யுக்ரேனில் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து தனது போர்த்திட்டத்தில் மிக முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது ரஷ்யா.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ரோடின்ஸ்கியில் அதற்கான ஆதாரங்களை எங்களால் பார்க்க முடிந்தது.
நாங்கள் நகரத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே, எங்களுக்கு மேலே ரஷ்ய டிரோன் சத்தம் கேட்டது. அருகில் இருந்த பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம், ஒரு மரம் தான் அந்த பாதுகாப்பான இடம்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.டிரோன் எங்களைப் பார்க்க முடியாதபடி நாங்கள் மரத்தை ஒட்டி நின்று கொண்டோம். சற்று நேரத்தில் மிகப்பெரிய வெடிச் சத்தம் கேட்டது, அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டாவது டிரோனின் தாக்குதல். மேலே வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் டிரோன், இந்தப் போரின் மிகக் கொடிய ஆயுதமாக மாறியதன் எதிரொலியாக பயங்கரமான சத்தத்தைக் கேட்கிறோம்.
அந்த சப்தம் சகித்துக் கொள்ள முடியாத அளவில் மாறிய போது, 100 அடி தொலைவில் யாருமே இல்லாத ஒரு கட்டடத்திற்கு சென்று மறைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அங்கு சென்று நாங்கள் மறைந்துக் கொண்டோம். ஆனால், அங்கும் டிரோன் சப்தம் கேட்டது. மரத்தில் இருந்து நாங்கள் கட்டடத்திற்கு சென்றதைக் கண்ட பிறகு அந்த டிரோன் திரும்பியிருக்கலாம்.
ரோடின்ஸ்கே மீது ரஷ்ய டிரோன்கள் தாக்குதல் நடத்துவது என்பது, போக்ரோவ்ஸ்க் நகருக்கு தெற்கே உள்ள ரஷ்ய நிலைகளை விட, மிக நெருக்கமான நிலைகளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான சான்றாகும். போக்ரோவ்ஸ்கின் கிழக்கிலிருந்து கோஸ்ட்யான்டினிவ்கா வரை செல்லும் ஒரு முக்கிய சாலையில் புதிதாக கையகப்படுத்திய யுக்ரேனின் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம்.
நாங்கள் மறைவிடத்திற்கு வந்த அரை மணி நேரத்திற்கு பிறகு டிரோன் சத்தம் நின்றது. பிறகு, மரங்களின் கீழ் மறைவாக நிறுத்தப்பட்டிருந்த எங்கள் காரை நோக்கி ஓடினோம். ரோடின்ஸ்கேவை விட்டு வேகமாக வெளியேறிவிட்டோம். நெடுஞ்சாலையின் ஓரத்தில் புகை மூட்டத்தை பார்க்க முடிந்தது, அதேபோல ஏதோ எரிந்துக் கொண்டிருப்பதையும் கண்டோம். அது சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனாக இருக்கலாம்.
படக்குறிப்பு, ரோடின்ஸ்கே மீது ரஷ்ய டிரோன்கள் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சேதங்கள் “அவர்களிடம் இருந்த அனைத்தையும் பயன்படுத்தினார்கள் ”
அங்கிருந்து தொலைவில் உள்ள பிலிட்ஸ்கேவுக்கு சென்றோம். இரவு முழுவதும் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலால் வரிசையாக இருந்த வீடுகள் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஸ்விட்லானாவின் வீடும், சேதமடைந்த வீடுகளில் ஒன்று.
“நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு முன்னதாக, தொலைதூரத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது எங்கள் நகரம் குறிவைக்கப்படுகிறது, நாங்களே அதை அனுபவிக்கிறோம்,” என்று 61 வயதான ஸ்விட்லானா கூறுகிறார். தனது வீட்டின் இடிபாடுகளிலிருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டிருந்த அவர், தாக்குதல் நடந்தபோது வீட்டில் இல்லை.
“நகரத்தின் மையப்பகுதிக்குச் சென்றால், அங்கு பெருமளவிலான அழிவைப் பார்க்கலாம். பேக்கரி மற்றும் விலங்கு காட்சி சாலையும் அழிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறுகிறார்.
டிரோன்கள் வர முடியாத தொலைவில் உள்ள பாதுகாப்பான ஓரிடத்தில், 5வது தாக்குதல் படைப்பிரிவின் பீரங்கி பிரிவு வீரர்களைச் சந்தித்தோம்.
“ரஷ்ய தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும். ராக்கெட்டுகள், மோட்டார்கள், டிரோன்கள் மற்றும் நகரத்திற்கு தேவையான பொருட்கள் செல்வதற்கான விநியோக வழிகளைத் துண்டிக்க அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்,” என்று செர்ஹி கூறுகிறார்.
படக்குறிப்பு, “ரஷ்ய தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.”முன்னேறி வரும் ரஷ்யா
தொடர்ந்து அதிகரித்து வரும் மோதலில், மாறிவரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களை விரைவாக தகவமைக்க வேண்டியிருக்கிறது. அதிலும், சமீபத்திய அச்சுறுத்தல் ஃபைபர் ஆப்டிக் டிரோன்களிலிருந்து வருகிறது. பத்து கிலோமீட்டர் நீளமுள்ள கேபிள் ஒரு டிரோனின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபைபர் ஆப்டிக் கேபிள், விமானியிடம் இருக்கும் கண்ட்ரோலருடன் இணைக்கப்பட்டுள்ளது.
“வீடியோ மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞை, ரேடியோ அதிர்வெண்கள் மூலம் அல்லாமல் கேபிள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் பொருள், சிக்னலை முடக்க முடியாது என்பதால் அந்த டிரோனை செயலிழக்கக் செய்ய முடியாது.” என்று 68வது ஜேகர் படைப்பிரிவின் டிரோன் பொறியாளரான மாடரேட்டர் என்ற அழைப்பு அடையாளத்தைக் கொண்ட சிப்பாய் ஒருவர் கூறுகிறார்.
இந்தப் போரில் டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கிய சமயத்தில், இரு தரப்பினரும் தங்கள் வாகனங்களில் எதிரிகளின் டிரோன்களை முடக்கக் கூடிய மின்னணு போர் அமைப்புகளைப் பொருத்தினர். ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது அந்தப் பாதுகாப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்துவதில் தற்போது ரஷ்யா முன்னணியில் உள்ளது என்றால் யுக்ரேன் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கிறது.
“நாங்கள் ஃபைபர் ஆப்டிக் டிரோன்களைப் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ரஷ்யா அவற்றை பயன்படுத்தத் தொடங்கவிட்டது. வழக்கமான டிரோன்களை விட உயரம் குறைவாக செல்ல வேண்டிய இடங்களில் இவற்றை பயன்படுத்தலாம். சொல்லப்போனால், வீடுகளுக்குள் நுழைந்து, வீட்டிற்குள்ளும் தாக்குதல் நடத்தலாம்,” என்று 68வது ஜேகர் படைப்பிரிவின் டிரோன் பைலட் வெனியா கூறுகிறார்.
“கேபிள்களை வெட்ட கத்தரிக்கோலையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் வேடிக்கையாக பேசத் தொடங்கிவிட்டோம்,” என்று பீரங்கி வீரர் செர்ஹி கூறுகிறார்.
ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் மெதுவாக இயங்கும், மரங்களில் அதன் கேபிள்கள் சிக்கிக்கொள்ளலாம் என்பது போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும், தற்போது, ரஷ்யா அவற்றை பரவலாக பயன்படுத்துகிறது. இதனால் யுக்ரேன் வீரர்கள் தங்களின் நிலைகளுக்கு செல்வதும், இடம் மாறுவதும் கூட சிரமமாகிவிட்டது.
படக்குறிப்பு, ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்துவதில் தற்போது ரஷ்யா முன்னணியில் உள்ளது என்றால் யுக்ரேன் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கிறது.ரஷ்யாவின் புதிய ஆயுதம் யுக்ரேன் வீரர்களை ஒரே இடத்தில் முடக்குவது எப்படி?
“ஒரு நிலைக்குள் நுழையும்போது, உங்களை யாராவது பார்த்துக் கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அது உங்கள் வாழ்க்கையின் இறுதியான நேரமாக இருக்கலாம்,” என்று 5வது தாக்குதல் படைப்பிரிவின் உளவுப் பிரிவின் தலைமை சார்ஜென்ட் ஓல்ஸ் கூறுகிறார்.
அதாவது, வீரர்கள் தங்கள் நிலைகளிலேயே அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.
ஓல்ஸும் அவரது ஆட்களும் காலாட்படையில் உள்ளனர், இவர்கள் யுக்ரேன் படைப் பிரிவின் முன் வரிசையில் பணியாற்றுகின்றனர். தற்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் காலாட்படை வீரர்களிடம் பேசுவது அரிதாகிவிட்டது, ஏனெனில் அங்கே செல்வது மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. தற்காலிக தளமாக மாற்றப்பட்டுள்ள ஒரு கிராமப்புற வீட்டில், ஓல்ஸ் மற்றும் மாக்சிமை நாங்கள் சந்தித்தோம், பணியில் இல்லாதபோது வீரர்கள் அங்கு தான் ஓய்வெடுக்கிறார்கள்.
“அந்த நிலையில் நான் அதிகபட்சம் 31 நாட்கள் இருந்திருக்கிறேன், ஆனால் 90 மற்றும் 120 நாட்கள் அங்கேயே கழித்தவர்களும் உண்டு. இந்த டிரோன்கள் வருவதற்கு முன்பு, சுழற்சி அடிப்படையில் நாங்கள் 3 முதல் 7 நாள்கள் வரை மட்டுமே இருந்திருக்கிறோம்,” என்று மாக்சிம் கூறுகிறார்.
“போர் என்பது ரத்தம், மரணம், ஈரமான சேறு மற்றும் தலை முதல் கால் வரை பரவும் குளிர் என மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிகிறது. மூன்று நாட்கள் தூங்காமல், ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருந்த சந்தர்ப்பமும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, ரஷ்யர்கள் அலைஅலையாக எங்களை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். நாங்கள் செய்யும் சிறிய ஒரு தவறு கூட எங்கள் மரணத்திற்கு காரணமாகும்.”
ரஷ்யாவின் காலாட்படை அதன் தந்திரோபாயங்களை மாற்றியிருப்பதாக ஓல்ஸ் கூறுகிறார். “முதலில் குழுக்களாக வந்து தாக்கிய அவர்கள், இப்போது சில சமயங்களில் ஓரிருவரை மட்டுமே அனுப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள்களையும், சில சந்தர்ப்பங்களில், குவாட் பைக்குகளையும் பயன்படுத்துகிறார்கள்.”
இதன் பொருள் என்னவென்றால், போர் முனையில் இனிமேல் ஒரு புறத்தில் யுக்ரேனியர்களையும் மறுபுறம் ரஷ்யர்களையும் கொண்ட பாரம்பரிய போர் முறை இருக்காது. சதுரங்கப் பலகையில் உள்ள கட்டங்கள் போன்று, இரு தரப்பின் நிலைகளும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாங்கள் செய்யும் சிறிய ஒரு தவறு கூட எங்கள் மரணத்திற்கு வழிவகை செய்யும் என்று யுக்ரேனிய வீரர்கள் தெரிவிக்கின்றனர் தனிப்பட்ட பிரச்னைகள்
ரஷ்யா அண்மையில் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், போக்ரோவ்ஸ்க் அமைந்துள்ள டொனெட்ஸ்க் பகுதி முழுவதையும் கைப்பற்றுவது துரிதமானதாகவோ அல்லது சுலபமானதாகவோ இருக்காது.
யுக்ரேன் மோசமாக பின்வாங்கியுள்ளது, சண்டையைத் தொடர வேண்டுமானால், அதற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
போர் நான்காவது கோடைக்காலத்திற்குள் நுழையும் போது, மிகப் பெரிய ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக யுக்ரேனின் குறைந்த அளவிலான வீரர்களின் எண்ணிக்கையும் அதற்கு பிரச்னையாக இருக்கும். நாங்கள் சந்தித்த பெரும்பாலான வீரர்கள் போர் தொடங்கிய பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சில மாத பயிற்சியே அளிக்கப்பட்டது, ஆனால் கடுமையான போருக்கு நடுவில், அனுபவத்திலேயே நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ராணுவத்தில் சேருவதற்கு முன்பு பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் மாக்சிம். அவரது குடும்பத்தினர், அவரது வேலையை எப்படி சமாளிக்கின்றனர் என்று கேட்டேன்.
அதற்கு பதிலளித்த மாக்சிம், “மிகவும் கடினமானது, இது மிகவும் கடினமானதுதான். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. எனக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான், அவனை பார்க்க முடியவில்லை. அவனுக்கு வீடியோ கால் செய்கிறேன், இந்த சூழ்நிலையில் அதுதான் முடியும்… பரவாயில்லை,” என்று கண்களில் நீர்மல்க சொல்கிறார்.
தனது நாட்டிற்காகப் போராடும் மாக்சிம் ஒரு சிப்பாய், ஆனால் அவர் தனது இரண்டு வயது மகனை அருகில் இருந்து கொஞ்ச முடியாத ஒரு தந்தையும் கூட.
கூடுதல் தகவல்: இமோஜென் ஆண்டர்சன், சஞ்சய் கங்குலி, வோலோடிமிர் லோஷ்கோ மற்றும் அனஸ்டாசியா லெவ்செங்கோ
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு