பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (29.05.25) புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்

கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார்.

அதன் போது, கரந்தாய் பகுதியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விருந்துக்கு பின் பேருந்தில் இரத்த வாந்தி திருமலை வாசி மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்து விட்டு பேருந்தில் திரும்பிய திருகோணமலை வாசி , பேருந்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

அன்புவெளிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு வந்து விட்டு , மீண்டும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் திருகோணமலை நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார்

அதன் போது, சாவகச்சேரி பகுதியை அண்மித்த போது , பேருந்தினுள் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து , அவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.