டிரம்பின் வரி விதிப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை – வரி வசூலிப்பில் உடனடி மாற்றம் இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ்பதவி, வணிக நிருபர், பிபிசி செய்திகள்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவரது பொருளாதாரக் கொள்கைகளின் முக்கிய அங்கமான வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, அதிபர் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அதிபர் டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்திய அவசரச் சட்டம், கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகள் மீதும் ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கவில்லை என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் பிரத்யேக அதிகாரம், அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும், பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான அதிபரின் அதிகாரம் அந்த உரிமையை மீற முடியாது என்றும் மன்ஹாட்டனைத் தளமாகக் கொண்ட அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு வெளியானதும் டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களும் சட்டவிரோத குடியேறிகளும் அதிக அளவில் நுழைவதாக கூறிய டிரம்ப் நிர்வாகம், இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பிறகு சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதித்த தனித்தனியான வரிகளையும் நீதிமன்றம் தடை செய்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Reuters

தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும்

“தேசிய அவசர நிலையை எவ்வாறு சரியாகக் கையாள வேண்டும் என்பதைக் தீர்மானிப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் பொறுப்பல்ல,” என வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அதிபர் டிரம்ப் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவதாக உறுதியளித்தார். இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், அமெரிக்க மகத்துவத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், நிர்வாக அதிகாரத்தின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் 5 சிறு வணிகங்கள் சார்பில், பாரபட்சமற்ற ‘லிபர்ட்டி ஜஸ்டிஸ் சென்டர்’ தாக்கல் செய்த இந்த வழக்கு, டிரம்ப் முன்வைத்த “விடுதலை நாள்” வரிகளுக்கு எதிரான முதல் முக்கியமான சட்ட சவாலாக உள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 12 மாகாணங்களில் ஒன்றான நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

“சட்டம் தெளிவாக உள்ளது. எந்தவொரு அதிபருக்கும் தாங்கள் விரும்பும் போதெல்லாம் தனியாக வரிகளை உயர்த்த அதிகாரம் இல்லை” என்று கூறிய லெட்டிடியா ஜேம்ஸ், “இந்த வரிகள் உழைக்கும் குடும்பங்கள் மற்றும் அமெரிக்க வணிகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி உயர்வு. இதைத் தொடர அனுமதித்திருந்தால், அதிகமான பணவீக்கம், அனைத்து வணிகங்களுக்கும் பொருளாதார சேதம் மற்றும் நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்பட வழிவகுத்திருக்கும்” என்றும் தெரிவித்தார்.

வரி வசூலிப்பில் உடனடி மாற்றம் இருக்குமா?

நீதிமன்றத்தின் தீர்ப்பின் உடனடி தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை.

இந்த வழக்கு மேல்முறையீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். டிரம்ப் நிர்வாகம் தனது மேல்முறையீட்டில் தோல்வியுற்றால், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம் (CBP) அதன் அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று CBP இன் முன்னாள் உயர் அதிகாரி ஜான் லியோனார்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்காவின் உயர் நீதிமன்றங்கள் டிரம்பிற்கு மிகவும் சாதகமாக இருக்கலாம்.

ஆனால் அனைத்து நீதிமன்றங்களும் இந்த தீர்ப்பை உறுதி செய்தால், வணிக நிறுவனங்கள் இதுவரை செலுத்திய தொகைக்கு வட்டியுடன் பணத்தைத் திரும்பப் பெறும். இவற்றில் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படுபவை அடங்கும், அவை தற்போது பெரும்பாலான நாடுகளுக்கு 10% ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. சீனப் பொருட்களுக்கு 145% ஆக உயர்த்தப்பட்டது, பின்னர் அந்த வரி விதிப்பு 30% என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டது.

எல்லையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், வரிகள் இன்னும் செலுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் லியோனார்ட் கூறினார்.

எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரிகள் இந்த தீர்ப்பால் பாதிக்கப்படவில்லை, ஏனெனில் அவை வேறுபட்ட சட்டத்தின் கீழ் வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

“வர்த்தகப் போரின் எல்லை மீறிய தன்மையால் தூண்டப்பட்டு, பல வாரங்களாக நீடித்த நிலையற்ற தன்மைக்குப் பிறகு முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதை சந்தை எதிர்வினைகள் ஓரளவு காட்டுகின்றன” எஸ்.பி.ஐ. சொத்து மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் இன்னெஸ் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்க நீதிபதிகள் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர். ஓவல் அலுவலகம் ஒரு வர்த்தக மேசை அல்ல, அரசியலமைப்பு ஒரு வெற்று காசோலை அல்ல.” என்று இன்னெஸ் கூறினார்.

பட மூலாதாரம், EPA

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் பற்றி நீதிபதிகள் கூறியது என்ன?

டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிரான ஏழு சட்ட சவால்களில் ஒன்றாக இந்த வழக்கு உள்ளது. இதனுடன் சேர்த்து, 13 அமெரிக்க மாகாணங்களும், பிற சிறு வணிகக் குழுக்களும் வழக்கு தொடர்ந்துள்ளன.

1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) இந்த வரிகளை விதிக்க உதவியதாக டிரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இத்தகைய விரிவான அளவில் வரி விதிப்பதற்கான அதிகாரத்தை, அந்தச் சட்டம் (IEEPA) அவருக்கு வழங்கவில்லை என இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்தது.

“உலகளாவிய மற்றும் பழிவாங்கும் வகையிலான வரி உத்தரவுகள், இறக்குமதிகளை வரிகளின் மூலம் கட்டுப்படுத்த சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) மூலம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லையை மீறுகின்றன. அந்த உத்தரவுகளில் குறிப்பிடப்பட்ட அச்சுறுத்தல்களை சரியாக கையாளாததால், இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்ததாகக் கருதப்படுகின்றன,” என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி, டிரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்தார்.

அதன் பின்னர் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் சில வரி விதிப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு, உலக நிதி சந்தைகள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

இன்று (வியாழக்கிழமை) காலை ஆசியாவில் பங்குச் சந்தைகள் உயர்ந்தன, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சுமார் 1.5% உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் ASX 200 குறியீடும் சற்று உயர்ந்தது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்க பங்குகளின் எதிர்கால ஒப்பந்தங்களும் (US stock futures ) உயர்ந்தன.

எதிர்கால ஒப்பந்தங்கள் என்றால், எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வாங்க அல்லது விற்க ஏற்பாடு செய்யும் ஒப்பந்தங்கள்.

இவை, பங்குச் சந்தைகள் திறக்கும் நேரத்தில் அவை எவ்வாறு செயல்படலாம் என்பதை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு அறிகுறியாகவும் உள்ளன.

ஜப்பானிய யென் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற நாணயங்களுக்கு எதிராகவும் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு