படக்குறிப்பு, ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது” எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள்.

மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணியமர்த்திய முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் கூறுகிறார்.

குழந்தைத் தொழிலாளராக வைக்கப்பட்ட ஒன்பது சிறுவன் இறந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஒன்பது சிறுவன் கொத்தடிமையாக வைக்கப்பட்டாரா? சிறுவன் மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.15 ஆயிரம் கடனுக்கு பண்ணை வேலை

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரில் உள்ள சாவடபலேம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான அங்கம்மாள், சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம்.”

“ஒரு வருடத்துக்கு முன்பு நெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்குக் கொடுத்த கடன் தொகையைக் கேட்டார். இதை அறிந்து எனக்கு 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து முத்து உதவி செய்தார். இதற்கு ஈடாகத் தனது வாத்துப் பண்ணையில் எங்களைக் குடும்பத்துடன் வேலை பார்க்க வைத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

காலை முதல் இரவு வரை அதிக வேலைகள் கொடுக்கப்பட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள அங்கம்மாள், “எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதிக வேலைகளைக் கொடுத்தனர். ஆனால், சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்இதற்கிடையில், தனது கணவர் செஞ்சய்யா இறந்துவிடவே அதற்கான சடங்குகளைச் செய்துவிட்டு பணத்தைத் திரட்டி அனுப்புவதாக முத்துவிடம் அங்கம்மாள் கூறியுள்ளார்.

ஆனால், “42 ஆயிரம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஒன்று பணம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஒன்பது வயது மகனை பணத்துக்கு உத்தரவாதமாக வாத்துப் பண்ணையில் விட்டுச் செல்ல வேண்டும்” என முத்து கூறியதாக புகார் மனுவில் அங்கம்மாள் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது கடைசி மகனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு கூடூர் வந்ததாகக் கூறுகிறார், அங்கம்மாள்.

பிபிசி தமிழிடம் பேசிய அங்கம்மாள், “10 மாதங்களுக்குப் பிறகு (மே 15) பணத்தைத் திரட்டிக் கொண்டு மகனை மீட்கப் போனேன். அப்போது, என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, ’70 ஆயிரம் தர வேண்டும். அப்படியே பணம் கொடுத்தாலும் உன் மகனை அனுப்ப மாட்டேன்’ என முத்துவும் அவரது மனைவி தனபாக்கியமும் மிரட்டினர்” என்றார்.

வாத்து பண்ணையில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, வாத்துப் பண்ணை உரிமையாளர் முத்து “வாத்துப் பண்ணையில் என் மகன்கள் மிகவும் சிரமப்பட்டனர். வாத்துகளை வயலுக்குள் அழைத்துச் செல்லும்போது சேற்றில் நடந்து காலில் காயங்கள் ஏற்படும். வேலை செய்யாவிட்டால், கடுமையாகத் திட்டி அடிக்க வருவார்கள்” என்கிறார் அங்கம்மாள்.

தொடர்ந்து பேசிய அவர், “கையில் பணம் தர மாட்டார்கள். அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் குறைவாகத்தான் தருவார்கள். ஒரு கட்டத்தில் வெளியில் சென்று வேலை பார்த்து உங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் எனக் கூறியும் அவர்கள் விடவில்லை” என்கிறார்.

தனது மகனை மீட்டுத் தருமாறு சத்தியவேடு காவல் நிலையம் சென்ற அங்கம்மாள் அங்கு தனக்குத் தொடக்கத்தில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.

அதுகுறித்துப் பேசியபோது, “அங்கிருந்த போலீசார், இரண்டு நாள் அவகாசம் கேட்டனர். அங்கு சரியான பதில் கிடைக்காததால் கூடூர் எம்.எல்.ஏ பாசம் சுனில்குமார் மூலமாக உதவி கேட்டேன். அவர் காவல்துறைக்கு ஃபோன் செய்து பேசியதால் முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்” எனக் கூறுகிறார் அவர்.

“மே 21 அன்று முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஏப்ரல் 12 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர்” என்று சத்தியவேடு முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலாற்று படுகையில் சிறுவன் சடலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஆந்திராவின் சத்தியவேடு கிராமத்தில் இருந்து, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள தங்கள் உறவினரின் வீட்டுக்கு வாத்துகளை மேய்ப்பதற்காக சிறுவனை கூட்டிச் சென்றதாகவும் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இறப்பு குறித்து பெற்றோருக்குக் கூறாமல், காஞ்சிபுரம் மாவட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்துக்கு அருகில் உள்ள பாலாறு படுகையில் சிறுவனை அடக்கம் செய்தது விசாரணையின்போது தெரிய வந்ததாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், யாருக்கும் தெரியாமல் சடலத்தைப் புதைத்தது உள்படப் பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப் படுகையில் சிறுவனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் காவல் துறை தோண்டியெடுத்தது. அப்போது ஆந்திரா, தமிழ்நாடு என இரு மாநில காவல் துறையும் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

புத்தூர் டி.எஸ்.பி கூறியது என்ன?

ஆந்திர மாநிலம் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியபோது, “சிறுவனை கொடிய ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூராய்வு முடிவு கூறுகிறது. இதனால் கைதான மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மே 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மே 21 அன்று இந்த வழக்கில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் கைது செய்யப்பட்டனர். உடற்கூராய்வு முடிவுகளுக்குப் பிறகு இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

படக்குறிப்பு, புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார்அதன்படி, 103(1) BNS (Punishment for murder) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, சிறார் நீதிச் சட்டம் 2015, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 உள்படப் பல்வேறு பிரிவுகளில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனை ஆயுதங்களைக் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.

‘கைது செய்வதில் சிரமம் ஏற்படவில்லை’

“முதலில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக முத்து கூறியுள்ளார். ஆனால் கடுமையான சித்திரவதைக்குப் பிறகே சிறுவன் இறந்துள்ளார். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் ஆயுதத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்” எனக் கூறுகிறார், வழக்கை கவனித்து வரும் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர்.

“சிறுவன் காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவனிடம் அங்கம்மாள் பேசியுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என சிறுவன் கூறவில்லை. கடுமையான தாக்குதலுக்குப் பிறகே அவர் இறந்துள்ளார். அதைத்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.

“இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்வதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை” எனக் கூறுகிறார், புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார். “அவர்கள் மூன்று பேர் மீதும் சந்தேகம் இருப்பதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.

கூடூர் பகுதியில் ஏனாதி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அதிகம் வசிப்பதாகக் கூறிய ரவிக்குமார், “அங்கம்மாள் குடும்பம், மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. விவசாயப் பணிகள், வாத்து மேய்த்தல், மாடு மேய்த்தல் பணிகளில் மாத சம்பளத்துக்குத் தங்கி வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை,” என்றும் குறிப்பிட்டார்.

“முத்துவின் வாத்துப் பண்ணையில் எங்களைப் போல குடும்பமாக யாரும் வேலை செய்யவில்லை. நாங்கள் சென்றபோது, ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவரது பெற்றோர் பணம் கொடுத்து கூட்டிச் சென்றனர்” எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

‘அந்த வலி இன்னொருவருக்கு வரக் கூடாது’

இந்த வழக்கில் கூடூரை சேர்ந்த சிவா ரெட்டி என்பவர், அங்கம்மாள் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்துள்ளார்.

“அவரது எலுமிச்சம் பழத் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். பத்தாவது படிக்க வேண்டிய மகன், இடையில் வாத்துப் பண்ணையில் வேலை பார்த்ததால் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. விரைவில், அவர் தனது படிப்பைத் தொடரவுள்ளார். மகள், ஏழாவது படித்து வருகிறார்” எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

இதற்கான செலவை சிவா ரெட்டி பார்த்து வருவதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதாவதற்கு அவர் பல வகைகளில் உதவி செய்ததாகவும் அங்கம்மாள் குறிப்பிட்டார்.

“என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் பல மாதங்களாக ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது” எனவும் வேதனையுடன் கூறினார்.

‘இறந்தால் மட்டுமே வருகின்றனர்’

சிறுவன் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, “ஒரு குழந்தைத் தொழிலாளர் இறந்துவிட்டால் மட்டுமே அனைத்து உதவிகளும் செய்வதற்கு அரசுத் துறைகள் முன்வருகின்றன” எனக் கூறுகிறார்.

“கிராம குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்பட்டிருந்தால் சிறுவன் இறந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது” என விமர்சிக்கும் தேவநேயன் அரசு, “இக்குழுவினர், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அதை முறையாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது” என்கிறார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் “தமிழ்நாட்டில் மாட்டுப் பண்ணைகள், கல் குவாரிகளில் வேலை செய்வதற்கு வடமாநிலங்களில் இருந்து குடும்பமாக வருகின்றனர். அவர்களின் வாழ்வுநிலை குறித்தோ, குழந்தைகள் பணி செய்வது குறித்தோ அதிகாரிகள் சரி வர ஆய்வு நடத்துவதில்லை” எனவும் தேவநேயன் குற்றம் சாட்டினார்.

மேலும், “குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும். அவர்களும் ஆய்வு நடத்துவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கு வருவாய்த் துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், அது முறையாக நடப்பதில்லை” என்றார்.

அமைச்சர் சொல்வது என்ன?

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது.

அப்போது அவர், “ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எங்கள் கவனத்துக்குத் தகவல் தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்” எனக் கூறினார்.

சிறுவன் இறப்பு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு