Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா பதவி, பிபிசிக்காக17 நிமிடங்களுக்கு முன்னர்
ஆந்திரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு பறவையைத் தேடி வருகின்றனர். அந்தப் பறவையைக் கண்டுபிடிக்க ஆங்காங்கே கேமராக்களை வைத்துள்ளனர். குறைந்தபட்சம் அந்தப் பறவை எழுப்பும் ஒலியையாவது பதிவு செய்ய முடியுமா என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அருகிப்போன இந்த அரிய பறவையின் பெயர் கலிவிக்கோடி. தற்போது ஆந்திராவில் மட்டுமே இருப்பதாக கருதப்படும் இந்தப் பறவையை “கலிவிக்கோடி” என்று தெலுங்கில் அழைத்தாலும் இதன் அறிவியல் பெயர் ரைனோப்டிலஸ் பிடோர்குவாட்டஸ் என்பதாகும். பறவையியளாளர் தாமஸ் சி. ஜெர்டன் நினைவாக ஜெர்டன் கோசர் என்ற பெயரிலும் இந்தப் பறவை அறியப்படுகிறது.
கோதாவரி மற்றும் பென்னா நதிகளின் பள்ளத்தாக்குகளில் காணப்படும் இந்தப் பறவை, 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகு அருகிவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
1986 ஜனவரி முதல் வாரத்தில், ஐதன்னா என்ற உள்ளூர்வாசி ஒரு கலிவிக்கோடி பறவையைக் கண்டுபிடித்ததாகவும், மும்பையில் உள்ள BNHS எனப்படும் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அது இறந்துவிட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்துபோன பறவையின் உடல் தற்போது பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவைகளின் பட்டியலில் கலிவிக்கோடி பறவைஅதன் பிறகு, கலிவிக்கோடி பறவையை வேறு யாரும் பார்த்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், சில உள்ளூர்வாசிகள் YSR மாவட்டத்தின் (கடப்பா மாவட்டம்) ரெட்டிபள்ளி பகுதியின் காடுகளில் இந்தப் பறவையைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர், ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இருந்தபோதிலும், லங்காமல்லேஸ்வரா மற்றும் பெனுஷிலா நரசிம்ம சரணாலயங்களை கலிவிக்கோடி பறவையின் வாழ்விடங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கலிவிக் மரங்கள் இருக்கும் இடத்தில் இந்தப் பறவைக் காணப்படுவதால் இதற்கு கலிவிக்கோடி என்ற பெயர் வந்ததாக கடப்பா மாவட்ட வன அதிகாரி வினீத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
“கலிவிக்கோடி பறவை இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக நாங்கள் கேமராக்களை அமைத்துள்ளோம். அந்தப் பறவை இங்கே இருக்கிறது என உறுதியாக நம்புகிறோம். இந்தப் பறவை உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை. இந்தப் பகுதியில் மட்டுமே காணப்படுவதால், இது மிகவும் அரிதான பறவை வகைகளில் ஒன்று. இது பொதுவாக கலிவி மரங்களின் புதர்களில் காணப்படும், எனவே மரத்தின் பெயரிலேயே கலிவிக்கோடி என அவை அழைக்கப்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பறவை 1848 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரி தாமஸ் ஜெர்டனால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனால்தான் இந்தப் பறவை ஆங்கிலத்தில் ஜெர்டன்ஸ் கோர்சர் என்று அழைக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்திய அரசு கலிவிக்கோடி பறவையை “வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972” இன் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவைகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
கலிவிக்கோடியின் வாழ்விடமாக 464.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அடையாளம் காணப்பட்டுள்ளது. இது லங்கமல்லேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. பெனுஷிலா நரசிம்ம வனவிலங்கு சரணாலயத்திலும் 1,037 சதுர கிலோமீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர, வனத்துறையால் இழப்பீட்டு காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் சுமார் 3000 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. அது, கலிவிக்கோடி பறவைக்கான வாழ்விடமாக மட்டுமல்ல, சிறுத்தை, கடமான், புள்ளிமான் மற்றும் கருப்பு மான் ஆகியவை பாதுகாக்கப்படும் இடமாகவும் பராமரிக்கப்படுகிறது.
படக்குறிப்பு, சித்தாவட்டம் வனச்சரகப் பாதுகாவலர் கலாவதிகண்காணிப்பு ஏற்பாடுகள்
சித்தாவட்டம் வனச்சரகப் பாதுகாவலர் கலாவதி கூறுகையில், சித்தாவட்டம் மலைத்தொடரில் உள்ள ஸ்ரீலங்காமல்லேஸ்வரா மற்றும் பெனுஷிலா நரசிம்ம சரணாலயங்கள் கலிவிக்கோடியின் வாழ்விடங்கள் ஆகும்.
“இங்குள்ள காடு கலிவிக்கோடி பறவை வாழ்வதற்கு ஏற்றது. கடைசியாக 1986 இல் காணப்பட்ட கலிவிக்கோடி பறவையை அதன்பிறகு யாரும் காணவில்லை என்றாலும், வனத்துறை, பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் அதைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. தற்போது வனப்பகுதியில் 40 கேமராக்களை நிறுவியுள்ள வனத்துறை, அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது. ஆடியோ மார்ட் மூலம் அங்கு எழும் சத்தங்களையும் பதிவு செய்கிறோம்,” என்று வனச்சரகப் பாதுகாவலர் கலாவதி சொல்கிறார்.
உள்ளூர்வாசிகள் குற்றச்சாட்டு
இரவு நேரத்தில் சாலை மூடப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
“சாலை மூடப்படுவதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. சில விலங்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது கலிவிக்கோடியின் வாழ்விடமாகக் கூறப்படுகிறது. உண்மையில் கலிவிக்கோடியை கடைசியாக பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அவசரகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், என்ன செய்வது? சாலை திறந்திருந்தால் அனைவருக்கும் நல்லது. இந்தப் பிரச்னையை நாங்கள் பொதுப் பிரதிநிதிகளிடமும் எடுத்துச் சென்றுள்ளோம், ஆனால் எங்களுக்கு ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை” என்று ரெட்டிபள்ளேயைச் சேர்ந்த ஸ்ரீநாத் கூறினார்.
இருப்பினும், இரவில் வனவிலங்குகள் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, இரவில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், காட்டில் உள்ள மதிப்புமிக்க சிவப்பு சந்தன மரங்களைப் பாதுகாக்கவும் சாலை மூடப்படுவதாக கடப்பா டிஎஃப்ஓ வினீத் குமார் கூறுகிறார்.
சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கலிவிக்கோடி பறவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், அதன் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பறவையை கண்காணிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வருவதாக கடப்பா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சென்சார் அடிப்படையில் செயல்படும் ஐஆர் கேமராக்களை நாங்கள் நிறுவியுள்ளோம். அவற்றுடன், ஒரு ஆடியோ சாதனத்தையும் பொருத்தியுள்ளோம். இதன்மூலம் ஒரு விலங்கை பார்க்க முடியாவிட்டாலும் கூட அது எழுப்பும் ஒலியைப் பதிவு செய்யலாம். நாங்கள் அந்த ஆடியோ மாதிரிகளைச் சேகரித்து பின்னர் பகுப்பாய்வு செய்வோம். கால்தடங்களை பதிவு செய்வதற்காக பல்வேறு இடங்களில் மணல் பொறிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பறவை பெரும்பாலும் குட்டையான, கலிவி புதர்களில் வசிப்பவை ஆகும்.” என்று அவர்கள் கூறினர்.
ஒரு கையளவே உள்ள சிறிய பறவையை 40 ஆண்டுகளாக தேடுவது ஏன்?
“இந்தப் பறவை பறப்பதில்லை, நடந்து செல்பவை.” கலிவிக்கோடி மிகவும் சிறியது, ஒரு கையளவே உள்ள இந்தப் பறவை, என்.டி.ஆர் தொடங்கிய அவரது லட்சியத் திட்டமான தெலுங்கு கங்கா திட்டம் திசை திருப்பிவிடப்பட காரணமாக கூறப்படுகிறது. கலிவிக்கோடியைக் கண்டறிய மத்திய, மாநில அரசுகள் இணைந்து கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடுகின்றன.
அட்லூர் மண்டலத்தில் உள்ள அட்லூர் கொண்டூர், எஸ். வெங்கடபுரம், குஜ்ஜலவாரிபள்ளே, தம்பல்லாகொண்டி, எர்ரப்பள்ளி மற்றும் பிற கிராமங்களிலும், பத்வேலு மண்டலத்தில் உள்ள ராஜுபாலம், திப்பனபள்ளே மற்றும் பிற கிராமங்களிலும் உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலத்தை அரசாங்கம் வாங்கி, அவற்றை கலிவிக்கோடி பாதுகாப்பு சரணாலயத்துடன் இணைத்துள்ளது.
இப்படி கோடிக்கணக்காய் செலவு செய்தும், இந்தப் பறவை இப்போது இருக்கிறதா? அல்லது அழிந்துவிட்டதா? என்பதை இப்போது யாராலும் தெளிவாகக் கூறிவிட முடியாது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு