பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி அணியின் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா (வலது), லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் ரிஷப் பந்த்( இடது) எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடைசியாக ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்த இடங்களைப் பிடித்துள்ளன என்பது தெரிந்து, முதல் தகுதிச்சுற்றில் யார் விளையாடுவது என்பது முடிவாகியுள்ளது.

இதன்படி, லக்னெள அணியை ஆர்சிபி வென்றதையடுத்து, முதல் தகுதிச் சுற்றில் விளையாட ஆர்சிபி அணி தகுதி பெற்று, பஞ்சாப் அணியுடன் நாளை (29ஆம்தேதி) மோதுகிறது.

எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இதில் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

அதில் தோற்கும் அணிக்கு 2வது வாய்ப்பாக, எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் மோதி அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும்.

மூன்றாவது அதிகபட்ச சேஸிங்

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

முதலில் பேட் செய்த லக்னெள அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. 228 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச சேஸிங்காகும். 2024இல் பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்துள்ளது.

அதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு 204 ரன்களை ஆர்சிபி சேஸ் செய்திருக்கிறது. இந்நிலையில், 228 ரன்கள் என்பது ஆர்சிபியின் 3வது அதிகபட்ச சேஸிங்காகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்தின் முடிவில் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி அணியினர் ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா

ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகளில் சொந்த மைதானம் தவிர்த்து வெளி மைதானங்களில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் வென்ற ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. ஆர்சிபிக்கு இந்த சீசனில் 7 போட்டிகள் வெளி மைதானங்களில் நடந்தன. அவை அனைத்திலும் வென்றது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் விராட் கோலியின் 54 ரன்களும், கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் சேர்த்த 85 ரன்களும்தான். ஜிதேஷ் ஷர்மா 6வது வரிசைக்கும் கீழாகக் களமிறங்கி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

கடந்த 2019இல் ஹர்திக் பாண்டியா எடுத்த 91 ரன்களையும், 2018இல் ரஸல் எடுத்த 88 ரன்களையும் 6வது வரிசைக்கு கீழாகக் களமிறங்கி அடித்துள்ளனர்.

கோலியின் மைல்கல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 8வது அரைசதம் இது. கோலி அரைசதம் அடித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. அது மட்டுமின்றி 5வது சீசனாக கோலி 600 ரன்களுக்கும் மேலாகச் சேர்த்துள்ளார். கே.எல்.ராகுல் 4 முறை மட்டுமே 600 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக விராட் கோலி இதுவரை 9030 ரன்கள் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக முதல்முறையாக 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் வீரராக கோலி இருக்கிறார். அடுத்ததாக மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

ரிஷப் பந்த் லக்னெள அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்தப் போட்டி தவிர்த்து ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 61 பந்துகளில் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து லக்னெள ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ஆனால், ரிஷப் பந்தின் சதம் நேற்று வெற்றியாக மாறியிருந்தால் ஏதேனும் பலன் இருந்திருக்கும்.

ஜிதேஷ் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஜிதேஷ் ஷர்மா களமிறங்கும்போது ஆர்சிபி அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் கோலியை இழந்திருந்தது. அணி 123 ரன்களை எடுத்திருந்தது. 9 ஓவர்களில் வெற்றிக்கு 105 ரன்கள் சேர்க்க வேண்டியிருந்தது.

கோலி ஆட்டமிழந்த பின் மதில் மேல் பூனையாக ஆர்சிபி அணி இருந்தது. ஆனால் ஜிதேஷ் ஷர்மா களமிறங்கியவுடன் பவுண்டரியுடன் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். கடைசி 7 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 89 ரன்கள் தேவைப்பட்டன.

மயங்க் அகர்வாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்து சுறுசுறுப்பாக பேட் செய்து ரன்ரேட்டை உயர்த்தினார். ரூர்கே வீசிய ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர், பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து நம்பிக்கை பெற்றார்.

ஷாபாஸ் அகமது வீசிய 15வது ஓவரில் ஜிதேஷ் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடித்தார். மயங்க் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபியின் ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன.

ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக 22 பந்துகளில் ஜிதேஷ் அரைதம் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டன. ரூர்கே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி வெற்றியை நெருங்க வைத்தார் ஜிதேஷ் ஷர்மா. ஆயுஷ் பதோனி வீசிய 19வது ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மன்கட் அவுட் – ரிஷப் பந்தின் ஸ்போர்ட்மேன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

திக்வேஷ் ராதி வீசிய ஓவரில் அவர் பந்துவீசும் முன்பே நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த ஜித்தேஷ் ஷர்மா கிரீஸை விட்டு வெளியே சென்றார். இதைப் பார்த்த திக்வேஷ் ராதி மன்கட் ரன்அவுட் செய்து நடுவரிடம் அப்பீல் செய்தார்.

கள நடுவரும் 3வது நடுவருக்கு பரிந்துரைக்க டிவி ரீப்ளேவில் ஜிதேஷ் ஷர்மா மன்கட் அவுட்டில் ஆட்டமிழந்தார் என்பது தெரிந்தது. ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்து விடுவார் என்று எண்ணப்பட்டது. ஆனால் திடீரென நாட்-அவுட் என்று வந்தது.

கேப்டன் ரிஷப் பந்த் அவுட் வழங்க வேண்டாம், மன்கட் அவுட்டில் கிடைக்கும் அவுட் வேண்டாம் என்று நடுவரிடம் கூறியது அதன் பிறகே தெரிய வந்தது. இதை அறிந்ததும், ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ரிஷப் பந்தை கட்டி அணைத்து தோளில் தட்டிக்கொடுத்துச் சென்றார்.

ஒருவேளை ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்திருந்தால் ஆர்சிபி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும். ஆனால், ரிஷப் பந்த் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தி, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கோலி, சால்ட் வலுவான தொடக்கம்

விராட் கோலி, பில் சால்ட் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து 5.4 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார். விராட் கோலி 2வது ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசியதால் ரன்ரேட் எகிறியது. 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 50 ரன்களை எட்டியது.

ஆகாஷ் சிங் ஓவரில் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்து 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். சேஸிங் மாஸ்டராக விளங்கிய கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரன்ரேட் 11க்கு குறையாத வகையில் கொண்டு சென்றார்.

தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை விளாசியும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தும் கோலியின் ஆட்டம் உற்சாகமாக இருந்தது.

ஆனால், பட்டிதார் 14 ரன்னில் ரூர்கே ஓவரில் ஆட்டமிழந்ததும் அடுத்த பந்தில் லிவிங்ஸ்டோன் கால்காப்பில் வாங்கி வெளியேறியது ஆர்சிபி அணிக்கு சற்று அதிர்ச்சியளித்தது.

மயங்க் அகர்வால், கோலி கூட்டணி அணியை அந்தச் சரிவிலிருந்து மீட்டு மீண்டும் வெற்றியை நோக்கி நகர்த்தினர். கோலி 54 ரன்களில் ஆவேஷ் கானின் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த், மார்ஷ் பார்ட்னர்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி அணியின் பில் சால்ட் ஐபிஎல் சீசன் முழுவதும் 4வது அல்லது 5வது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் நேற்று 3வது வீரராகக் களமிறங்கி சதம் அடித்து 118 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடங்கும். அதிலும் ரிஷப் பந்த் சதம் அடித்தவுடன் மைதானத்தில் தலை குப்புற “பிரண்ட்ஃபிளிப் ஷாட்” அடித்துக் கொண்டாடினார்.

ரிஷப் பந்த் நேற்று தீர்மானத்துடன்தான் களமிறங்கினார், யஷ் தயால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், 2 பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். புவனேஷ்வர் ஓவரில் சிக்ஸர், லிவிங்ஸ்டோன் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து 29 பந்துகளில் ரிஷப்பந்த் அரைசதம் அடித்தார்.

நிதானமாக ஆடிய மார்ஷ், 23 பந்துகளில் 33 ரன்களுடன் இருந்தவர், ரிஷப் பந்தின் அதிரடியைப் பார்த்து அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அரைசதம் அடித்தார்.

ரிஷப் பந்த், மார்ஷ் ஜோடி 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். மார்ஷ் 67 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் ரிஷப் பந்த் காட்டிய அதிரடி தொடர்ந்தது. 54 பந்துகளில் சதம் அடித்த அவர் மைதானத்தில் தலைகுப்புற பல்டி அடித்து தனது சதத்தைக் கொண்டாடினார்.

‘என்னால் நம்ப முடியவில்லை’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் லக்னௌ அணியின் ரிஷப் பந்த் ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா பேசுகையில், “என் கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை. நான் இப்படி ஒர் ஆட்டம் ஆடுவேனா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விராட் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன்.

என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் கடைசி வரை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அனைத்து சுமைகளும் என் மீது இருந்தன. விராட், குர்னால், புவி ஆகியோருடன் ஒரு கேப்டனாக ஆடும் ஆட்டம் எனக்கு உற்சாகம் அளித்தது. இந்த தருணத்தை மகிழ்ச்சியாக்க விரும்பினேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், “சரிவிலிருந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினேன். இதே ஆட்டம் அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும், எனக்கு கேப்டன் வாய்ப்பளித்த பட்டிதாருக்கு நன்றி. நாக்-அவுட் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுவார், நாங்கள் மேட்ச் வின்னர்களாக உருவாகியுள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு