Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தங்கம் விலை 2030இல் பவுனுக்கு ரூ.1.80 லட்சத்தை எட்டுமா? முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒரு கிராம் தங்கத்தின் விலை 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று கணித்திருக்கிறதுஎழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2030ஆம் ஆண்டுவாக்கில் 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று கணித்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இடைக்காலத்தில் ஒரு அவுன்ஸ் (சுமார் 31.1 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 4,000 முதல் 5,000 டாலராகவும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது 8,900 டாலராகவும் உயரும் என சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கணித்திருக்கிறது. அதாவது, ஒரு அமெரிக்க டாலர் 83 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,751 ரூபாயை எட்டும். அதாவது ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 1.80 லட்சம் வரை உயரலாம் என்று அந்த அறிக்கை கணிக்கிறது.
லீக்கின்ஸ்டைனை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான இன்க்ரிமென்டம், சமீபத்தில் “Gold We Trust Report 2025” என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணங்களையும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வெகுவாக உயரும் என்ற கணிப்பிற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.
முக்கியமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.
அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லீக்கின்ஸ்டைனை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான இன்க்ரிமென்டம், சமீபத்தில் “Gold We Trust Report 2025” என்ற அறிக்கையை வெளியிட்டது.அதேபோல, நீண்ட காலமாக உலோகங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வந்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் தற்போது தங்கத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டில் ETF எனப்படும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்வதும் வெகுவாக அதிகரித்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இது தவிர, முதலீடுகள் அமெரிக்க சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்திற்கும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் செல்வது நடக்கிறது. பல நாடுகள், தங்கள் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உதாரணமாக ரஷ்யாவின் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் 8லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனா ஒவ்வொரு மாதமும் 40 டன் தங்கத்தை வாங்கும் என கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த தசாப்தத்தின் இறுதியில் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 8,900 டாலர் என்ற விலையைத் தொடும். இது ஆண்டுக்கு 19 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டின் இறுதியிலேயே ஒரு அவுன்சின் விலை 4,080 டாலர்களைத் தொடும் என்கிறது இந்த அறிக்கை. அதாவது ஒரு கிராம் 10,895 ரூபாயாக உயரும்.
அதே நேரத்தில் கடந்த ஏப்ரலில் வெளியான சர்வதேச நிதி சேவை நிறுவனமான ஜேபி மோர்கன், அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 4,000 டாலர் என்ற விலையைத் தொடும் என கணித்திருக்கிறது.
தங்கத்தின் விலை குறைய என்ன நடக்க வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்கிறது இன்க்ரிமென்டம் நிறுவன அறிக்கை.தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்கிறது இன்க்ரிமென்டம் நிறுவன அறிக்கை. அதாவது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் அளவைக் குறைக்க வேண்டும்.
அடுத்ததாக, யுக்ரேன் யுத்தம் முடிவுக்கு வரும் வகையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாவது, மத்திய கிழக்கில் உள்ள பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பது, அமெரிக்காவின் வர்த்தகப் போர் முடிவு வருவது போன்றவை நடந்தால் புவிசார் அரசியலில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். இது தங்கத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
இதையே குறிப்பிட்டுள்ள ஜேபி மோர்கன் ஆய்வறிக்கை, அதே நேரத்தில் திடீரென மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்தால் விலை வீழ்ச்சியடையும் அபாயத்தையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தத் தருணத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்ற கேள்வியும் இருக்கிறது.
நிரந்தர வைப்புத் தொகை, பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் என முதலீட்டாளர்கள் முன்பாகப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் மிகச் சிறந்த முதலீடுகள் என எடுத்துக் கொண்டாலும் 10-12 சதவிகித வருவாயே கிடைக்கும் என்ற நிலையில், தங்கம் 19 சதவிகித வளர்ச்சியைக் கொடுக்கும் என்கிறது இந்தக் கணிப்பு.
“எல்லா நாணயங்களுக்கும் எதிராக நிலையாக இருக்கக்கூடியது தங்கம் மட்டும்தான். ஒருவர் தனது முதலீட்டில் குறிப்பிட்ட அளவை தங்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன்” என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
“அப்போதுதான் ஒரு அவசரத் தேவை நேரிடும்போது அதை உடனடியாகப் பணமாக மாற்ற முடியும். தங்கத்தின் விலை குறைவாக இருந்தபோது, ஒருவர் குறைந்தது 400 கிராம் அளவுக்காவது தங்கம் வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. ஆகவே தற்போது, ஒருவர் குறைந்தது 200 கிராமாவது தங்கமாக வைத்திருக்க வேண்டும்” என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்கத்தைப் பொறுத்தவரை, அதன் விலை கடந்த ஓர் ஆண்டில் 75 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.தங்கத்தின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு இருந்தாலும், தங்கத்தை வாங்குபவர்கள் பல்வேறு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் முதலீட்டு ஆலோசகரான நாகப்பன் புகழேந்தி.
“தங்கத்தைப் பொறுத்தவரை, அதன் விலை கடந்த ஓர் ஆண்டில் 75 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆகவே எதிர்கால விலை உயர்வுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் தங்கத்தைப் பொறுத்தவரை வேறு பல விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய வங்கிகள் வாங்குவதால் விலை உயரும் எனக் கணிக்கிறார்கள். ஆனால், பிரச்னைகள் தீர்ந்து மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை நிறுத்தினாலோ, விற்றாலோ என்ன ஆகும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்” என்கிறார் நாகப்பன்.
கடந்த 2012இல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை தங்கத்திற்கு என்ன நேர்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார் அவர். அதாவது, 2012இல் 10 கிராம் தங்கம் 31,050 ரூபாயாக இருந்த நிலையில், 2015இல் சுமார் 26,300 ஆகக் குறைந்தது. பிறகு 2018ஆம் ஆண்டில்தான் மீண்டும் பத்து கிராமுக்கு 31 ஆயிரம் என்ற விலையை தங்கம் எட்டியது.
“ஆனால், 2012இல் டைட்டன் போன்ற ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால், 2018இல் அது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் நாகப்பன் புகழேந்தி.
முதலீட்டில் தங்கத்தின் பங்கு எவ்வளவாக இருக்க வேண்டும்?
படக்குறிப்பு, ஆனந்த் ஸ்ரீநிவாஸன்அப்படியானால், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
“ஒருவர் ஏற்கெனவே எவ்விதமான முதலீடுகளைச் செய்திருக்கிறார் என்பதை வைத்துத்தான் இதை முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஒருவரது முதலீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்தில் இருப்பது மிக அவசியம் என்பதை மட்டும் இந்தத் தருணத்தில் உறுதியாகக் குறிப்பிடலாம்” என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
நாகப்பன் புகழேந்தியைப் பொறுத்தவரை, நிதிசார்ந்த இடரை எதிர்கொள்வதற்கான ஒரு முதலீடாக (hedge) தங்கத்தைக் கருதலாம்.
“ஒரு குறிப்பிட்ட அளவு முதலீட்டை தங்கத்தில் செய்யலாம். தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்தால், அதன் ஒரு பகுதியை விற்று லாபத்தை எடுத்துவிட வேண்டும். பிறகு விலை குறையும்போது மீண்டும் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்” என்கிறார் அவர்.
உலகில் தனிநபர்கள் தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் 700 முதல் 800 டன் தங்கம் விற்பனையாகும் என உலக தங்க கவுன்சில் கணித்திருக்கிறது.
உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப்படி, 2023இல் 761 டன் தங்கம் விற்பனையானது. 2024இல் இது 802.8 டன்னாக உயர்ந்தது. அதேபோல, கடந்த இரு ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வதும் இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2023இல் 185.2 டன் தங்க மதிப்பிற்கு முதலீடு செய்யப்பட்டது. 2024இல் இது 239.4 டன் தங்கமாக உயர்ந்தது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு