Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சாவர்க்கர் இந்தியாவில் சிலருக்கு ஹீரோவாக, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
படக்குறிப்பு, சாவர்க்கர்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி செய்தியாளர்38 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் வந்திருந்த அந்த குஜராத்தி வைஷ்யரை அன்று இரவு உணவிற்கு அழைத்திருந்தார் சாவர்க்கர். அந்த விருந்தினரின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது உத்தி, ஆக்ரோஷமானது என்று சாவர்க்கரிடம் காந்தி கூறிக் கொண்டிருந்தார். ஆனால், சாவர்க்கர் அவரை இடைமறித்து, “முதலில் சாப்பிடுவோம்” என்றார்.
“அப்போது காந்தி மகாத்மா அல்ல. வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மட்டுமே. அதுவரை இந்தியா காந்தியுடைய கர்ம பூமியாக ஆகவில்லை,” என்று ‘The RSS-Icons of the Indian Right’ என்ற புத்தகத்தை எழுதிய நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.
சரி கதைக்கு வருவோம். “சாவர்க்கர் காந்திக்கு இரவு விருந்து அளித்தபோது, தான் இறைச்சியோ மீனோ சாப்பிடுவதில்லை என்று காந்தி மன்னிப்பு கேட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இறைச்சி சாப்பிடாமல் ஆங்கிலேயர்களின் வலிமைக்கு சவால் விடுவது எப்படி” என்று சாவர்க்கர் அவரைக் கேலி செய்தார். அன்று இரவு காந்தி தனது சத்தியாகிரக இயக்கத்திற்கு ஆதரவு ஏதும் பெறாமல் வெறும் வயிற்றுடன் சாவர்க்கரின் அறையை விட்டு வெளியே வந்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதே காந்தி, 1948ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியாக படுகொலை செய்யப்பட்ட ஆறாவது நாளில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், காந்தியைக் கொன்ற சதியில் ஈடுபட்டதற்காக மும்பையிலிருந்து கைது செய்யப்பட்டார். இருப்பினும், 1949ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில் சாவர்க்கர் ஹீரோவாகவும் அதேசமயம் வில்லனாகவும் பார்க்கப்படுகிறார். அது ஏன்? இனி வரப்போகும் சம்பவங்கள் உங்களுக்கு விடையளிக்கலாம்.
ஆர்எஸ்எஸ் இல்லாவிட்டாலும் ‘சங் பரிவாரில்’ மரியாதை
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பாரதிய ஜனசங்கத்தில் ஒருபோதும் உறுப்பினராக இல்லாத வீர் சாவர்க்கரின் பெயர் சங் பரிவாரில், மிகுந்த மரியாதையுடனும் கெளரவத்துடனும் சொல்லப்படுவது ஒரு முரண்பாடாகவே உள்ளது.
2000 ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசு சாவர்க்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’வை வழங்க அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு முன்மொழிவு அனுப்பியது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
“2014 ,மே 26 ஆம் தேதி நரேந்திர மோதி, பிரதமராகப் பதவியேற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு வீர் சாவர்க்கரின் 131வது பிறந்த ஆண்டு தினம் வந்தது. அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் தலை வணங்கி அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை, சாவர்க்கர் மிகவும் சர்ச்சைக்குரிய நபர் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்,” என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் குறிப்பிடுகிறார்.
“காந்தி படுகொலையில் சாவர்க்கர் மீது ஒரு வழக்கு இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் காந்தி கொலையை விசாரிக்க, கபூர் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் சாவர்க்கர் மீதான சந்தேகம் தீரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மோதி இதுபோன்ற ஒரு தலைவருக்கு பொதுவில் மரியாதை வழங்கியது, மிகவும் அடையாளப்பூர்வமான நடவடிக்கையாகும்.”
நாசிக் கலெக்டர் கொலை வழக்கில் கைது
பட மூலாதாரம், NILANJAN MUKHOPADHYAY
படக்குறிப்பு, நீலாஞ்சன் முகோபாத்யாயின் புத்தகம் ‘The RSS-Icons of the Indian Right’தனது அரசியல் கருத்துகளுக்காக சாவர்க்கர் புனேவிலுள்ள பெர்குசன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் 1910 ஆம் ஆண்டு, நாசிக் கலெக்டரின் கொலையில் தொடர்பு என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
“1910 இல், நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் கொலைக்காக சாவர்க்கரின் சகோதரர் முதலில் கைது செய்யப்பட்டார்,” என்று சாவர்க்கரைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ள நிரஞ்சன் தக்லே கூறுகிறார்.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியை லண்டனில் இருந்து சாவர்க்கர் தனது சகோதரருக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. ‘எஸ்.எஸ். மெளரியா’ என்ற கப்பல் மூலம் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அந்த கப்பல் பிரான்சில் உள்ள மார்ஸ் துறைமுகத்தில் ‘நங்கூரம் ‘ பாய்ச்சி நின்றுகொண்டிருந்தது. சாவர்க்கர் கப்பலின் கழிப்பறையின் ‘பாட் ஹோல்’ வழியாகக் கடலில் குதித்தார்.
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
படக்குறிப்பு, சாவர்க்கர்கடலில் குதித்த சாவர்க்கர்
“சாவர்க்கர் வேண்டுமென்றே தனது நைட் கவுனை அணிந்திருந்தார். உள்ளே இருக்கும் கைதியை கண்காணிக்கும் வகையில் கழிவறைகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சாவர்க்கர் தனது கவுனை கழற்றி அதன் மூலம் கண்ணாடியை மூடினார்,” என்று ‘பிரேவ்ஹார்ட் சாவர்க்கர்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய அஷூதோஷ் தேஷ்முக் குறிப்பிட்டார்.
“அவர் ஏற்கனவே கழிப்பறையின் ‘ பாட் ஹோலை’ அளந்திருந்தார். அதன் வழியாக வெளியேறலாம் என்று அவர் கணித்திருந்தார். தனது மெல்லிய உடலை அந்தத் துளைக்குள் இறக்கி கடலுக்குள் குதித்துவிட்டார்.”
” நாசிக்கில் அவர் எடுத்துக்கொண்ட நீச்சல் பயிற்சி அவருக்குக் கை கொடுத்தது. அவர் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை நோக்கிச் சுட்டனர். ஆனால் அவர் தப்பித்துவிட்டார்.”
பாதுகாப்பு அதிகாரிகளின் காவலில்
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
படக்குறிப்பு, 1910, மார்ச் 13 ஆம் தேதி விக்டோரியா நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட சாவர்க்கரின் படம்”நீந்தும்போது, சாவர்க்கருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பாதுகாப்பு அதிகாரிகளும் கடலில் குதித்து நீந்தி அவரைத் துரத்த ஆரம்பித்தனர்” என்று தேஷ்முக் எழுதுகிறார்.
“சாவர்க்கர் சுமார் 15 நிமிடங்கள் நீந்தி கரையை அடைந்தார். கரையோரம் வழுக்கலாக இருந்தது. முதல் முறை அவர் வழுக்கினார். ஆனால் இரண்டாவது முயற்சியில் தரையை அடைந்தார். வேகமாக ஓடத் தொடங்கி சுமார் 450 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்தில் கடந்தார்.”
“அவருடைய இருபுறமும் டிராம்களும் கார்களும் ஓடிக்கொண்டிருந்தன. சாவர்க்கர் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார். அப்போது அவர் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தார். சாவர்க்கர் அவரிடம் சென்று, “அரசியல் புகலிடத்திற்காக என்னை மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று ஆங்கிலத்தில் கூறினார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து ஓடி வந்த பாதுகாப்புப் பணியாளர்கள், ‘திருடன், திருடன், அவரைப் பிடியுங்கள்’ எனச் சத்தம் போட்டனர். சாவர்க்கர் தொடர்ந்து ஓட முற்பட்டார். ஆனால் பலர் ஒன்று சேர்ந்து அவரைப் பிடித்துவிட்டனர்.
செல்லுலார் ஜெயில் செல் எண். 52
இப்படியாக சாவர்க்கரின் சுதந்திரம் சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவர் ஏதோ ஒரு வடிவத்தில் ஆங்கிலேயர்களின் கைதியாக இருந்தார்.
அவருக்கு தலா 25 ஆண்டுகள் என இரண்டு தனித்தனி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் தண்டனையை அனுபவிக்க இந்தியாவிலிருந்து அந்தமானுக்கு அதாவது ‘காலா பானிக்கு’ அனுப்பப்பட்டார்.
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
அவர் 698 அறைகள் கொண்ட செல்லுலார் சிறையில், 7.5 அடிக்கு 13.5 அடி, செல் எண் 52 இல் வைக்கப்பட்டார்.
அங்குள்ள சிறை வாழ்க்கையைப் பற்றி அஷூதோஷ் தேஷ்முக் வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார், “அந்தமானில் அரசு அதிகாரிகள் வண்டிகளில் செல்வார்கள். அரசியல் கைதிகள் இந்த வண்டிகளை இழுப்பார்கள்.”
“நல்ல சாலைகள் இல்லை, நிலப்பரப்பு மலைப்பாங்கானது. கைதிகள் வண்டிகளை இழுக்க முடியாதபோது, அவர்களை மோசமான வார்த்தைகளால் ஏசுவார்கள். அவர்களை அடிப்பார்கள்.”
“இதுதவிர, ‘க்வினைன்’ குடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அது அவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தியது. சிலருக்கு வாந்தி மற்றும் சிலருக்கு கடுமையான வலி ஏற்பட்டது.”
நின்ற நிலையில் கை மற்றும் கால் விலங்குகள்
“எல்லா கைதிகளையும் கழிப்பறைக்கு அழைத்துச் செல்ல ஒரு குறிப்பிட்ட நேரம் இருந்தது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேர வரம்பு மட்டுமே கழிப்பறைக்குள் இருக்கலாம்,” என்று தேஷ்முக் மேலும் எழுதுகிறார்.
“சில நேரங்களில் கைதி தனது சிறை அறையின் ஒரு மூலையில் மலம் கழிக்க வேண்டியிருக்கும்.”
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
“சிறை அறையின் சுவர்களில் மலம் மற்றும் சிறுநீர் நாற்றம் வீசியது. சிலநேரங்களில் கைதிகள், நின்றபடி கை மற்றும் கால் விலங்குகள் பூட்டப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.”
“அந்த நேரத்தில் அவர் நின்றுகொண்டே கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. வாந்தி எடுத்தாலும் உட்கார அனுமதிக்கப்படவில்லை.”
ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கோரல்
ஆனால் இங்கிருந்து தொடங்குகிறது சாவர்க்கரின் இரண்டாவது வாழ்க்கை. 9 ஆண்டுகள் 10 மாதங்கள் செல்லுலார் சிறை வாழ்க்கை, ஆங்கிலேயர்கள் மீதான சாவர்க்கரின் எதிர்ப்பை அதிகரிக்காமல் அதை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.
“நான் சாவர்க்கரின் வாழ்க்கையைப் பல பகுதிகளாகப் பார்க்கிறேன். அவரது வாழ்க்கையின் முதல் பகுதியில் அவர் புரட்சியை நேசிப்பவராக இருந்தார். அப்போது அவர் 1857 விடுதலைப் போர் பற்றிய புத்தகத்தை எழுதினார். இதில் அவர் மதச்சார்பின்மையை மிகவும் நல்ல வார்த்தைகளில் ஆதரித்தார்,” என்று நிரஞ்சன் தக்லே கூறுகிறார்.
மேலும், “கைது செய்யப்பட்ட பிறகு அவர் யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்தித்தார். 1911, ஜூலை 11 ஆம் தேதி, சாவர்க்கர் அந்தமானை அடைந்தார். ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதாவது அவர் அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் தனது முதல் மன்னிப்பை எழுதினார். இதற்குப் பிறகு 9 ஆண்டுகளில் அவர் ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்புக் கடிதம் கொடுத்தார்.
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
“ஒவ்வொரு மாதமும் அங்கு மூன்று அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று சிறை பதிவுகள் கூறுகின்றன. மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடம் அவரது அறைக்கு கீழே இருந்தது. இது சாவர்க்கரை பாதித்திருக்கலாம். ஜெயிலர் பேரி, சாவர்க்கருக்கு பல சலுகைகளை வழங்கியதாக சில வட்டாரங்களில் கூறப்படுகிறது.”
மற்றொரு கைதியான பரிந்திர கோஷ், “சாவர்க்கர், எங்களை ஜெயிலருக்கு எதிராகப் போராட்டம் நடத்த ரகசியமாகத் தூண்டினார். ஆனால் எங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தருமாறு நாங்கள் அவரைக் கேட்டால், அவர் பின்வாங்கிவிடுவார். அவருக்கு மிகவும் கடினமான வேலைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை,” என்று பின்னர் எழுதினார்.
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
“ஒவ்வொரு 15 நாட்களிலும் கைதியின் எடை பார்க்கப்பட்டது. சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு வந்தபோது, அவர் 112 பவுண்டுகள் இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினால்ட் கிராடாக்கிடம் தனது நான்காவது மன்னிப்பு கடிதத்தை அளித்தபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக இருந்தது. அவர் சிறையில் இருந்தபோது 14 பவுண்டுகள் எடை கூடினார்,” என்று நிரஞ்சன் தக்லே கூறுகிறார்.
“தன்னிடம் இரக்கம் காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு சிறைக்கு அனுப்புமாறும் அவர் அரசை கேட்டுக் கொண்டார். அதற்கு ஈடாக, எந்த மட்டத்திலும் அரசுக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.”
“பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மீது தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் தான் இப்போது வன்முறை பாதையைக் கைவிட்டு விட்டதாகவும் சாவர்க்கர் கூறியிருந்தார். இதன் விளைவாக, சாவர்க்கருக்கு, 1919 ஆம் ஆண்டு மே மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில், தனது மனைவி மற்றும் இளைய சகோதரரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.”
சிறைக்கு வெளியே இருக்க உருவாக்கப்பட்ட உத்தி
படக்குறிப்பு, இந்திரா காந்தி கலாசார மையத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான ராம் பகதூர் ராய், பிபிசி அலுவலகத்தில் ரெஹான் ஃபசல் உடன்பின்னர் சாவர்க்கரும் அவரது ஆதரவாளர்களும் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை நியாயப்படுத்தினர். சில சலுகைகளைப் பெறுவதற்கான தங்கள் உத்தியின் ஒரு பகுதி இது என்று அவர்கள் கூறினர்.
சாவர்க்கர் தனது சுயசரிதையில், “நான் சிறையில் போராட்டம் நடத்தியிருந்தால், இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கான எனது உரிமை பறிக்கப்பட்டிருக்கும்,” என்று எழுதினார்.
மன்னிப்பு கேட்கும் வழி பகத் சிங்குக்கும் இருந்தது, ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது சாவர்க்கர் ஏன் இதைச் செய்யவேண்டும் என்று மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலாசார மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராயிடம் நான் கேட்டேன். அதற்கு பதிலளித்த ராம் பகதூர் ராய், “பகத் சிங்குக்கும் சாவர்க்கருக்கும் இடையே மிக அடிப்படையான வேறுபாடு உள்ளது. பகத்சிங் வெடிகுண்டு வீச முடிவு செய்த அன்றே தூக்குக் கயிறு வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். மறுபுறம் வீர் சாவர்க்கர் ஒரு புத்திசாலி புரட்சியாளர்.”
“தலைமறைவாக இருந்து கொண்டு எத்தனை பணிகளைச் செய்ய முடியுமோ அத்தனை நல்லது என்று அவர் கருதினார். மன்னிப்பு கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்ற வலையில் சாவர்க்கர் விழவில்லை என்று நான் நம்புகிறேன். சிறைக்கு வெளியே இருந்தால் தான் செய்ய நினைப்பதைச் செய்ய முடியும் என்று அவர் கருதினார்.”
சாவர்க்கரின் இந்துத்துவ கருத்து
படக்குறிப்பு, பிபிசி ஸ்டூடியோவில் நீலாஞ்சன் முகோபாத்யாய்அந்தமானில் இருந்து திரும்பி வந்த பிறகு, சாவர்க்கர் ‘இந்துத்வா – ஹூ இஸ் ஹிந்து?’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் முதன்முறையாக இந்துத்துவாவை அரசியல் சித்தாந்தமாக அவர் பயன்படுத்தினார்.
நிலஞ்சன் முகோபாத்யாய் விளக்குகிறார், “அவர் இந்துத்துவாவை அரசியல் பிரகடனமாகப் பயன்படுத்தினார். இந்துத்துவாவின் வரையறையை அளித்து, இந்த நாட்டின் மனிதன், அடிப்படையில் ஒரு இந்து என்று கூறுகிறார். தந்தை பூமி, தாய் பூமி மற்றும் புண்ணிய பூமி ஆகிய மூன்றுமே இந்த நாடாக இருப்பவன்தான் இந்த நாட்டின் குடிமகன்,” என்று அவர் கூறுகிறார்.
“தந்தை, தாய் பூமி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் புண்ணிய பூமி என்பது இந்துகள், சீக்கியர், பௌத்தர் மற்றும் ஜைனர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த நாட்டின் குடிமகனாக இருக்கமுடியாது. அவர்கள் இந்துவாக மாறினால்” இது சாத்தியம்,” என்று சாவர்க்கர் கூறுகிறார்.
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
ஆங்கிலேயருடன் ஒப்பந்தம்
கடந்த 1924ஆம் ஆண்டு, இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் சாவர்க்கர் புனேவிலுள்ள ஏரவாடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அந்த நிபந்தனைகளில் ஒன்று, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டார், இரண்டாவதாக, ரத்தினகிரி மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல மாட்டார்.
“காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதே தங்கள் இருவருக்கும் உள்ள பொதுவான நோக்கம் என்று வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்தார்,” என்று நிரஞ்சன் தக்லே விளக்குகிறார்.
ஆங்கிலேயர்கள் அவருக்கு மாதம் அறுபது ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினர். இதுபோல ஓய்வூதியம் பெற்ற ஒரே நபர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வூதியம் பெற, ஆங்கிலேயர்களுக்கு அவர் என்ன சேவை செய்தார்?
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
கருப்பு தொப்பி மற்றும் வாசனை திரவிய பாட்டில்
தீவிர கருத்துகள் இருந்தபோதிலும், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல விஷயங்களை ரசித்தார். அவர் சாக்லேட் மற்றும் ‘ஜிண்டன்’ ப்ராண்ட் விஸ்கியை விரும்பினார்.
“சாவர்க்கரின் உயரம் 5 அடி 2 அங்குலம். அந்தமான் சிறையில் இருந்தபோது அவரது தலைமுடி கொட்டிவிட்டது. மூக்குபொடி போடும் பழக்கம் அவருக்கு இருந்தது. அந்தமான் சிறை அறையில், புகையிலைக்குப் பதிலாக சிறைச் சுவர்களில் இருக்கும் சுண்ணாம்பைச் சுரண்டி, அதை முகர்வார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது,” என்று அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் அஷூதோஷ் தேஷ்முக் எழுதுகிறார்,
“அவர் சிகரெட் மற்றும் சுருட்டுகளைக் கூட புகைக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை. அவர் எப்போதாவது மது அருந்துவார். அவர் காலை உணவாக இரண்டு வேகவைத்த முட்டைகளைச் சாப்பிட்டார் மற்றும் ஒரு நாளைக்கு பல கப் தேநீர் அருந்தினார். அவர் காரமான உணவுகளை, அதிலும் குறிப்பாக மீன் உணவை விரும்பினார்,” என்கிறார் அவர்.
“அவருக்கு அல்ஃபான்சோ மாம்பழம், ஐஸ்கிரீம், சாக்லேட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் ஒரே மாதிரியான உடையில்தான் இருப்பார். வட்டமான கருப்பு தொப்பி, வேட்டி அல்லது பேண்ட், கோட், கோட் பாக்கெட்டில் ஒரு சிறிய ஆயுதம், ஒரு பர்ஃப்யூம் பாட்டில், ஒரு கையில் ஒரு குடை, மற்றொரு கையில் ஒரு மடிந்த செய்தித்தாள்!”
மகாத்மா காந்தி கொலை தொடர்பாக கைது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மகாத்மா காந்தி, 1948, ஜனவரி 30 ஆம் தேதி நத்துராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் 1949ஆம் ஆண்டு வேறு எட்டு பேருடன் சாவர்க்கரும் கைது செய்யப்பட்டபோது அவரது பிம்பம் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
“ஒட்டுமொத்த சங் பரிவாருக்கும் காந்தியின் கொலைக் கறையை அகற்ற நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார். பின்னர் விடுதலையாகி 1966 வரை வாழ்ந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை,” என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.
“ஆர்.எஸ்.எஸ் கூட அவரிடமிருந்து விலகிச் சென்றது. அவர் எப்போதும் ஓரங்கட்டப்பட்டவராகவே இருந்தார். ஏனெனில் காந்தி கொலையில் சந்தேகத்தின் நிழல் அவரை விட்டு விலகவில்லை. சாவர்க்கருக்குத் தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை என்று கபூர் கமிஷன் அறிக்கை தெளிவாகக் கூறியுள்ளது.”
பட மூலாதாரம், Nana Godse
படக்குறிப்பு, நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நத்துராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே(இடமிருந்து வலம் அமர்ந்திருப்பவர்கள்) திகம்பர் பட்கே, மதன்லால் பஹ்வா (வலதுபுறம் நிற்பவர்கள்). கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடது புறம் நிற்பவர்கள்)சாவர்க்கரின் அரசியல் சித்தாந்தம்
சாவர்க்கரின் வாழ்க்கையின் கடைசி இரண்டு தசாப்தங்கள் அரசியல் தனிமையிலும் தோல்வியிலும் கழிந்தது.
அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஞ்சய் கீர், ‘சாவர்க்கர் அண்ட் ஹிஸ் டைம்ஸ்’ என்ற வாழ்க்கை வரலாற்றில், “செங்கோட்டையில் நடந்த விசாரணையில், நத்துராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தவுடன், குற்றம் சாட்டப்பட்ட சிலர் சாவர்க்கரின் காலடியில் விழுந்து,
“இந்து – இந்தி – ஹிந்துஸ்தான்
கபி ந ஹோகா பாகிஸ்தான் (பாகிஸ்தான் ஒருபோதும் இருக்காது) எனக் கூச்சலிட்டனர்,” என்று எழுதியுள்ளார்.
“உண்மையில், கடைசி நாட்களில் அவர் மீது சுமத்தப்பட்ட களங்கம் சாவர்க்கரின் பாரம்பரியத்தின் மீது இருள் மேகத்தை ஏற்படுத்தியது. ஒரு கவிஞராகவும் இலக்கியவாதியாகவும் நல்ல எழுத்தாளராகவும் இருந்த ஒரு புரட்சியாளர் அவர். இதுபோல உலகில் வேறு யாரும் இருந்ததில்லை,” என்று ராம் பகதூர் ராய் கூறுகிறார்.
“அந்தமான் சிறையில் இருந்தபோது, சுவரில் 6000 கவிதைகளை கல் துண்டுகளால் எழுதி, அதை மனப்பாடம் செய்தார். இதுமட்டுமின்றி, ஐந்து புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். ஆனால் இதையும் மீறி, மகாத்மா காந்தி கொலையுடன் சாவர்க்கர் இணைக்கப்பட்டபோது அவரது இருப்பு முடிந்து போகிறது. அவரது அரசியல் சித்தாந்தம் அங்கேயே வறண்டு போகிறது.”
‘ஒருமுனைப்படுத்தல் உருவம்’
படக்குறிப்பு, சாவர்க்கரைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த நிரஞ்சன் தக்லே, பிபிசி ஸ்டூடியோவில்கடந்த 1966இல் சாவர்க்கர் காலமானார். அவர் இறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் வீர் சாவர்க்கர் இந்திய அரசியலில் ‘ஒருமுனைப்படுத்தும் நபராக’ இருக்கிறார். அதாவது சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு அவர் வில்லன்.
பிரதமர் நரேந்திர மோதி 2014இல், நாடாளுமன்றத்தில் சென்ட்ரல் ஹாலில் சாவர்க்கரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியபோது, அவருக்கே தெரியாமல் காந்திக்கு முதுகை காட்டினார். ஏனென்றால் காந்திஜியின் உருவப்படம் சாவர்க்கரின் படத்திற்கு நேரே இருந்தது,” என்று நிரஞ்சன் தக்லே குறிப்பிட்டார்.
“இதுதான் இன்றைய அரசியலின் யதார்த்தம். சாவர்க்கருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமானால் காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். காந்தியை ஏற்க வேண்டுமானால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை முழுவதும் நிராகரிக்க வேண்டும். ஆகவேதான் சாவர்க்கர் இன்றும் இந்தியாவில் ஒரு ‘துருவமுனைப்பு உருவமாக’ இருக்கிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு