Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Ilayaraja/Facebook
எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
”1970 களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டிலும் இந்திப்படங்களே அதிகமாக ஓடின. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு இந்திப்படங்களின் பாடல்களை விட, தமிழ்ப்படங்களின் பாடல்களும் சிறப்பாக அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் நமக்குக் கிடைக்காமலா போய்விடுவார் என்று ஏதோ ஒரு தைரியத்தில் நான் தேடிக்கொண்டே இருந்தேன்.”
மேடைப்பாடகரும், மூத்த பத்திரிக்கையாளருமான வெ.சந்திரமோகனின் ‘காற்றில் கலந்த இசை’ நுாலின் அணிந்துரையில் இப்படி எழுதியிருந்தார் படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்.
இளையராஜாவை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளை நினைவு கூரும் அவர், ”அன்னக்கிளி வெளியாகி இரண்டு வருட இடைவெளிக்குள் இளையராஜா இசையமைத்த ‘பத்ரகாளி’, ‘பதினாறு வயதினிலே’, ‘ப்ரியா’ என்று தொட்டதெல்லாம் 100 நாள், 25 வாரம் என்று ஓட ஆரம்பித்தது. பல புதிய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குநர்கள் திரைத்துறைக்கு வந்தார்கள். தமிழ்த்திரையுலகமே செழிப்பாயிற்று. அதன்பிறகு எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் பாடல்கள், இளையராஜாவின் இசைதான்.” என்றும் அவர் எழுதியுள்ளார்.
அவர் சொன்னதைப் போலவே இளையராஜா உச்சத்தில் இருந்த 80களிலும், 90களிலும் தமிழ் மண்ணில் எட்டுத்திக்கிலும் அவரது இசையே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு, ‘இளையராஜாவின் இசையில்’ என்ற வார்த்தையே, ஆகப்பெரிய விளம்பரமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தது. பெரும்பாலான படங்கள், அவருடைய இசையமைப்பில் வெளிவந்தன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால் பஞ்சு அருணாசலம் குறிப்பிடும் அந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசையைக் கேட்டுப்பெற முடியாத நிலையில் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இருந்தனர். இளையராஜாவுடன் நீண்ட காலமாக இணைந்து பயணித்த பெரிய இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணி ரத்னம் உள்ளிட்ட பலரும் வேறு இசையமைப்பாளர்களை அழைத்து வந்ததும், அறிமுகப்படுத்தியதும் அப்போதுதான். அவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் நீண்டகாலம் நிலைத்து நின்றனர்; நிற்கின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இவர்களைத் தவிர்த்து, இன்னும் சில இசையமைப்பாளர்களும் அறிமுகமானார்கள். இளையராஜாவின் பாடல்களுக்கு இணையான சில ஹிட் பாடல்களையும் கொடுத்தனர். அவர்களில் பலர், வேறு மொழிகளில் பிரபலமாகிவிட்டனர். சிலர் மறைந்துவிட்டனர். சிலர் இருந்த இடமே தெரியாமல் மறக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அப்போது கொடுத்த பல பாடல்கள் இப்போதும் நினைவில் நிற்கின்றன.
இன்றைக்கு அந்தப் பாடல்களைக் கேட்கும் பலரும் இதுவும் இளையராஜா பாடல்தான் என்று நினைக்கும் அளவுக்கு, அந்த பாடல்களும் இசை வடிவில் இளையராஜாவின் பாடல்களின் சாயல்களைக் கொண்டுள்ளன. அத்தகைய 10 இசையமைப்பாளர்கள் மற்றும் அவர்கள் கொடுத்த ஹிட் பாடல்களை நினைவு கூர்வோம்.
வி.எஸ்.நரசிம்மன் – ஆவாரம் பூவு ஆறேழு நாளா…
பட மூலாதாரம், V.S.Narasimhan/Facebook
படக்குறிப்பு, வயலின் இசைக்கலைஞரான வி.எஸ்.நரசிம்மன், சில ஆண்டுகள் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார்கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் வி.எஸ்.நரசிம்மன். வயலின் இசைக்கலைஞரான இவர், சில ஆண்டுகள் இளையராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு அறிமுகமான இயக்குநர் கே.பாலச்சந்தர், இவரை 1984 ஆம் ஆண்டில் தனது ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
அந்த படத்தில் அவர் இசையமைத்த ‘ஆவாரம் பூவு ஆறேழு நாளா….!’, ‘ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை’ ஆகிய இரண்டு மெலடி பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின.
அதன்பின் கே.பாலச்சந்தரிடம் பணியாற்றிய அமீர்ஜான், தனது முதல் படமான பூவிலங்கு படத்தில் இளையராஜாவுடன் பணியாற்றிவிட்டு, இரண்டாவது படமான ‘புதியவன்’ படத்தில் வி.எஸ்.நரசிம்மனை இசையமைப்பாளராக்கினார்.
அந்தப் படத்திலும் நரசிம்மனின் இசையில் வெளியான ‘நானோ கண் பார்த்தேன்…நீயோ மண் பார்த்தாய்’ என்ற பாடலும் தமிழ் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வைரமுத்துவின் வார்த்தைகளும் கே.ஜே.ஜேசுதாஸின் மென்மையான, நளினமான குரலும் மிகச்சரியாகப் பொருந்திய இந்தப் பாடலுக்கு, பாடகர் பாத்திரத்தில் நடித்த நடிகர் முரளியின் வாயசைப்பும் கச்சிதமாக இருந்தது.
தேவேந்திரன் – கண்ணுக்குள் நுாறு நிலவா…
பட மூலாதாரம், Pyramid Glitz Music/Youtube
படக்குறிப்பு, தேவேந்திரனுக்கு தனியான ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்த பாடல், ‘கண்ணுக்குள் நுாறு நிலவா’ பாடல் தான்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் வடகரையைச் சேர்ந்தவர் தேவேந்திரன். கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையை பயின்று திருவொற்றியூர் பள்ளியில் இசை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1987 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து, மனோஜ் குமார் இயக்கிய ‘மண்ணுக்குள் வைரம்’ திரைப்படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் கிராமத்து இசை பாணியில் இளையராஜா பாடலைப்போலவே இருந்தன. அவருடைய பாடலைப் போலவே சூப்பர் ஹிட் அடித்தன.
குறிப்பாக, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடிய ‘பொங்கியதே காதல் வெள்ளம்’ என்ற பாடல், பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. இதே படத்தில் இதே பாடகர்கள் இணைந்து பாடிய ‘இதழோடு இதழ் சேரும் நேரம்’ பாடலும் அச்சு அசலாக இளையராஜாவின் இசையை நினைவூட்டுவதாக இருந்தது.
ஆனால் தேவேந்திரனுக்கு தனியான ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்த பாடல், ‘கண்ணுக்குள் நுாறு நிலவா’ பாடல்தான். அதே ஆண்டில் பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளியான ‘வேதம் புதிது’ படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை வைரமுத்து எழுதியிருந்தார்.
இளையராஜா தன்னுடைய பல்வேறு பாடல்களில் சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு இசை வடிவம் கொடுத்து, கோரஸ் ஆகப் பாட வைப்பது, பாடலை இன்னும் மெருகேற்றுவதாக இருக்கும். அதே பாணியில் இந்த பாடலின் இடையிசையிலும் சமஸ்கிருத ஸ்லோகத்திற்கு இசை வடிவம் கொடுத்து அழகாக இணைத்திருப்பார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதி, இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகராக அறிமுகமான ஒரே இரத்தம் திரைப்படத்துக்கும் இசையமைத்தவர் தேவேந்திரன் தான்.
விஜய் ஆனந்த் –ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்…
சென்னையில் தனியாக இசைக்குழு நடத்தி வந்த ஜூட் மேத்யூ, இயக்குநர் விசுவின் மேடை நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அவர்தான் 1984 ஆம் ஆண்டில் எஸ்.வி.சேகர் நாயகனாக நடித்து, எஸ்.பி.முத்துராமனால் இயக்கப்பட்ட ஊருக்கு உபதேசம் என்ற படத்தின் மூலமாக தமிழ்த்திரையுலகில் விஜய் ஆனந்த் என்ற பெயரில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அடுத்து விசுவின் இயக்கத்தில் ‘நாணயம் இல்லாத நாணயம்’ படமும் இவரின் இசையில் வெளிவந்தது. இரு படங்களின் பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றிபெறவில்லை. ஆனாலும் 1986ஆம் ஆண்டில், கன்னட இயக்குநரும் தயாரிப்பாளருமான துவாரகீஷ், ரஜினியை நாயகனாகவும், ஸ்ரீதேவியை நாயகியாகவும் வைத்து இயக்கிய ‘நான் அடிமை இல்லை’ படத்துக்கு இவரை இசையமைப்பாளராக்கினார்.
அந்த நம்பிக்கையைக் காப்பாற்றினார் விஜய் ஆனந்த். அந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே மெகா ஹிட் அடித்து, அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. ‘வா வா இதயமே என் ஆகாயமே’, ‘தேவி தேவி தேனில் குளித்தேன்’ என எல்லாப் பாடல்களுமே மெலடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன.
அதிலும் படத்தில் ஒரு பாத்திரம் போலவே இடம்பெற்ற ‘ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்…!’ பாடல், அந்தப் பாடலின் இரண்டாம் வரியைப் போலவே தமிழகமெங்கும் ஓயாமல் இசைத்துக் கொண்டிருந்தது. இந்த படத்துக்குப் பின் விஜய் ஆனந்த் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
அம்சலேகா- சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு…
பட மூலாதாரம், Dr.Hamsalekha/Facebook
படக்குறிப்பு, அம்சலேகா, கன்னடத் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தவர்.”காதல் இல்லையென்று சொன்னால் பூமியும் இங்கில்லை…” பாடலை இன்றைக்குக் கேட்டாலும் நேற்று வெளியான பாடலுக்கு இணையான இளமை துள்ளும் இசையாகத் தெரியும்.
கடந்த 1987 ஆம் ஆண்டில் கன்னட நடிகர் வி.ரவிச்சந்திரன், பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா ஜோடியாக நடித்த ‘பருவராகம்’ படத்தின் மூலமாக தமிழ்த்திரையுலகில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியவர் அம்சலேகா என்று சொல்லலாம். கர்நாடகா மாநிலம் மண்டியாவைச் சேர்ந்த கோவிந்தராஜூ கங்கராஜூ, கன்னடத் திரையுலகில் அம்சலேகா என்ற பெயரில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தவர்.
பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட ‘பருவராகம்’ தமிழில் பாடல்களுக்காக மட்டுமே பல நாட்கள் ஓடியது.
ரஜினியை வைத்து பாரதிராஜா இயக்கிய ‘கொடி பறக்குது’ படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ பாடலும், பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான மற்றொரு படமான ‘கேப்டன் மகள்’ படத்தில் இவர் இசையமைத்த ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று’ பாடலும் இவரை இன்றும் நினைவு கூர வைக்கும் சூப்பர் ஹிட் மெலடிகள்.
மனோஜ்- கியான்: மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பட மூலாதாரம், Ayngaran/Youtube
படக்குறிப்பு, ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல், தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரமற்ற கீதமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.தமிழ்த்திரைப்படக் கல்லுாரி மாணவர்கள் இணைந்து எடுத்து, 1986 ஆம் ஆண்டில் வெளியாகி தமிழ்த்திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஊமை விழிகள்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான மனோஜ், கியான் ஆகிய இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து முதல் படத்திலேயே முத்திரை பதித்தனர்.
ஊமை விழிகளில் மெலடிக்கு ‘மாமரத்துப் பூவெடுத்து’, ஆட்டத்துக்கு ‘ராத்திரி நேரத்து பூஜையில்’, சோகத்துக்கு ‘நிலை மாறும் உலகில்’, தன்னம்பிக்கைக்கு ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என எல்லாவித ரசனைக்கும் பாடல்கள் இருந்தன.
அதிலும் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல், தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரமற்ற கீதமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதன்பின்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான உழவன் மகன், செந்துாரப்பூவே உள்ளிட்ட பல பெரிய படங்களிலும் இவர்கள் இணைந்து இசையமைத்தனர். அவற்றில் ‘செந்துாரப் பூவே இங்கு தேன் கொண்டு வா வா’ பாடலும், பிரபு நடித்த மேகம் கறுத்திருக்கு படத்தில் இடம் பெற்ற ‘அழகான புள்ளி மானே’ பாடலும் தமிழ் ரசிகர்களை திரும்பத் திரும்பக் கேட்க வைத்த பாடல்கள். அதன்பின்பு இருவரும் பிரிந்து சில படங்களுக்கு இசையமைத்தனர். பெரிதாக ஜெயிக்கவில்லை.
செளந்தர்யன் –காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு…
பட மூலாதாரம், ThamizhPadam/Youtube
படக்குறிப்பு, இசையமைப்பாளர் செளந்தர்யன்சென்னையைச் சேர்ந்த செளந்தர்யன், முதல் முதலாக 1991 ஆம் ஆண்டில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதியும் இருந்தார். அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. கேசட் விற்பனை கொடிகட்டிப் பறந்தது. அதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த பாடல்- ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு’.
இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருடன் ஸ்வர்ணலதா பாடிய இந்தப் பாடல், மெலடி ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்தது. இதே படத்தில் மனோவும் சித்ராவும் இணைந்து பாடிய ‘கண்கள் ஒன்றாக இணைந்ததா’ பாடலும், ஸ்வர்ணலதா தனித்துப் பாடிய ‘ஏ சம்பா நாத்து’ பாடலும் ஒரு புதுவிதமான இசைக்கலவையாக எல்லாத்தட்டு ரசிகர்களையும் கேட்கத் துாண்டின.
அதற்குப் பின் 1994 ஆம் ஆண்டில் நடிகர் ரஞ்சித் அறிமுகமான ‘சிந்து நதிப்பூ’ படத்தில்தான் இவரது இசை மீண்டும் பேசப்பட்டது. அந்தப் படத்தில் மனோவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய ‘அடியே அடி சின்னப்புள்ள’ பாடல் அச்சு அசலாக இளையராஜாவின் பாணியை ஒத்ததாக இருந்தது.
அதே படத்தில் இடம் பெற்ற குத்துப்பாடலான ‘ஆத்தாடி என்ன உடம்பு’ பாடலை மறைந்த பாடகர் சாகுல் ஹமீதுவும், சுஜாதா மோகனும் இணைந்து பாடியிருப்பர். அப்போது எல்லோரையும் குத்தாட்டம் போட வைத்த அந்தப் பாடலை கால் நுாற்றாண்டு கழித்து ஹிப் ஹாப் ஆதி கடந்த 2019ஆம் ஆண்டில் தனது ‘நட்பே துணை’ படத்தில் எடுத்து ரீமிக்ஸ் செய்ததில் இன்றைய தலைமுறையையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது.
பாலபாரதி– தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே…
மதுரையைச் சேர்ந்த பாலபாரதி, அறிமுகமானது ‘தலைவாசல்’ படத்தில். சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் செல்வா இயக்கிய அந்தப் படத்தில் ‘ஏ வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தணும்’ என்று சென்னையின் கானா பாடல்களை கச்சிதமான திரை வடிவப் பாடலாக்கி, படத்தின் திரைக்கதைக்கும் தனது மகத்தான பங்களிப்பை வழங்கியிருந்தார் பாலபாரதி.
ஆனால் அந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் இணைந்து பாடிய ‘உன்னைத் தொட்ட தென்றல் வந்து’ பாடல், எல்லோரையும் மெய்ம்மறக்கச் செய்த மெலடியாக இருந்தது. அந்தப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தே, தனது அடுத்த படமான ‘அமராவதி’ படத்திலும் பாலபாரதிக்கு வாய்ப்பளித்தார் செல்வா.
அந்தப் படம்தான் இன்றைய அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருக்கு அறிமுகப்படம். இளமை பொங்கிய காதல் கதைக்கு, தன் புத்தம்புது இசையால் பலம் சேர்த்திருந்தார் பாலபாரதி. அதிலும் ‘தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே’, ‘புத்தம் புது மலரே’ ஆகிய பாடல்கள், அன்றைய இளைய தலைமுறையும், இன்றைய இளைய தலைமுறையும் இணைந்து கேட்டாலும் எல்லோருக்குமே எங்கெங்கோ நினைவுகளில் இழுத்துக் கொண்டு செல்லும் மென்மையான காதல் மெட்டுக்களாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பாலபாரதி, ”90 வயதுள்ள என் அப்பா நான் இசையமைத்த ஒரு பாடலையும் கேட்டதில்லை. ஆனால் ராஜா பாடலைக் கேட்பார். நானும் என் அப்பாவும் இளையராஜாவின் ரசிகர்கள்” என்று சொன்னார்.
ஆதித்யன் – கிழக்கு சிவக்கையிலே…
பட மூலாதாரம், YuvelineTitus/X
படக்குறிப்பு, கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆதித்யன் மரணமடைந்தபோது, அவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் மீண்டும் நினைவு கூரப்பட்டன.ஆந்திராவைச் சேர்ந்த டைட்டஸ், 1992 ஆம் ஆண்டில் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் ஆதித்யன் என்ற பெயரில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
அமரன் படத்தில் நடிகர் கார்த்திக்கைப் பாட வைத்து அவர் இசையமைத்த ‘வெத்தல போட்ட சோக்குல’ பாடல், அந்தக் கால கட்டத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவில் தெருவுக்குத் தெரு நடந்த பாட்டுக் கச்சேரிகளிலெல்லாம் எல்லா இசைக்குழுக்களாலும் பாடப்பட்டு, ஊரையே ஆட்டம் போட வைத்தது.
அதே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வசந்தமே அருகில் வா’ பாடல், மென்மெலடியாய் செவிகளை நிறைத்தது. அந்தப் படப்பாடல்களின் ஒலிப்பதிவின் தரம் துல்லியம், அந்தக் காலகட்டத்தில் வெகுவாகப் பேசப்பட்டது.
ஆனாலும் அவரைப் பற்றி பலரையும் பேச வைத்த பாடல், 1994 ஆம் ஆண்டில் ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் இடம் பெற்ற ‘கிழக்கு சிவக்கையிலே நான் கீரை அறுக்கையிலே’ பாடல்தான். கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆதித்யன் மரணமடைந்தபோது, அவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் மீண்டும் நினைவு கூரப்பட்டன.
சிற்பி – அழகிய லைலா இது இவளது ஸ்டைலா…
பட மூலாதாரம், Sirpy/Facebook
படக்குறிப்பு, ‘செண்பகத்தோட்டம்’ படத்தில் நாராயணன் என்ற சிற்பி, இசையமைப்பாளராக அறிமுகமானார்.மறைந்த நடிகரும் இயக்குநருமான மனோபாலாவின் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டில் வெளியான ‘செண்பகத்தோட்டம்’ படத்தில்தான், நாராயணன் என்ற சிற்பி, இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அடையாளம் கொடுத்தது, இயக்குநர் விக்ரமனின் ‘கோகுலம்’ படம்தான். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே’ பாடல், இளமை துள்ளும் இசையாக இருந்தது.
அதன்பின் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துக்கு சிற்பி அமைத்த மேற்கத்திய இசைப்பாடல்கள், அன்றைய இளம் ரசிகர்களை கவர்ந்தன. ‘அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா’ பாடலின் வேகமும் துள்ளலான இசைக்கோர்வையும் இன்றைக்குக் கேட்டாலும் அசர வைக்கும். அதே படத்தின் ‘ஐ லவ் யூ ஐ லவ் யூ சொன்னாளே’ பாடலும் அந்த ரகம்தான்.
அதற்குப் பின் சிற்பி இசையமைத்த ‘சுந்தர புருஷன்’ படத்தில் சித்ரா பாடிய ‘மருத அழகரோ’ பாடலும் அதிரடி இசைக்கு அணி சேர்த்த பாடல். பல ஆண்டுகளுக்குப் பின் 2002 ஆம் ஆண்டில் இயக்குநர் விக்ரமன் இயக்கி சூர்யா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’ படத்திலும் சிற்பி கலக்கியிருந்தார்.
அதில் இடம் பெற்ற ‘சில் சில் சில்லல்லா’ பாடல், இன்றும் பண்பலைகள் கொண்டாடும் டூயட் பாடலாகவுள்ளது என்றால், அதே படத்தில் ஹரிஹரன் பாடிய ‘யார் இந்த தேவதை’ பாடலும் பாடகர்களை கொண்டாட வைத்த பாடல்.
எம்.எம்.கீரவாணி– துாரம் இனியில்லை…அழகிய வானமே எல்லை
பட மூலாதாரம், MM Keeravaani/Facebook
படக்குறிப்பு, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிகடந்த 2023 ஆம் ஆண்டில், ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்குப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு பாடலாசிரியருடன் சேர்ந்து ஆஸ்கர் விருதைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும் அதே 1990 களில் தமிழ்த்திரையுலகில் பாதம் பதித்து விட்டு, திரும்பவும் தெலுங்கின் பக்கம் போனவர்தான்.
இயக்குநர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டில் வெளியான ‘அழகன்’ படத்தில் மரகதமணி என்ற பெயரில் இசையமைப்பாளராக இங்கே அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவருடைய இசையில் பூத்த ‘சாதி மல்லிப் பூச்சரமே’, ‘சங்கீத ஸ்வரங்கள்’ ஆகிய பாடல்கள் என்றைக்குக் கேட்டாலும் திகட்டாத தேனிசை கீதங்கள். அதற்கு அடுத்த ஆண்டில் பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்திலும் அவர்தான் இசையமைப்பாளர். அதில் இடம் பெற்ற ‘துாரம் இனியில்லை அழகிய வானமே எல்லை’ பாடல் உட்பட படத்தின் எட்டுப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.
தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த மரகதமணி என்ற கீரவாணி இப்போதும் தெலுங்குத் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளராகவுள்ளார்.
இந்த 10 இசையமைப்பாளர்களின் பாடல்களைப் போலவே, சந்திரபோஸ் இசையமைத்த ‘அண்ணாநகர் முதல் தெரு’ படத்தின் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ பாடலும், மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரன் இசையமைத்த ‘ரசிகன் ஒரு ரசிகை’ படத்தின் ‘ஏழிசை கீதமே’, ‘பாடி அழைத்தேன் உன்னை’ உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் ஹிட் மெலடிகளும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இளையராஜாவின் மெட்டுக்களையே மீண்டும் மீண்டும் நினைவூட்டின; நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு