அமெரிக்காவில் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும் ஒலி விரியன் பாம்புகளை காக்க முயலும் தன்னார்வலர்கள்

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், கிரிஸ் பரானியுக்பதவி, ‎ 11 நிமிடங்களுக்கு முன்னர்

மனிதர்களும் பாம்புகளும் எதிரெதிரே சந்திக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தங்கள் வீட்டிற்குள் ஒரு பாம்பைக் கண்டால் சிலர் அதைக் கொன்றுவிடுகின்றனர். ஆனால் அதைவிடச் சிறந்த வழி வேறு ஏதாவது இருக்கிறதா?

ராட்டில்ஸ்னேக் ஹாட்லைன் அழைப்பைக் கையாள்பவர், கிறிஸ்டா ரெய்னாச்சின் வீட்டு முற்றத்தில் கிடக்கும் 3 அடி நீளமுள்ள (1 மீட்டர்) பாம்பின் வாலில் கருப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள் உள்ளதா என்று ரெய்னாச்சிடம் அவர் கேட்டார்.

“இருக்கிறது” என்று தன் ஜன்னல் வழியே அந்தப் பாம்பை பார்த்துக் கொண்டிருந்த ரெய்னாச் கூறினார். ரெய்னாச்சின் பண்ணை வீட்டு வளாகத்திற்குள் வந்திருப்பது ஒரு நஞ்சுள்ள மேற்கத்திய டயமண்ட் பேக் ராட்டில்ஸ்னேக் (Rattlesnake- ஒலி விரியன் பாம்பு) என்பதை இந்த அடையாளங்கள் சுட்டிக்காட்டினாலும் அதை உறுதி செய்ய முடியவில்லை. அந்தப் பாம்பை மீட்டு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் நபர் விரைவில் அங்கு வருவார் என்று ரெய்னாச்சிடம் தெரிவிக்கப்பட்டது.

ரெய்னாச் காத்திருந்தார். பாம்புக்கடி உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்றாலும் அந்தப் பாம்பு குறித்து அவர் அதிகம் கவலைப்படவில்லை. அவருடன் கூடவே அவரது இரண்டு சீன ஷார்-பெய் நாய்களும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்தன. ரெய்னாச் அரிசோனாவின் ஸ்காட்ஸ்டேலுக்கு அருகிலுள்ள ரியோ வெர்டே மலையின் அடிவாரத்தில் வசிக்கிறார். அவரது வீடு பாலைவனத்திற்கு அருகில் இருப்பதால் வீட்டு வளாகத்திற்குள் அவ்வப்போது பாம்புகள் வரக்கூடும் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால் தம் வீட்டு வளாகத்திற்குள் அவை அதிக நேரம் இருப்பதை ரெய்னாச் விரும்பவில்லை. அதற்குக் காரணம் அவருடைய குதிரைகள். பாம்பைப் பார்ப்பதற்காக அவை தரையில் தலையை வைத்துத் தேய்க்கும்போது மூக்கில் கடிபடக்கூடும். “மூக்கு வீங்கினால் அவற்றால் சுவாசிக்க முடியாது,” என்று ரெய்னாச் தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், BBC Sport

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஒலி விரியன் பாம்புகளும் காலநிலை மாற்றமும்

அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் 7,000–8,000 பேர் நச்சுப் பாம்புகளால் கடிபடுகிறார்கள். இவர்களில் சுமார் ஐந்து பேர் இறக்கின்றனர். செல்லப் பிராணிகள் கடிபட்டு இறப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகம்.

அமெரிக்காவில் உள்ள பாம்பு இனங்களில் ராட்டில்ஸ்னேக் எனப்படும் இந்த ஒலி விரியன் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. 2019ஆம் ஆண்டில் 11,138 பேர் பாம்புக்கடிக்கு ஆளானதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கடித்த பாம்பின் வகையை அடையாளம் காண முடிந்தது என்று ஆய்வில் தெரிய வந்தது. அதில், ராட்டில்ஸ்னேக் என்ற பாம்பின் பங்கு கணிசமாக இருந்தது.

ஒலி விரியன் பாம்புகளின் கடிக்கு ஆளானவர்களில் 10-44% பேர் விரலை இழப்பது போன்ற நிரந்தர காயங்களுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு ராட்டில்ஸ்னேக் (ஒலி விரியன் பாம்பு) தன் நாக்கை நீட்டிச் சீறுகிறதுகுடியிருப்புகள் கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் துறையினர் பாம்பு வாழ்விடங்களுக்குள் ஊடுருவும்போது, ​​மனித-பாம்பு மோதல்களுக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னையை காலநிலை மாற்றமும் தீவிரப்படுத்தக்கூடும். இதன் விளைவாகச் சில பாம்புகளின் வாழ்விடங்களை அழிந்து வருகின்றன. அதே போல வெப்பமான நாளில் அவை குளிர்ந்த தோட்டத்தைத் தேட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பில் பாம்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நம் வாழ்விடங்களுக்குள் வழி தவறி வரும் ஒவ்வொரு பாம்பையும் கொல்வது அறநெறிக்கு விரோதமானது மட்டுமல்ல, இறுதியில் இது மனிதர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் பாம்புகளைக் கொல்வது தவிர்க்க முடியாதது. உதாரணமாக அவை பூர்வீக காட்டுயிர்களை அதிகமாக தாக்கத் தொடங்கும்போது அப்படிச் செய்ய வேண்டியுள்ளது. அப்படி ஊடுருவும் பாம்புகளைப் பிடித்து, பின்னர் அவற்றை மனிதாபிமானத்துடன் கொல்வது சுற்றுச்சூழல் அமைப்பைச் சமநிலையில் வைத்திருக்க உதவும்.

ராட்டில்ஸ்னேக் வசிப்பிடங்களில் மக்கள்

பட மூலாதாரம், Rattlesnake Solutions

படக்குறிப்பு, இடமாற்றத்திற்காகப் பிடிக்கப்படும் ஒரு ராட்டில்ஸ்னேக்ஆனால் அரிசோனா மற்றும் அமெரிக்காவின் பிற பகுதிகளில் சில தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் பாம்புகளை உயிருடன் பிடித்து அவற்றை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த மாகாணத்தில் வீடு கட்டும் திட்டங்கள் பாலைவனப் பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளன. எனவே புதர்க்காடுகளின் இடங்களில் குடியிருப்பு கட்டடங்கள் வந்துவிட்டன. எனவே மக்கள் ராட்டில்ஸ்னேக் அதிகமாகக் காணப்படும் இடங்களில் வாழ ஆரம்பித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் பாம்புக் கடி எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதை உள்ளூர் தரவுகள் காட்டுகின்றன.

இந்தச் சூழ்நிலையைச் சரி செய்வதில், ராட்டில்ஸ்னேக் சொல்யூஷன்ஸ் என்ற அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதர்களுக்கோ அல்லது செல்லப் பிராணிகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கும் இடத்தில் பாம்புகள் காணப்பட்டால், அவற்றை மீட்டு வேறு இடத்திற்கு மாற்ற இந்த அமைப்பு முயல்கிறது. சில மலைப்பாங்கான குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ‘ராட்டில்ஸ்னேக் இடமாற்ற கோரிக்கைகள்’ அதிகரித்து வருவதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கிறிஸ்டா ரெய்னாச் தனது பண்ணை வளாகத்திற்குள் ஒரு ஈஸ்டர்ன் டயமண்ட் பேக் பாம்பைக் கண்டபோது, ​​ராட்டில்ஸ்னேக் சொல்யூஷன்ஸின் உதவி எண்ணை அழைத்தார். அழைப்பு வந்த சிறிது நேரத்திலேயே அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அவரது பண்ணைக்கு வந்தார்.

பாம்பு மீட்பவர், ஒரு ஜோடி நீண்ட பாம்பு இடுக்கிகளைப் பயன்படுத்தி ராட்டில்ஸ்னேக்கை மெதுவாக எடுத்து, மூடியுடன் கூடிய ஒரு பெரிய கன்டெய்னரில் வைப்பதை ரெய்னாச் கவனித்தார். பீப்பாயில் இருந்த துளைகள் பாம்புக்கு காற்று வருவதை உறுதி செய்தன. பாம்பு மீட்பாளர் அந்தப் பாம்பை பாலைவனத்திற்குள் விட்டுவிட்டார். அங்கு அதற்கு ஒளிந்துகொள்ள ஏராளமான துளைகளும், வேட்டையாட எலி போன்ற கொறித்துண்ணிகளும் உள்ளன. அங்கு கண்ணைப் பறிக்கும் விளக்குகள் இல்லை. வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன.

எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் ரெய்னாச் மகிழ்ச்சியடைந்தார். “இடம் மாறி வந்தது என்பதற்காக உயிரினங்களைக் கொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று அவர் கூறினார்.

ராட்டில்ஸ்னேக்குகளை இடமாற்றம் செய்பவர்கள் இந்த அணுகுமுறையை எடுப்பதற்கு வேறொரு காரணமும் உள்ளது. உண்மையில் அத்தகைய பாம்புகளால் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக அவை கொறித்துண்ணிகளை அதிகமாகச் சாப்பிடுகின்றன. எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இது விவசாயிகளுக்கு மிகவும் உகந்த ஒன்று. ஏனெனில் எலிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் தானியங்கள் பாழாகிவிடும்.

ஈஸ்டர்ன் ப்ரெளன் பாம்புகள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு சதுர கிலோமீட்டர் விவசாய நிலத்தில் ஆயிரக்கணக்கான எலிகளைச் சாப்பிடுகின்றன என்று ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள ராட்டில்ஸ்னேக்குகள் இதேபோன்ற பங்களிப்பைச் சுற்றுச்சூழலுக்குச் செய்கின்றன.

பாம்புகள் செய்யும் உதவிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராட்டில்ஸ்னேக் வகைப் பாம்புகள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றனவிதைகளைப் பரப்புவதன் மூலம் அவை தாவர வாழ்க்கைக்கும் உதவக் கூடும். வாயில் விதைகளைச் சுமந்து செல்லும் கொறித்துண்ணிகளைச் சாப்பிடுவதன் மூலம் ராட்டில்ஸ்னேக் வகைப் பாம்புகள் சில நேரங்களில் மறைமுகமாக விதைகளை உட்கொண்டு, பின்னர் அவற்றை உடலில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் அதே பாம்புகள் புதிய பகுதிகளில் தாவரங்கள் வளர உதவுகின்றன. இந்தச் செயல்முறையை விளக்கும் ஓர் ஆய்வின் முடிவுகளை 2018ஆம் ஆண்டில் அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்டனர்.

உண்ணிகள் (ticks) எனப்படும் பூச்சிகளின் கடியால் பரவும் லைம் நோயின் நிகழ்வுகளையும் ராட்டில்ஸ்னேக் பாம்புகளின் வேட்டைத்திறன் குறைக்கலாம். ஏனென்றால் உண்ணிகள் ஒட்டிக்கொள்ள விரும்பும் சிறிய பாலூட்டிகளை பாம்புகள் சாப்பிடுகின்றன. ஆனால் இந்த நன்மைகள் இருந்தபோதிலும் சில பாம்பு இனங்கள் தற்போது அழியும் ஆபத்தில் உள்ளன.

உதாரணமாக ஈஸ்டர்ன் டயமண்ட் ராட்டில்ஸ்னேக்கின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் அரிசோனா கருப்பு ராட்டில்ஸ்னேக் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையானது தற்போது முதல் 2040க்குள், அமெரிக்காவில் 71% ராட்டில்ஸ்னேக் இனங்களுக்குக் கிடைக்கும் பொருத்தமான வாழ்விடத்தைக் குறைக்கும் என்று 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பாம்புகளுடன் வாழ்தல்

பிரையன் ஹியூஸ் முதன்முதலில் ஒரு பாம்பைக் கையில் பிடித்தபோது அவருக்கு சுமார் ஐந்து வயது. ஊர்வன மற்றும் நீர்நில வாழ்விகள் பற்றி ஆய்வு செய்து பராமரிக்கும் ஒரு குழுவான உள்ளூர் ஹெர்பெட்டாலஜிக்கல் சொசைட்டியை சேர்ந்த உறுப்பினர்கள், அந்த நேரத்தில் ஒரேகானில் அவர் வசித்து வந்த இடத்திற்கு அருகிலுள்ள இயற்கை மையத்திற்கு ஒரு கருஞ்சிவப்பு வகைப் பாம்பை (scarlet king snake) கொண்டு வந்திருந்தனர். அது சிறியதாக இருந்தது ஆனால் நம்ப முடியாத அளவுக்கு அழகாக இருந்தது.

அந்தப் பாம்பின் அடர் சிவப்பு, கிரீமி மஞ்சள் மற்றும் ஜெட்-கருப்பு நிற கோடுகளைப் பார்த்து ஹியூஸ் வியந்தார். அது மிகவும் பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருந்ததால் கிட்டத்தட்ட ஈரமாகத் தெரிந்தது.

“அது மிகவும் அற்புதமாக இருந்தது,” என்று அவர் நினைவு கூர்ந்தார். அது தனக்கு ஏற்படுத்திய விளைவை விளக்க வார்த்தைகளைத் தேடிய அவர், “அந்த நேரத்தில் அந்த உயிரினத்தைக் கையில் பிடித்தபோது சொல்ல முடியாத ஓர் உணர்வு ஏற்பட்டது,” என்று கூறுகிறார்.

அதன் பிறகு, ஹியூஸ் நூலகத்தில் இருந்த பாம்புகள் பற்றிய ஒவ்வொரு புத்தகத்தையும் படித்தார். விரைவில் அவர் காட்டில் பாம்புகளைத் தேடிச் செல்லத் தொடங்கினார். ஒரு புதையல் வேட்டையை மேற்கொள்வதைப் போல் உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்டர்ன் டயமண்ட்பேக் ராட்டில்ஸ்னேக் தன்னைத் தற்காத்துக் கொள்ள உடலை மடக்கி ஒரு சுருள் போல எழுந்து நிற்கிறதுகடந்த 2008ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து தனது மார்கெட்டிங் வேலையை இழந்த ஹியூஸ், பாம்புகள் மீதான தனது ஈர்ப்பு மூலம் ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள முடிவு செய்தார். அவருக்கு முறையான பயிற்சி இல்லை என்றாலும் ஒருவரின் தோட்டத்திலோ அல்லது கேரேஜிலோ நுழையும் பாம்புகளை மீட்டு வேறு இடத்திற்கு மாற்றும் ஹெர்பெட்டாலஜிக்கல் சங்கத்திற்காக தன்னார்வத் தொண்டு செய்வதில் அவர் நேரத்தைச் செலவிட்டார்.

தேவை அதிகமாக இருந்ததால், இதேபோன்ற சேவையை ஒரு தொழிலாகத் தொடங்க ஹியூஸ் முடிவு செய்தார். ஒரு லோகோவை உருவாக்கி, ஒரு இணையதளத்தைத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரே இரவில் ‘ராட்டில்ஸ்னேக் சொல்யூஷன்ஸ்’ பிறந்தது.

அப்போது முதல் அரிசோனாவில் ஹியூஸும் அவரது சகாக்களும் ஆயிரக்கணக்கான பாம்புகளை இடமாற்றம் செய்துள்ளனர். அப்படி அவர்கள் மீட்டு, இடமாற்றம் செய்யும் பாம்புகளின் எண்ணிக்கை, மொத்தம் “சுமார் 20,000” என்றும் ஆண்டுக்கு சுமார் 1,500 என்றும் அவர் கூறுகிறார். மேலும் ராட்டில்ஸ்னேக் பற்றிய பல அறிவியல் கட்டுரைகளை ஹியூஸ் இணை எழுத்தாளராக எழுதியுள்ளார்.

ஒவ்வொரு பாம்பையும் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு வீட்டு உரிமையாளருக்கு சுமார் 150 டாலர் (113 பவுண்டுகள்) செலவாகும். மேலும் பாம்பைப் பிடிப்பதில் இருந்து விடுவிப்பது வரையிலான வேலைக்குப் பொதுவாக இரண்டு மணிநேரம் ஆகும்.

அரிசோனாவில் பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் நஞ்சுள்ள ராட்டில்ஸ்னேக்குகளும் அடங்கும். பாம்புகளில் குறிப்பிடத்தக்கவை – வெஸ்டர்ன் டயமண்ட் பேக்ஸ் மற்றும் நஞ்சற்ற சோனோரன் கோபர் பாம்புகள். இவை இரண்டும் 6 அடி (2 மீட்டர்) நீளம் வரை வளரக் கூடியவை. எனவே ஒருவரின் தோட்டத்திற்குள் அவை நெளியுமேயானால் அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.

தாங்கள் எந்தப் பாம்பை பிடிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்களோ அது பற்றிய விவரங்களை வீட்டு உரிமையாளர்களிடம் சொல்ல தானும் தனது சக ஊழியர்களும் எப்போதும் முயற்சி செய்வதாக ஹியூஸ் குறிப்பிட்டார். பாம்புகளைப் பற்றி வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரிவிக்க அல்லது நஞ்சுள்ள பாம்புகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க இது ஒரு முக்கியமான வாய்ப்பு.

ராட்டில்ஸ்னேக் சொல்யூஷன்ஸ் ஒரு வகை வேலியையும் அமைக்கிறது. தரையில் சிறிதளவு தோண்டி வளாகத்தைச் சுற்றி இந்த வேலி அமைக்கப்படுகிறது.

“பாம்பு உயிர் வாழ்வதையும், உடனடியாக வேறு ஒருவருக்குப் பிரச்னையாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் கடினமான வேலை” என்று ஹியூஸ் விளக்குகிறார்.

பாம்பு- மனித எதிர்கொள்ளல் அதிகரித்து வருவது ஏன்?

பாம்பு-மனித எதிர்கொள்ளல் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம், வீட்டு வசதி மேம்பாட்டாளர்கள் “ஒரே தவறுகளை” மீண்டும் மீண்டும் செய்வதே என்று ஹியூஸும் அவரது சகாக்களும் கண்டறிந்துள்ளனர்.

புயல்களின்போது பெரிய நிலப்பரப்பு அரிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க அவர்கள் பெரிய பாறைக் குவியல்களைக் கட்டுகிறார்கள். ஆனால் பாம்புகள் ஒளிந்து கொள்வதற்கும் இது சரியான இடமாக அமைகிறது.

கூடுதலாக வீட்டு வசதி மேம்பாட்டாளர்கள் பெரும்பாலும் தோட்டத்தில் இலைகள் நிறைந்த புதர்களை அமைக்கிறார்கள், இதற்கு செயற்கை நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. பாம்புகள் அந்த ஈரமான, குளிர்ந்த தாவரங்களின் கீழ் தஞ்சமடைய விரும்புகின்றன. காலநிலை மாற்றம் இத்தகைய தவறுகளின் விளைவுகளை அதிகப்படுத்துகிறது.

தங்கள் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த ஏதுவான உடலமைப்பு இல்லாத பாம்புகள் வெப்பமான கோடைக்காலத்தில் மக்களின் பசுமையான தோட்டங்களில் தங்குமிடம் தேடுகின்றன. 2023ஆம் ஆண்டில் அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரம் தொடர்ச்சியாக 55 நாட்களுக்கு 110F (43.3C) அல்லது அதற்கும் மேற்பட்ட வெப்பநிலையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரிசோனா கருப்பு ராட்டில்ஸ்னேக்கூடவே வானிலை சூடாகவும், வெயிலாகவும் இருக்கும்போது மக்கள் பெரும்பாலும் வெளியில் அதிக நேரம் செலவிடுவார்கள். எனவே பாம்புகளும் மக்களும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சந்திப்புகளும், பாம்புக் கடிகளின் எண்ணிகையும் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்.

ஆனால் மனிதர்கள் பாம்புகளுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“ராட்டில்ஸ்னேக் வகைப் பாம்புகளும் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியும்,” என்கிறார் கலிஃபோர்னியாவில் உள்ள கால் போலி பல்கலைக் கழகத்தின் பாம்பு நிபுணர் எமிலி டெய்லர். அவர் தன்னார்வ அடிப்படையில் பூர்வீக பாம்பு இனங்களை இடமாற்றம் செய்கிறார். பிரையன் ஹியூஸை ஒரு நண்பர் என்று டெய்லர் விவரித்தாலும், அவரது நிறுவனத்துடன் தனக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

பாலைவனப் பகுதிகளில் பெரிய அளவிலான குடியிருப்பு வீடுகளைக் கட்டுவது மக்களுக்கும் பாம்புகளுக்கும் இடையிலான சந்திப்புகளை அதிகரிக்கும் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

வரும் ஆண்டுகளில் அரிசோனாவில் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் ராட்டில்ஸ்னேக் வகைப் பாம்புகளைப் பார்க்கக்கூடும். குறிப்பாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காகத் தம் துணையைத் தேடி வெகுதூரம் பயணிக்கின்றன.

ரெய்னாச் இதை ஒப்புக்கொள்கிறார். “நாம் பாலைவனத்தில் வாழ்கிறோம். ஆனால் பாம்புகள் அந்தச் சூழலியலின் ஒரு பகுதி,” என்று அவர் விவரித்தார். தொலைக்காட்சியிலோ அல்லது திரைப்படங்களிலோ ராட்டில்ஸ்னேக் பாம்புகள் காட்டப்படும்போது அவை ஆபத்தானவையாக, கொடூரமானவையாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் பாம்பின் மீதான ஈர்ப்பு ஒருபோதும் குறையாத பிரையன் ஹியூஸுக்கு உண்மை தெரியும்.

ராட்டில்ஸ்னேக் என்பவை காட்டு விலங்குகள். மனித நாகரிகத்தின் விரிவாக்கத்தாலும், ஊர்வன பற்றி உண்மையில் புரிந்து கொள்ளாத ஒரு சமூகத்தாலும் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

“இவற்றை வெறுக்க வேண்டும், இவற்றைக் கொல்ல வேண்டும் என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறது. ஆனால் நான் அவற்றை வெறுக்கவில்லை, காப்பாற்ற விரும்புகிறேன்,” என்கிறார் ஹியூஸ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு