முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் – மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்த ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நிலையில் விளையாடப் போகின்றன என்பதற்கான முதல்கட்ட தெளிவு கிடைத்துள்ளது. அதன்படி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4வது இடத்தைப் பிடித்த ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை. மும்பை கோப்பையை வென்ற 5 முறைகளிலும் அந்த அணி டாப் 2 இடங்களையே பெற்று வந்துள்ளது.

பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனால், ஆர்சிபி அணி இன்று நடக்கும் கடைசி லீக்கில் வென்றால் அந்த அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும். இல்லையெனில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதவேண்டிய சூழல் ஏற்படும்.

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப்

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மோதப் போவது குஜராத் அணியுடனா அல்லது ஆர்சிபியுடனா என்பது இன்றிரவு நடக்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

இன்றிரவு நடக்கும் கடைசி லீக்கில் லக்னெள அணியை ஆர்சிபி வென்றால், முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும். ஆர்சிபி தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி பஞ்சாப் அணியுடன் முதல் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.

முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணி, 2வது தகுதிச்சுற்றில் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலிஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை வென்றாலே முதல் தகுதிச்சுற்றில் இடம் பெற்றுவிடும். ஒருவேளை முதலிடத்தில் இருந்து பஞ்சாப் அணியைக் கீழே இறக்க வேண்டுமெனில், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, லக்னெள அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது 200 ரன்கள் சேர்த்து 21 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் லக்னெள அணியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். லக்னெள அணியிடம் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றாலே முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடும்.

ஒருவேளை ஆர்சிபி அணி, லக்னெள அணியை வென்றுவிட்டால், குஜராத் அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணி பஞ்சாப் உடன் விளையாட வேண்டுமெனில், அதற்கு இருக்கும் ஒரே வழி ஆர்சிபி தோல்வி அடைவதுதான்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிரியன்ஸ் ஆர்யா(63), ஜாஸ் இங்கிலிஸ்(73) ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர்.

ஐந்தாவது ஓவரில் சேர்ந்த இருவரையும் பிரிக்க முடியாமல் சிரமப்பட்ட மும்பை பந்துவீச்சாளர்கள் 15வது ஓவரில்தான் பிரித்தனர். வெற்றிக்குத் தேவையான அற்புதமான ஆட்டத்தை வழங்கி, 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த ஜாஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வேறுமுகம் காட்டிய ஆர்யா, இங்கிலிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்ததுபிரியன்ஸ் ஆர்யா இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராக அதிரடி பேட்டிங்கில்தான் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். முதலில் பேட் செய்த போதெல்லாம் ஆர்யாவின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது.

அணியின் சூழலை உணர்ந்து, மிகுந்த பொறுப்புடன் நிதானமாகத் தன்னால் ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை வெளிப்படுத்திய ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டராக ஆர்யா இருந்தார். தொடக்கத்தில் போல்ட் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஆர்யா, பிரப்சிம்ரன் ஆட்டமிழந்ததும் நிதானத்திற்கு வந்தார்.

ஜாஸ் இங்கிலிஸ் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தொடக்கத்தில் இருந்தே இங்கிலிஸ் சிறப்பாகச் செய்தார். இங்கிலிஸ், அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியதும் ஆர்யா நிதானமாக பேட் செய்து, மோசமான பந்துகளில் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி, லாங்ஆனில் சிக்ஸர் விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். அதுமட்டுமின்றி பும்ரா பந்துவீச்சுக்கும் அஞ்சாத ஆர்யா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.

அஸ்வனி குமார் பந்துவீச்சில் இங்கிலிஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் ஓவரை கதறவிட்ட இங்கிலிஸ், சிக்ஸர், பவுண்டரி என 2 ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். பவர்ப்ளேவில் 47 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி அதன் பின்னர் சீராக ரன்ரேட்டை உயர்த்தி 6 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வெற்றியை நோக்கி ஓடியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்பிரித் பும்ராஇங்கிலிஸ், ஆர்யா கூட்டணியைப் பிரிக்க ஹர்திக் பாண்டியா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் 10 ஓவர்களாக இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக சான்ட்னர் வீசிய 15வது ஓவரில் யாதவிடம் கேட்ச் கொடுத்து, ஆர்யா 62 ரன்களில்(2 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், இங்கிலிஸுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி உந்தித் தள்ளினார். இங்கிலிஸ் தொடரந்து அதிரிடியாக ஆடி ரன்களையும், பந்துகளையும் சமன் செய்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் கால்காப்பில் வாங்கி இங்கிலிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஸ் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

களத்தில் இருந்த ஸ்ரேயாஸ், அடுத்து களமிறங்கிய நேகல் வதேரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 26 ரன்களிலும், வதேரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பையை காப்பாற்றிய ஸ்கை அரைசதம்

இந்த ஆட்டத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை.

ரிக்கல்டன், ரோஹித் கூட்டணியின் தொடக்கம் பெரிதாக அமையவில்லை. தனது கடைசி லீக்கில் ஆடிய ரிக்கில்டன் 27 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது வீரராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூர்யகுமார் வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார்நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் வைஷாக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், வில் ஜேக்ஸும் 17 ரன்களுடன் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

மும்பை அணிக்கு நேற்று ரோஹித், ரெக்கில்டன் கூட்டணி எதிர்பார்த்த தொடக்கத்தை வழங்கவில்லை, நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். இதனால் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்துடன் ஆடினார்.

பஞ்சாப் அணி தரப்பில் யான்சென், அர்ஷ்தீப், வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

‘எங்களுக்கு வெற்றி பெறத் தெரியும்’

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் “நாங்கள் 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். இதுவரை நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இன்று இரவு அவ்வாறு ஆடாததால், அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம். ஆகையால், எப்படி வெற்றி பெறுவது எனத் தெரியும்.

போட்டி கடினமாகத்தான் இருக்கும். எங்கள் அணியின் முன்னோர்களுடைய வழியைப் பின்பற்றினால், மற்ற அணிகளை வெல்ல முடியும். கடந்த காலங்களில் மும்பை பெற்ற வெற்றியின் வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது, நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லலாம்” என்று தெரிவித்தார்.

மேலும், “எங்கள் பேட்டிங்கில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாகத் தேவை, எங்கள் பந்துவீச்சும் இன்று சிறப்பாக இல்லை. ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர். அதிகமாக பதற்றப்படத் தேவையில்லை, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்” எனத் தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு