Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாதவிடாய் நேரத்தில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மாதவிடாய் சுகாதாரம் குறித்த ஆலோசனைகளும், விவாதங்களும், பேச்சுகளும் மிகவும் அரிதாகவே இந்திய வீடுகளில் நடைபெறுகின்றன.
உங்கள் வீட்டில் வெளிப்படையாக மாதவிடாய் பற்றிப் பேசுகிறீர்களா? ஆம் என்றால் எவ்வளவு முறை பேசுகிறீர்கள் என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
இது தொடர்பான விழிப்புணர்வு வளர்ந்து வந்தாலும்கூட, மாதவிடாய் என்பது பேசக்கூடாத, அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேசுபொருளாகவே இன்றும் நீடிக்கிறது.
ஆம், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தங்களின் மாதவிடாய் அனுபவம், அதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உடல் பிரச்னைகள் குறித்துப் பெண்கள் பேசும் வீடியோக்களும் பதிவுகளும் வரவே செய்கின்றன.
பெண் முதல்முறையாக மாதவிடாயை எதிர்கொள்ளும் போது அது இந்திய சமூகத்தில் கொண்டாட்டமாகிறது. ஆனால் இது தொடர்பான சம்பாஷனைகள் பள்ளிகளிலோ, வீடுகளிலோ மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இது தொடர்பாக நீடிக்கும் மௌனம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மாண்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மாதவிடாய் சுகாதார தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 28ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறப்பான மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் என்பவை யாவை? பெண்கள் இதில் செய்யும் தவறுகள் என்ன?
இது தொடர்பாக அறிந்துகொள்ள மகப்பேறு மருத்துவரும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான பிரேமலதாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான நடைமுறைகள் பற்றி அவர் அளித்த விளக்கங்களை இங்கு காண்போம்.
நேப்கின்களை தேர்வு செய்வது எப்படி?
பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், அவை எளிதில் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதையும் தவிர்க்கின்றன.நைலான் போன்ற பொருட்களால் செய்யப்படும் நேப்கின்களை காட்டிலும் இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இதற்காகப் பணம் செலவழிப்பதில் தவறில்லை.அதோடு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பருத்தி துணிகளால் ஆன ‘ப்ரீயட் பேன்டீஸ்’ மற்றும் ‘மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்’ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் வகையில் இவை தயாரிக்கப்பட்டாலும்கூட, இதுபோன்ற பொருட்களை முறையாகப் பயன்படுத்தவில்லை அல்லது சுத்தம் செய்யவில்லை என்றால், பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களை பராமரிப்பது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
“ப்ரீயட் பேன்டீஸ்’ மற்றும் ‘மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்’ போன்ற பொருட்களைத் தான் அதிகம் பரிந்துரை செய்வதில்லை என்கிறார் மருத்துவர் பிரேமலதா.
ஆனால் “பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதுபோன்ற பொருட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிதமான வெந்நீரில் அதை நனைத்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.”
அதோடு, “ஆன்டிசெப்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல், மிதமான சோப்பில் துவைத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
இப்படிச் சரியான முறையில் துவைத்து, காயவைக்கவில்லை என்றால் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும். எனவே இத்தகைய பொருட்களை உபயோகிக்கும்போது சுகாதாரமான பயன்பாடு என்பதே முதலில் நினைவுக்கு வர வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும் எவ்வளவு மணிநேரத்திற்கு ஒரு முறை பேட்களை மாற்ற வேண்டும்?
“பொதுவாக நாள் ஒன்றுக்கு நான்கு முறை பேட்களை மாற்றுவது நல்லது. மென்ஸ்ச்சுரல் கப் பயன்படுத்தும்போது 6 முதல் 8 மணிநேரத்திற்கு ஒரு முறை அதை ‘அன்லோட்’ செய்வது நல்லது.
ஆனால், இதே நேர அளவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். அப்போது நேப்கின்கள் முழுமையாக நனையும் வரை காத்திருக்காமல், மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை நேப்கினை மாற்றுவது நல்லது.”
மென்ஸ்ச்சுரல் கப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
மென்ஸ்ச்சுரல் கப்பும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏதுவானது. மேலும் பயணம் செய்யும் காலத்திலும் இவை பயன்படுத்தப்படும்.
அதுகுறித்து விளக்கிய மருத்துவர் பிரேமலதா, “ப்ரீயட் பேன்டீஸ், மறுபயன்பாடு செய்யவல்ல பருத்தி பேட்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதைப் போன்றே, கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் கழுவ வேண்டும்” என்றார்.
மாதவிடாய் காலத்தில் தங்களுடன் எப்போதும் ஒன்றுக்கும் மேலான கப்களை வைத்திருப்பது நல்லது. ஒரு நாள் முழுவதும் ஒரே கப்பை பயன்படுத்துவற்குப் பதிலாக, தூய்மையாக இருக்கும் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.
வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது சரியா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் கழுவ வேண்டும்முன்பு கூறியதைப் போன்றே மாதவிடாய் என்பது மிகவும் இயல்பான இயற்கை நிகழ்வு. இந்த நேரத்தில் பலருக்கும் வயிற்று வலி ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் பிரேமலதா.
“அதில் தவறு ஒன்றும் இல்லை. வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியால் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது.
அதேவேளையில், கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்,” என்றும் பிரேமலதா தெரிவிக்கிறார்.
மாதவிடாய் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய இதர ஆரோக்கியமான பழக்கங்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் காற்றோட்டமான உள்ளாடைகளை அணிய வேண்டும்மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணுறுப்பைச் சுற்றி இருக்கும் முடியை சவரம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். இது பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து உணர்ச்சி மிகுந்த பகுதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதால், மாதவிடாய் காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கலாம்.அதிகப்படியான உதிரப்போக்கு, நாற்றம் போன்றவை ஏற்படும்போது மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்யும்போது முன்பிருந்து பின்புறமாகச் சுத்தம் செய்ய வேண்டும். யூ.டி.ஐ., மற்றும் இதர தொற்றுகளில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் பழக்கமாக இது பரிந்துரை செய்யப்படுகிறது.டேம்பான்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சிலருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவேளை நோய்த் தொற்று, எரிச்சல், துர்நாற்றம் போன்றவற்றை உணர்ந்தால் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது. பாதுகாப்பான மாதவிடாய் பொருட்களின்றி அவதியுறும் பெண்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் உலகம் முழுவதும் தோராயமாக, 500 மில்லியன் பெண்கள், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான, பாதுகாப்பான, தூய்மையான பொருட்களின்றி அவதிப்படுவதாக 2022ஆம் ஆண்டில் வெளியான உலக வங்கியின் அறிக்கை து.
“இன்று மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களின் பற்றாக்குறை மட்டுமே பெண்கள் சந்திக்கும் பிரச்னையல்ல. மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் நிகழும் ஓர் இயல்பான, ஆரோக்கியமான நிகழ்வுதான் என்றாலும்கூட பல்வேறு சமூகங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். பல கலாசாரங்களில் பேசக்கூடாத ஒன்றாகவும் அது இருக்கிறது” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதனால் மாதவிடாய் தொடர்பான தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் காரணமாக, ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற மாதவிடாய் கால நடைமுறைகளைப் பெண்கள் பின்பற்ற நேரிடுகிறது. மாதவிடாய் குறித்து நிலவி வரும் எதிர்மறையான கருத்துகள் பெண்களை அவமானப்படுத்த, கேலிக்கு உள்ளாக்க மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு வழிவகை செய்வதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதோடு, “இதன் காரணமாகப் பல தலைமுறைகளாக, ஆரோக்கியமற்ற மாதவிடாய் செயல்பாடுகள் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, மனித வளர்ச்சி ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கிறது,” என்றும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு