சென்னையில் தரையிறங்கும் விமானத்தில் பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Chennai (MAA) Airport/X

படக்குறிப்பு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. (சித்தரிப்புப் படம்)எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 12 நிமிடங்களுக்கு முன்னர்

துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் விமானங்களின் மீது பாயும் லேசர் ஒளி ஏன் விமானங்களைத் தடுமாற வைக்கிறது?

மே 25ஆம் தேதியன்று துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.

அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானபோது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் தொந்தரவுக்கு உள்ளான விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஒளி நின்றுவிட்டது. இதன் பிறகு, விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. ஆனாலும் இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முந்தையை சம்பவங்கள்

சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதற்கு முன்பு, 2023, 2024ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.

இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோல விமானப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோர் குறித்துத் தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்குள் மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. சென்னை விமான நிலைய காவல்துறையினரும் இதுதொடர்பாக தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டைகளை நடத்தினர். பிறகு இந்தச் சம்பவங்கள் நின்றுவிட்டன. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவர், “சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஓடுபாதையில் இறங்குவதற்காகத் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மீது இதுபோன்று பல வண்ணங்களில் லேசர் ஒளிக்கற்றைகள் அடிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இது நடக்கிறது. இது விமானிகளுக்குப் பல பிரச்னைகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

அதாவது, “விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Chennai (MAA) Airport/X

படக்குறிப்பு, விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள் அதேபோல, விமானக் கட்டுப்பாட்டு அறையின் மீது இதுபோன்ற லேசர் ஒளியை அடித்தால், அதுவும் அங்கு இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை போன்ற விமான நிலையங்களில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு விமானம் தரையிறங்கவோ, மேலேறவோ செய்துகொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கவனமாக உத்தரவுகளை வழங்க வேண்டிய தருணத்தில் இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி.

‘உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்’

விமானிகளுக்கு இது ஆபத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய விமானப் படையின் முன்னாள் வீரரான செல்வ ராமலிங்கம்.

“விமானங்களைத் தரையிறக்குவது என்பது மிகச் சிக்கலான ஒரு செயல்பாடு. ரன்வேயின் லைட்டை ஃபோகஸ் செய்துதான் வருவார்கள். தேவையில்லாத லைட் வந்தால் குழப்பம் ஏற்படும். இந்த விளக்கு ஏன் வருகிறது என யோசிப்பார்கள். அந்தச் சந்தேகம் வரும்போது மறுபடியும் ஏடிசியை தொடர்புகொள்வர்கள்.

நான் லேண்ட் செய்யலாமா எனக் கேட்பார்கள். டே டைமில்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ரன்வேயில் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு சமிக்ஞை இருக்கிறது. எல்லோர் உயிரும் அதைக் கண்டறிந்து இயக்கும் விமானியின் கையில்தான் இருக்கிறது” என்றார்.

சிறிய டார்ச் அளவுக்கு உள்ள லேசர் கருவிகளைக் கொண்டு ஒளியை அடித்தால், அது சில நூறு மீட்டர் தூரத்துக்கே பாயும். ஆனால், விமான நிலையங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளைப் பயன்படுத்தினால், அந்த லேசர்கள் விமானத்தில் பட்டால் அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானிகளுக்கே குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் அதிகாரிகள்.

தற்காலிக பார்வையிழப்பு ஏற்படும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருக்கிறது என்கிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன்ஆனால், சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன்.

“விமானத்தைத் தரையிறக்குவது என்பது மிகவும் சிக்கலான தருணம். அந்த நேரத்தில் விமானிகள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அளவைக் காட்டும் பல்வேறு மீட்டர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஓடுபாதையையும் விமானத்தையும் ஒரே நேர்கோட்டில் பொருத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

அப்போது ஒரு மில்லிவிநாடியைக்கூட வீணாக்க முடியாது. அந்த நேரத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி கண்ணில் அடித்தால், தற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படும்” என்கிறார் அவர்.

“இதனால் மிக அரிதான தருணங்களில் இதன் காரணமாக, missed approach செய்ய வேண்டியிருக்கும். அதாவது விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் பறக்கச் செய்து, மறுபடியும் ஏடிசியின் அனுமதியைப் பெற்றுத் தரையிறக்க வேண்டியிருக்கும். இதுபோல தீவிர கவனத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் லேசர் ஒளி கண்ணில் படுவது, விமானிகளுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும், அது மிக அபாயகரமானது” என்கிறார் அசோகன்.

‘கண்டுபிடிப்பதே கடினம்’

பிற நாடுகள் இதுபோன்ற விவகாரங்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார், இந்தியாவில் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத விமானி ஒருவர்.

“இதுபோல, லேசர் ஒளியை அடிப்பதால், விமானம் விபத்தில் சிக்காது. ஆனால், வேறு பல பிரச்னைகள் ஏற்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோலச் செய்தால், மிகக் கடுமையான அபராதமும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும். இந்தியாவில் இதுபோலச் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கிறார். “பொதுமக்களின் கையில் இதுபோன்ற கருவிகள் கிடைத்த பிறகு அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், இதுபோன்ற கருவிகளைத் தயாரிப்பவர்கள், இறக்குமதி செய்பவர்களைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் யாருக்கு விற்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரிக்கச் சொல்ல வேண்டும். அப்படித்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்” என்கிறார் அந்த விமானி.

இந்தியாவில் சென்னை தவிர, மைசூர், கொல்கத்தா விமான நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு