Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கிரிக்கெட் சூதாட்டமா, திறமைக்கான விளையாட்டா? – தமிழ்நாடு அரசால் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், சுமேதா பால் பதவி, பிபிசி செய்தியாளர்27 மே 2025, 10:12 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
டெல்லியில் வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் தர்மேந்திர கௌதம், மே 17ஆம் நாளன்று ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக பணம் புரளும் பிரான்சைஸ் (தனி நபர்கள் அணியின் உரிமையாளர்களாக இருப்பார்கள்) கிரிக்கெட் தொடராக ஐபிஎல் கருதப்படுகிறது
கிரிக்கெட் மீதான ஆர்வம் மட்டுமே கௌதம் ஐபிஎல்லை விரும்புவதற்கான காரணம் அல்ல, கற்பனை செயலி என்ற பொருள்தரும் ‘ஃபேண்டசி சூதாட்ட செயலிகள்’ மூலம் கணிசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை அவருக்கு இந்த ஐபிஎல் போட்டி வழங்கும் என்பதும் அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணம்.
“விளையாட்டின் மீதான உற்சாகமும், வெற்றி பெறும் நம்பிக்கையும்தான் இந்த விளையாட்டை நோக்கி ஈர்த்துள்ளது” என்கிறார் கௌதம்.
‘ஃபேண்டசி சூதாட்ட செயலிகளில், விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சொந்த அணியை உருவாக்கி விளையாடுவார்கள். இந்த வீரர்கள் நிதர்சனத்தில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால், விளையாடுபவர்களுக்கு மதிப்பெண் புள்ளிகள் கிடைக்கும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில் ரொக்க வெகுமதிகள் கிடைக்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வெறும் ஒற்றை ரூபாய் செலுத்தியும் இதில் பங்கேற்கலாம் என்பதும், அதன் மூலம், லட்சக்கணக்கான ரூபாய்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்பது இந்த விளையாட்டுகளை மக்களிடையே பிரபலமாக்கியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், கௌதம் போன்ற பல இந்தியர்களுக்கு ’ஃபேண்டசி கிரிக்கெட் செயலிகள்’ நல்வாய்ப்பாக மாறியுள்ளன.
இதன் மூலம் அவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டிலும் ஆர்வத்துடன் இருக்கின்றனர், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
இந்தியாவில் பிரபலமாகும் ஃபேண்டசி கிரிக்கெட்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வருவதால் ஐபிஎல் 2025 ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.இந்தியாவில் கிரிக்கெட்டின் அபரிமிதமான புகழ், ஃபேண்டசி கிரிக்கெட் செயலி போன்றவற்றிற்கு, மில்லியன் கணக்கான விளையாட்டு ரசிகர்களை ஏற்கனவே தயாராக வைத்துள்ளது.
2015 மற்றும் 2020 க்கு இடையிலான ஐந்தாண்டுகளில், இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக அதிகரித்தது. அத்துடன், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இணையத் திட்டங்களுக்கான போட்டி தொடங்கியதில், மக்களுக்கு குறைந்த விலையிலேயே அதிக தரவு கிடைத்தது. இதனால் கற்பனை விளையாட்டு செயலிகளின் பயன்பாடும் வேகமாகப் பரவத் தொடங்கியது.
சுலபமாக இணையத்தை அணுகுவது, விளையாட்டுப் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவது ஆகியவை ஸ்ட்ரீமிங் மற்றும் `ஃபேண்டசி சூதாட்ட செயலிகளை சாதாரண மக்களின் மொபைல் திரைகளுக்குக் கொண்டு வந்துள்ளது.
கணக்கியல் நிறுவனமான KPMG-யின் 2019 ஆம் ஆண்டு அறிக்கையில், இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய பயனர்களின் எண்ணிக்கை 2016 இல் 368 மில்லியனாக இருந்தது என்றும், அதுவே 2018 இல் 560 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறது. அதே காலகட்டத்தில், ஃபேன்டசி ஸ்போர்ட்ஸ் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 70 ஆக அதிகரித்திருக்கிறது.
2019 ஆம் ஆண்டில், யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய கற்பனை விளையாட்டு தளமாக Dream11 உருவானது, அதாவது, அதன் மதிப்பீடு ஒரு பில்லியன் டாலர்களை எட்டியது. இதற்குப் பிறகு, 2021 இல் மொபைல் பிரீமியர் லீக் (MPL) மற்றும் 2022 இல் கேம்ஸ் 24×7 ஆகியவையும் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றன.
இந்தியாவில் 225 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது ஃபேண்டசி விளையாட்டு செயலிகளைப் பயன்படுத்துவதாக இந்திய ஃபேண்டசி விளையாட்டு கூட்டமைப்பு (FIFS) பிபிசியிடம் தெரிவித்துள்ளது. கணக்கியல் நிறுவனமான டெலாய்ட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த தரவுகள் கிடைத்துள்ளன.
FIFS அவதானிப்பின்படி, இந்த செயலிகளில் பல்வேறு விளையாட்டுகளில் பந்தயம் கட்டும் வசதி இருந்தாலும், 85% பயனர்களின் ஆர்வம் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.துரித பணம் மற்றும் அபாயங்கள்
கற்பனை செயலிகள் மீதான ஆர்வத்திற்கான காரணம், விரைவாக பணம் சம்பாதிக்கும் நம்பிக்கை என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்த விசயம் தான்.
டெல்லியைச் சேர்ந்த விளையாட்டு பத்திரிகையாளர் சித்தாந்த் அனேவின் கருத்துப்படி, “மக்களை ஈர்க்கும் வகையில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் விதத்திலேயே இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், பெரும்பாலும் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய இந்த செயலிகள், தற்போது பிற விளையாட்டுகளுக்கும் விரிவடைந்து வருகின்றன. துரிதமாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசை தான் இந்த செயலிகள் வெற்றியடைவதற்கான முக்கியமான காரணம்”.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரின் உள்ளூர் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரியும் தயாராமின் வெற்றிக் கதையைப் பார்த்து, சூதாட்ட செயலிகளின் மீதான ஆசை பலருக்கும் அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விளையாட்டு செயலிகள் மூலம் தயாராம் 3 கோடி ரூபாய் வென்றார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ட்ரீம்11 செயலியின் லீடர்போர்டில் முதலிடத்தைப் பிடித்தார் தயாராம்.
“கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறேன், ஆனால் இதுவே எனது முதல் பெரிய வெற்றி. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று தயாராம் பிபிசியிடம் கூறினார்.
தான் வென்ற பணத்தில் வீடு கட்ட விரும்புவதாக கூறும் தயாராம், “ஆனால், இதற்குமேல் மீண்டும் விளையாடும் எண்ணம் இல்லை. கிடைத்ததையும் இழக்க நேரிடும்” என்று கூறுகிறார்.
தயாராமுக்கு சூதாட்ட செயலியால் கிடைத்த வெற்றி என்பது, கற்பனை விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றி-தோல்வியின் பொதுவான கருத்தாக இல்லை. வெற்றியைவிட தோல்வியால் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
டெல்லியில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றும் முகமது ரக்கீப்-இன் கதையை கேட்டால் நிதர்சனம் புரியும். “ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் நான் கற்பனை அணிகளை உருவாக்குகிறேன், ஆனால் இன்றுவரை பரிசு எதையும் வென்றதில்லை” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐபிஎல் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக்காகக் கருதப்படுகிறதுஃபேன்டசி சூதாட்ட செயலிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தர்மேந்திர கௌதம் நம்புகிறார். இருந்தாலும், அதன் கவர்ச்சியில் இருந்து தன்னால் விடுபட முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
“உற்சாகமும் எதிர்பார்ப்பும் மிகப்பெரியது. ஒரு விளையாட்டில் வெற்றி பெறாவிட்டாலும், அடுத்த முறை வெற்றி பெறலாம் என்று தோன்றும். எனக்கு 3 கோடி ரூபாய் கிடைக்காமல் போகலாம், ஆனால் 300 அல்லது 500 ரூபாய் பரிசு வெல்வதை பார்த்திருக்கிறோம்,” என்று தர்மேந்திர கெளதம் கூறுகிறார்.
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களில், 40% பேர் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஃபேண்டசி சூதாட்ட செயலியில் விளையாடுகிறார்கள் என்று KPMG அறிக்கை கூறுகிறது. இதுவே ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களில், 12% மட்டுமே பேண்டசி சூதாட்டச் செயலிகளில் விளையாடுகின்றனர்..
இதில் மேலும் ஆச்சரியம் தரும் விசயம் என்னவென்றால், 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களில் 39% பேர், “பணம் வெல்லும் வாய்ப்பு” தான், இந்த விளையாட்டுகளில் பங்கேற்க மிகப்பெரிய காரணமாக கூறுகின்றனர். இதற்கு நேர்மாறாக,10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களில் 25% பேர் மட்டுமே இந்த செயலிகள் மூலம் பணம் சம்பாதிக்கும் உந்துதலைப் பெறுவதாக கூறுகின்றனர்.
ஆனால் ஃபேண்டசி சூதாட்டச் செயலிகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையானது சில நேரங்களில் எதிர்மறையான சோகமான திருப்பத்தை கொடுக்கிறது. ஃபேண்டசி விளையாட்டுகளில் பெரும் தொகையை இழந்தவர்கள், அதன்பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களையும் பார்க்க முடிகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ட்ரீம்11 செயலியின் லீடர்போர்டில் தயாராம் முதலிடத்தைப் பிடித்தார்அண்மையில் 2025 மார்ச் மாதத்தில், பீகாரில் 38 வயது இளைஞர் ஒருவர் இரண்டு கோடி ரூபாயை இந்த விளையாட்டில் இழந்ததால், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு குறிப்பில், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின்போது, தனக்குப் பழக்கமாகிவிட்ட ஃபேண்டசி கிரிக்கெட்டே தனது முடிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
SHUT (Service for Healthy Use of Technology) என்ற மனநல மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் மனோஜ் குமார் சர்மா, தொற்றுநோய்க்குப் பிறகு கற்பனை விளையாட்டு செயலிகள் மீதான மக்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்.
“எல்லாமே கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு மாயை இருக்கும்” என்கிறார் மனோஜ். வெற்றி பெறலாம் என்று நினைக்கும்போது, மீண்டும் மீண்டும் தொடரும் தோல்விகளால் மனம் மற்றும் நடத்தை பிரச்னைகள் ஏற்படலாம் என்று எச்சரித்தார்.
ஃபேண்டசி சூதாட்ட செயலிகள் தொடர்பான தற்கொலைகளால், மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. 2022 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தப் பிரச்னையை விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். அதே ஆண்டு, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ஆன்லைன் கேமிங்கை ஒழுங்குபடுத்த தனது அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றும் என்று கூறியிருந்தார்.
ஃபேன்டசி கேமிங் ஆபத்தானதாக மாறுவதற்கான மிகப்பெரிய காரணம், அதற்கு உரிய கட்டுப்பாடு இல்லாததுதான் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
தற்கொலை என்பது ஒரு கடுமையான உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினையாகும். மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்கள், இந்திய அரசின் ஜீவன்சதி உதவி எண்ணான 18002333330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் கலந்து பேச வேண்டும்.
படக்குறிப்பு, ஃபேன்டசி கேமிங் ஆபத்தானதாக மாறுவதற்கான மிகப்பெரிய காரணம், அதற்கு உரிய கட்டுப்பாடு இல்லாததுதான்ஒழுங்குமுறை குறித்த நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக ஃபேண்டசி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது என்பது மாபெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஒடிசா, அசாம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா என குறைந்தது நான்கு மாநிலங்கள் சூதாட்ட எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஆன்லைன் கேமிங் செயலிகளைத் தடை செய்துள்ளன.
ஆனால் இந்தக் கட்டுப்பாடு மற்றும் தடைகளின் செல்லுபடியாகும் தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. ஏனெனில் ஃபேண்டசி சூதாட்ட விளையாட்டுகள் என்பது, திறமைக்கான விளையாட்டா அல்லது அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டா என்ற கேள்விக்கு இனும் பதில் தெரியவில்லை.
திறன் சார்ந்த விளையாட்டுகள் என்பவை, முக்கியமான முடிவு எடுப்பதற்கான திறமை மற்றும் அறிவை உள்ளடக்கியது. இதற்கு நேர்மாறாக, அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள் முற்றிலும் நல்வாய்ப்பையே நம்பியுள்ளன.
“பல உயர் நீதிமன்ற தீர்ப்புகளில், ஃபேண்டசி செயலிகள், கற்பனை விளையாட்டுகள் திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள் என்றும் அவற்றை சூதாட்டமாக வகைப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்புகளில் சிலவற்றை உறுதி செய்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மாநில அரசுகளும் மத்திய அரசும் இந்த செயலிகளை முழுமையாக தடை செய்ய முடியாது” என்று தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு வழக்கறிஞர் ஜெய் சேத்தா கூறுகிறார்.
இந்தக் காரணங்களின் அடிப்படையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் விதித்த சூதாட்ட விளையாட்டுத் தடைகளை நீதிமன்றங்கள் ரத்து செய்தன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் விதித்த சூதாட்ட விளையாட்டுத் தடைஅதே நேரத்தில், ஃபேண்டசி சூதாட்ட செயலிகளின் பயன்பாட்டைக் குறைக்க, 2023 ஆம் ஆண்டில் மத்திய அரசு, பரிசுகளுக்கு 28% ஜிஎஸ்டியை விதித்தது. இது, மது, புகையிலை போன்றவற்றுக்கு அரசு விதித்திருக்கும் வரி விகிதம் சமம்.
ஆனால் இதற்கு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரியானது, பிரிவு 14 (சட்டத்தின் முன் சமத்துவம்) மற்றும் பிரிவு 19(1)(g) (எந்தவொரு தொழிலையும் செய்வதற்கான சுதந்திரம்) ஆகியவற்றை மீறுவதாக, ஃபேண்டசி விளையாட்டு நிறுவனங்கள் உட்பட மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
2023 ஆம் ஆண்டிலேயே, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் ஆன்லைன் கேமிங் துறைக்கான தேசிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இந்தக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவிருந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
“பொறுப்பான கேமிங்கை” நோக்கி செல்வதற்காக, கற்பனை கேமிங் தளங்கள் பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக FIFS பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இவை பயனர்களுக்கு “தங்கள் சொந்த செலவு மற்றும் நேரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்” விருப்பத்தை வழங்குகின்றன, மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க பயனர்களை அனுமதிக்கின்றன.
ஃபேண்டசி விளையாட்டுத் துறையானது, இந்தியப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருவதாக FIFS கூறுகிறது.
இந்த செயலிகள் தொடர்பான விவாதம் தொடர்ந்தாலும், பயனர் பங்கேற்பு என்பது தினசரி அடிப்படையில் தொடர்கிறது. தர்மேந்திர கௌதம் போன்ற பலருக்கு இந்த ஃபேண்டசி விளையாட்டு, ஒரு “போதை”யாக மாறிவிட்டது.
“என்னைச் சுற்றியுள்ள அனைவரும் விளையாடுவதால் நான் விளையாடுகிறேன். வெற்றி பெறுவோம் என்று அனைவரும் நம்புகிறோம். அதனால்தான் இந்த செயலிகளை விட்டு வெளியேறுவது கடினமாக இருக்கிறது” என்று கௌதம் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு