உலகம் சுற்றிய இப்னு பதூதா டெல்லி சுல்தானுக்கு அஞ்சி இந்தியாவை விட்டு வெளியேறிய கதை

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், வாலித் பத்ரான் பதவி, பிபிசி அரபிஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 1325ஆம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் மொராக்கோ நாட்டில், அப்துல்லா முகமது இப்னு பதூதா என்ற இளைஞர் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறினார். அந்த ஆண்டு ஜூன் 13 அன்று வரலாற்றில் முக்கியமான தனது அதிசிறந்த பயணத்தை மேற்கொள்வதற்காக அவர் வெளியேறினார்.

அடுத்த 30 ஆண்டுகள் அவர் ஆப்பிரிக்காவில் இருந்து சீனா வரை பல அற்புதமான பயணங்களை மேற்கொண்டார். இந்தப் பயணங்களின்போது அவர் எழுதிய பல முக்கியக் குறிப்புகள் 14ஆம் நூற்றாண்டு உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

தனது பயணங்கள் குறித்து துஃபத் உன் நசார் ஃபக்ராய் இல்-அம்சர் என்ற பெயரில் அவர் புத்தகமாக எழுதினார். ஆங்கிலத்தில் அது தி டிராவல்ஸ் ஆஃப் இப்னு பதூதா என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது.

என்சைக்ளோபடியா பிரிட்டானிக்காவின் தரவுகள்படி படுட்டா 1304ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 அன்று மொராக்கோவில் பிறந்தார். இடைக்கால வரலாற்றில் மிகச் சிறந்த பயணியாக அவர் கருதப்படுகிறார்.

அவரது வாழ்நாளில் மொத்தமாக 1,20,000 சதுர கிலோமீட்டர்கள் பயணித்துள்ளார். தம் பயண முடிவில் பிரபலமான பயண புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் இளமைப் பருவமும் முதல் பயணமும்

மொராக்காவின் டேங்கியர் நகரத்தில், இஸ்லாமிய மேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இப்னு பதூதா. ஆரம்பத்தில் அவருக்கு இஸ்லாமிய சட்டங்களும் குர்ஆனும் போதிக்கப்பட்டது. ஆனால் இப்னுவுக்கோ வாழ்நாள் முழுமைக்கும் ஒரே இடத்தில் வாழ விருப்பமில்லை. அவர் வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன என்பதைக் கண்டறிய அதிக ஆர்வம் காட்டினார்.

தனது 21வது வயதில் டேங்கியர் நகரில் உள்ள தம் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டார். வாழ்நாள் முழுவதும் ஒரு தேசாந்திரியாகப் பயணம் மேற்கொள்வார் என்று அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அவருடைய முதல் பயணம் மெக்காவுக்கென இருந்தபோதும், படுட்டாவின் மத நடவடிக்கைகள், இலக்கியம் மீதான ஆர்வம் அவரை அங்கிருந்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது. வட ஆப்பிரிக்காவுக்கான அவரது பயணம் ஆபத்தில் இருந்தே ஆரம்பமானது. பாலைவனங்களையும், கொள்ளையர்களையும் சந்திக்க வேண்டிய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார்.

எகிப்து வந்தபோது, அதன் தலைநகரான கெய்ரோவின் அழகில் மெய் மறந்தார். பண்டைக் காலங்களில் மிகவும் ஆரவாரமான, வண்ணமயமான நகரமாக அது திகழ்ந்தது. அங்கே அவர் பிரமாண்டமான பள்ளிவாசல்கள், சந்தைகள், மம்லுக் பேரரசரின் கல்வி நிலையங்கள் போன்றவற்றைப் பார்வையிட்டார். அங்கிருந்து அவர் அலெக்சாண்டிரியாவுக்கும் சென்றார்.

ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது. பிறகு எகிப்து, சிரியா, ஹிஜாஜ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த புகழ்பெற்ற மத மேதைகள் மற்றும் சூஃபி ஞானிகளைச் சந்திக்க விரும்பினார்.

இப்னு பதூதா, இஸ்லாத்தை மிகவும் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர். அதனால் அவர் காஸி பதவிக்குப் பொருத்தமான நபராக இருந்தார். இஸ்லாத் குறித்துக் கற்றுத் தேர்ந்ததால் பலவிதமான வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. உலகின் பல்வேறு ராஜ்ஜியங்களின் அரசவையில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.

எகிப்தில் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவரை தீவிரமான பயணியாக மாற்றியது. அப்போதுதான் அவர் உலகத்தை வலம் வர விரும்பினார். அந்தக் காலகட்டத்தில் மக்கள் பொதுவாக வர்த்தகம், புனிதத் தலங்களுக்குச் செல்லுதல், கல்வி போன்ற காரணங்களுக்காகவே பயணம் மேற்கொண்டனர். ஆனால் இப்னு பதூதாவோ, பல நாடுகளையும் அந்த நாட்டின் மக்களையும் அறிந்து கொள்வதற்காகத் தனது பயணங்கள் மேற்கொண்டார்.

உலகின் பல பேரரசர்கள் அவரை வரவேற்றனர். அவரது பயணம் தடைபடாமல் தொடரப் பலர் அவருக்கு உதவிகளை வழங்கினர்.

ஹஜ் பயணத்திற்குப் பிறகு துவங்கிய பயணங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்னு, பல நாடுகளையும் அந்த நாட்டின் மக்களையும் அறிந்துகொள்வதற்காகப் பயணங்களை மேற்கொண்டார். கெய்ரோவில் இருந்து கிளம்பிய படுட்டா, மெக்காவுக்கு செல்லும் மக்களோடு இணைந்து பயணித்தார். 1326ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தை முடித்த அவர் அங்கிருந்து இராக் சென்றார். அப்பாஸிய பேரரசின் சிம்மாசனமாகத் திகழ்ந்த பாக்தாத்திற்கு சென்றார். இரானில் அவர் மங்கோலிய ஆளுநர் அபு சையீத்தை சந்தித்தார்.

இரானில் அவர் இஸ்ஃபஹான், சிராஜ் போன்ற நகரங்களையும் பார்வையிட்டார். அதன் கலாசார, இலக்கிய அம்சங்கள் அவரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

கடந்த 1327ஆம் ஆண்டு முதல் 1330 வரையிலான காலகட்டத்தில் அவர் மெக்கா மற்றும் மதீனாவில் தங்கினார். ஹஜ் செல்வது என்பது அவரைப் பொறுத்தமட்டில் ஆத்மார்த்தமான பயணம். இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய உலகின் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மக்களை அவர் கண்டார். சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவரின் ஆர்வத்திற்கு இவையும் காரணங்களாகின.

ஜெட்டாவில் ஒரு கப்பலில் ஏறிய அவர் செங்கடலைத் தாண்டி ஏமன் சென்றார். அங்கிருந்து அவர் ஏதேனுக்கு சென்றார். பிறகு, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வரை பயணங்களை மேற்கொண்டார். இந்தப் பயணங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் மெக்காவுக்கே சென்றார்.

இந்தியாவுக்கு வந்த இப்னு பதூதா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கெய்ரோவில் இருந்து கிளம்பிய படுட்டா, மெக்காவுக்கு செல்லும் மக்களோடு இணைந்து பயணித்தார். மெக்காவில், டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் மற்றும் இதர இஸ்லாமிய மேதைகள் குறித்தும் பல்வேறு கதைகளைக் கேட்டார் இப்னு. இதன் பிறகு டெல்லி அரசவைக்குச் செல்ல முடிவெடுத்தார்.

எகிப்து, சிரியாவை கடந்து, அனடோலியாவுக்கு கப்பலில் சென்றார் இப்னு. செல்ஜுக் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி மற்றும் ஒட்டோமான் பேரரசின் வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள வரலாற்று ஆசிரியர்களுக்கு நம்பத்தகுந்த ஆதாரமாக இப்னு பதூதா இன்று மாறியுள்ளார்.

அன்று அனைத்து சிற்றரசர்களும் அவரை வரவேற்றனர். என்சைக்ளோபடியா பிரிட்டானிக்காவை பொறுத்தவரை, பைஜான்டைன் பேரரசின் தலைநகர் குறித்த படுட்டாவின் தகவல்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தன. கான்ஸ்டான்டிநோபிளில் இருந்து திரும்பிய அவர் இந்தியாவுக்கு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்தப் பயணத்தின்போது, அவரும் அவரைப் போன்று பயணம் மேற்கொள்ளும் குழுவினரும் புகாரா, சாமர்கண்ட், பால்க் போன்ற மத்திய ஆசிய தொன்மை நகரங்களைக் கடந்து வந்தனர். ஹிந்து குஷ் மலையைக் கடந்த அவர் இந்தியாவை அடைந்தார். பின்னர் டெல்லிக்கு சென்றார்.

டெல்லியில் சுல்தான் முகமது பின் துக்ளக்கை சந்தித்த இப்னு பதூதா இந்தியாவில் காஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார். நீண்ட காலம் இந்தியாவிலேயே தங்கியிருந்த அவர் இங்குள்ள சமூகங்கள், நிர்வாகம் மற்றும் வெவ்வேறு மத மற்றும் பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மக்களுக்கு இடையே இருக்கும் உறவுகள் உள்படப் பல சிக்கலான அமைப்புகளைப் புரிந்துகொண்டார்.

ஆனால் சில காலத்திற்குப் பிறகு இந்தியாவில் இருப்பது ஆபத்துகளை உள்ளடக்கியது என்பதை அவர் புரிந்து கொண்டார். முகமது பின் துக்ளக் தாராளமானவர் அதே நேரத்தில் கொடூரமானவரும்கூட. இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது கடுமை காட்டவும் செய்தார்.

அவரது நண்பர்கள் பலரும் அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குவதை இப்னு நேரில் கண்டார். இது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. துக்ளக்கை பற்றித் தன்னுடைய புத்தகத்தில் எழுதும்போது, ​​படுட்டா சுல்தானின் கதாபாத்திரத்தை உளவியல் நுண்ணறிவுடன் சித்தரிக்கிறார். 1342ஆம் ஆண்டு சுல்தான் அவரை சீனாவுக்கு சுல்தானின் தூதராக அனுப்புகிறார்.

டெல்லியைவிட்டு வெளியேறச் சிறிதும் தாமதிக்கவில்லை இப்னு. ஆனால் சீனாவுக்கு செல்லும் அவரின் பயணம் இன்னும் ஆபத்தானது. டெல்லியில் அவர் தங்கியிருந்த இடம் போராட்டக்காரர்களால் தகர்க்கப்பட்டது, நூலிழையில் உயிர் தப்பினார். தென்மேற்கு இந்தியாவின் மலபார் கடற்கரைக்கு அவர் வந்தபோது அவர் மேலும் பல சண்டைகளைக் காண நேரிட்டது.

அவர் பயணித்த கப்பல் கோழிக்கோடு அருகே உடைந்து நொறுங்கியது. சுல்தானுக்கு அஞ்சிய இப்னு மாலத்தீவு செல்ல முடிவெடுத்தார். அங்கே அவர் காஜியாக இரண்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

மாலத்தீவில் இருந்து இலங்கை சென்ற இப்னு அங்கு பசுமையான நிலப்பரப்புகளையும், பல புத்த விகாரைகளையும் நேரில் கண்டார். அங்கிருந்து அவர் வங்கம் மற்றும் அசாமுக்கு சென்றார். பிறகு சுமத்திரா செல்லும் தனது திட்டத்தை மீண்டும் துவங்கினார்.

சுமத்திராவை ஆட்சி செய்த இஸ்லாமிய அரசர், இப்னுவுக்கு புதிய கப்பல் ஒன்றை வழங்க, இப்னு அங்கிருந்து சீனா சென்றார். அவர் சென்ற இடமெல்லாம் அங்குள்ள மக்கள் குறித்தும் அந்தப் பகுதிகளின் கலாசாரம் குறித்தும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயன்றார்.

சீனப் பயணத்தில் இருந்து திரும்பிய இப்னு

பட மூலாதாரம், Facebook

இப்னுவின் பயணங்களில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது அவரது சீனப் பயணம். 1345ஆம் ஆண்டு அவர் குவான்சுவாவில் அமைந்துள்ள சீன வர்த்தக மையத்தை அடைந்தார். சீனாவை பற்றிய இப்னுவின் குறிப்புகள், ஐரோப்பியர்களும் அரேபியர்களும் அறிந்திடாத பகுதியைக் காட்டியது.

பெய்ஜிங்கில் உள்ள அரசவை, சீன நாகரிக வளர்ச்சி மற்றும் ஆட்சி முறை போன்றவற்றைக் கண்டு இப்னு ஆச்சர்யத்தில் மூழ்கினார். அங்கு வர்த்தகம் நடைபெறும் முறை குறித்து விரிவாகத் தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவில் இடைக்காலத்தில் வர்த்தகத்திற்கும் ராஜ்ஜியத்திற்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது என்பதையும் அவர் எழுதியிருந்தார். கிழக்கில் வெகுதூரம் பயணித்த இப்னு, சுமத்திரா, மலபார் மற்றும் வளைகுடா நாடுகள் வழியே மொராக்கோ செல்வதற்கான பயணத்தை 1346ஆம் ஆண்டு துவங்கினார்.

சிரியாவில் ப்ளேக் நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை 1348ஆம் ஆண்டு நேரில் கண்டார். அதே ஆண்டில் இறுதியாக ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து, எகிப்து, அலெக்சாண்டிரியா, துனிசியா, சர்தினியா மற்றும் அல்கேரியாவுக்கு பயணமானார்.

பிறகு 1349ஆம் ஆண்டு அவர் மொராக்கோவின் ஃபைஸ் நகரை அடைந்தார். மிக நீண்ட பயணங்களை மேற்கொண்ட பிறகும்கூட, அவருக்கு இரண்டு இஸ்லாமிய நாடுகள் பற்றித் தெரியவில்லை. ஆகையால் அவர் 1352ஆம் ஆண்டு மேற்கு சூடானுக்கு பயணம் மேற்கொண்டார். சஹாரா பாலைவனத்தைக் கடந்த பிறகு அவர், புகழின் உச்சத்தில் இருந்த மாலி பேரரசில் ஓர் ஆண்டு தங்கினார்.

மொராக்கோ சுல்தானின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் தாய்நாடு திரும்பிய இப்னு பதூதா, தனது பயணங்களை நினைவுக் குறிப்புகளாகத் தொகுத்தார். அதன் பின்னர் உலக மக்களின் கண்களில் இருந்து இப்னு காணாமல் போனார். இறப்புக்கு முன்னதாக அவர் மொராக்கோ நகர் ஒன்றில் காஜியாக பணியாற்றினார் என்று கூறப்படுகிறது.

என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிக்காவில் உள்ள தகவலின்படி, அவர் 1368, 1369 அல்லது 1377 என்ற ஏதாவது ஒரு வருடத்தில் இறந்திருக்க வேண்டும். அவரது உடல் டேங்கியரில் புதைக்கப்பட்டது.

தொடரும் இப்னுவின் புகழ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொராக்கோ சுல்தானின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் தாய்நாடு திரும்பிய இப்னு, தம் நினைவுக் குறிப்புகளை எழுதினார்இப்னு பதூதா 1,20,000 சதுர கி.மீ தொலைவுக்குப் பயணித்துள்ளார். இதைக் கணக்கில் கொண்டால் புகழ்பெற்ற மார்கோ போலோவை காட்டிலும் அதிகமாகப் பயணித்திருக்கிறார் இப்னு.

கடந்த 14ஆம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அனுமானிப்பதற்கான ஒரு கற்பனையை இப்னுவின் வார்த்தைகள் நமக்குத் தருகின்றன. இடைக்காலத்தில் உச்சத்தில் இருந்த இஸ்லாமிய நாடுகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்த விரிவான புரிதலையும் அவருடைய எழுத்துகள் அளிக்கின்றன.

அவரது புத்தகம் அந்தக் காலத்தில் இருந்த விரிவான வர்த்தகத் தொடர்புகள், அறிவுசார் உரையாடல்கள், மற்றும் கலாசாரங்களையும் விளக்குகின்றன.

உலகின் பல பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் ஓர் அம்சமாக ஹஜ் பயணம் இருக்கிறது என்பதை இப்னுவின் பயணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பயணங்களின்போது ‘சிந்தனைகள்’ பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும் ஒரு பொதுவான அடையாளத்தை இஸ்லாமியர்களால் உணர முடிந்தது.

பலருக்கும் தெரியாத மேற்கத்திய நாடுகள் மற்றும் அதன் கலாசாரங்கள் குறித்து அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதால் நிலவியல், வரலாறு, மானுடவியல் உள்ளிட்ட பிரிவுகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வரலாற்று ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அதிகப்படியான தகவல்களை அவர் வங்கியுள்ளார். அவருடைய புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களால் இன்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அவரது பயணத்தின்போது அவர் 60 அரசர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் நேரில் உரையாடியிருப்பார். அவருடைய புத்தகத்தில் 2000க்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர்களைத் தனிப்பட்ட ரீதியில் அறிந்து வைத்திருந்த இப்னு, காலப்போக்கில் அவர்கள் இறந்த செய்தி கேட்டு அவர்களின் கல்லறைக்கும் சென்றிருக்கிறார்.

வெவ்வேறு ஆதாரங்களின் வாயிலாக அந்த 2000 நபர்களையும் அடையாளம் காண இயலும். இருப்பினும் அவருடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்கள் மற்றும் தேதிகளில் சில தவறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்னு எத்தகைய நபர் என்பதை அறியவும் அவருடைய புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில குறிப்புகள் உதவுகின்றன.

அறிவுத் தாகம் ஒரு மனிதனை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் என்பதற்கு இப்னுவின் அசாத்திய பயணங்கள் ஒரு சான்று. தனி மனிதப் பொழுதுபோக்கு மட்டுமே அவருடைய பயணத்தின் நோக்கமல்ல. அந்தப் பயணத்தின் வாயிலாக அவர் உலகம் குறித்த முக்கிய அறிவைப் பெற்றார்.

இன்றும்கூட, உலக அரங்கில் அவர் மிகச் சிறந்த பயணியாகக் கருதப்படுகிறார். அவரது பயணங்கள் மற்றும் உறவுகள் மூலம் பல தலைமுறைகளை அவர் கவர்ந்திழுத்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு