குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் – தமிழ்நாட்டில் கனமழை நிலவரம் என்ன? முழு விவரம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (மே 27) உருவாக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றன.

கோயம்புத்தூரில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஐந்தே நாட்களில் 12 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. கோவை மாநகாராட்சியின் 22 வார்டுகள், கோவை மாவட்ட மேற்குப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது.

இந்நிலையில், சிறுவாணி அணையிலிருந்து பொதுமக்கள் குடி நீர்த் தேவைக்காக 63.72 எம்.எல்.டி. திறந்துவிடப்படுகிறது. அடிவாரம் பகுதியில் 86 மி.மீ, அணைக்கட்டு பகுதியில் 107 மி.மீ மழை பொழிந்துள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று 26.55 அடியிலிருந்து இன்று 30.24 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி 17.91 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 27ஆம் தேதி 30.24 அடியாக உயர்ந்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, கோவை வெள்ளலூரில் நொய்யல் ஆற்றில் பழைய தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் ஆர்ப்பரித்து வருகிறது. குற்றாலத்திலும் மழைநீர் வரத்தால் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.

நீலகிரியில் நிலவரம் என்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக, ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் சாலைகளில் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை

தமிழ்நாடு-கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வரும் ஜூன் 1ஆம் தேதிக்கு மேல் தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது.

இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது.

இதன் காரணமாக, அணைக்கு வரும் நீர்வரத்து 5,205.32 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் குடிநீரின் அளவு 100 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 2,285.10 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

தற்போது 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 118.10 அடியாக இருந்து வருகிறது.

இதைத் தவிர்த்து, அணை பகுதியில் மழையின் அளவு 101.06 மி.மீ அளவும் தேக்கடி பகுதியில் 105.6 மி.மீ அளவும் பதிவாகிப் பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அணைப் பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த சூழ்நிலையில் தற்போது கேரள பகுதியில் பருவமழை தீவிரமடைந்து, மழைப்பொழிவு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

படக்குறிப்பு, குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லைகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கீழ மணக்குடி, மேல மணக்குடி, கோவளம், புதுகிராமம், வாவுத்துறை, குமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்புப்படை, பேரிடர் மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

படக்குறிப்பு, கன்னியாகுமரியில் தயார் நிலையில் உள்ள மீட்புக் குழுவினர் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புக் குழுவினர் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்துச் செயலாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெள்ள மீட்புக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

வெள்ள மீட்புப் பணிகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 7010363173 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வால்பாறை நிலவரம்

படக்குறிப்பு, வால்பாறையின் 6வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுகோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 6வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைச் சீர்செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நேற்று மானாம்பள்ளி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சக்தி தலனார் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால், மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இரண்டு தினங்களாக மின்சாரமின்றி அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு கருமலை எஸ்டேட் தேயிலை ஆலை அருகே மரம் முறிந்து மின்கம்பம் மீது விழுந்ததால், மின்கம்பம் அறுந்து சாலையில் விழுந்தது.

இந்நிலையில் கனமழையால் இன்று வால்பாறையில் உள்ள கருமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சுருளி அருவியில் குளிக்கத் தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் பெய்து வரும் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு இரண்டாவது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலை நம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்படுவதாக திருக்குறுங்குடி வனச்சரகர் அறிவித்துள்ளார்.

கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் பெயர்ந்து, அருகே உள்ள ஓடைப் பகுதியில் விழுந்தது. இதனால் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் தகர வீடு சேதமடைந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

படக்குறிப்பு, குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் ராமநாதபுரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது.

குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், அரியமான் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தரைக்காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், சூறைக்காற்று காரணமாக அரியமான் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்த ஒரு ஆட்டோ மற்றும் கார் மீது சவுக்கு மரம் முறிந்து விழுந்ததில், இரண்டு வாகனங்களும் சேதம் அடைந்தன.

நல்வாய்ப்பாக வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு