Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்பு உள்ள கேள்விகள் என்ன? மத்திய அரசின் வாய்மொழி உத்தரவாதங்களை ஏற்க தயக்கமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனஎழுதியவர், உமங் போதார் பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மே 22 அன்று, வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
முன்னதாக, இந்த வழக்கை முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரித்த சமயத்தில், சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கலாம் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, போதுமான விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், அரசாங்கம் இரண்டு விதிகளை செயல்படுத்தாது என்றும் உறுதியளித்தார்.
துஷார் மேத்தா உறுதியளித்திருந்த இரண்டு விதிகள் யாவை?
முதலாவதாக, வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். இரண்டாவதாக, தற்போது பதிவுசெய்யப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் பல அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தில், வக்ஃப் தொடர்பான பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by user) என்ற முறை நீக்கப்பட்டுள்ளது, வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் கவுன்சில்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிப்பதற்கான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான தகராறுகளை தீர்க்கும் நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அப்படி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் யாவை? தெரிந்துக் கொள்வோம்.
உச்ச நீதிமன்றத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையில், இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்கள் பலர், இரு தரப்பினரின் சார்பாகவும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
மனுதாரர்கள் சார்பாக கபில் சிப்பல், ராஜீவ் தவான் மற்றும் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அதே வேளையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ரஞ்சித் குமார் மற்றும் ராகேஷ் திவேதி ஆகியோர் அரசு தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
உச்ச நீதிமன்ற அமர்வு, மனுதாரர் மற்றும் அரசாங்கத்திடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டது. உதாரணமாக, இந்த சட்டத் திருத்தத்திற்கு முன்பாக வக்ஃப் சொத்துக்களின் பதிவு எவ்வாறு செய்யப்பட்டது, பிற மதங்களின் சொத்து பராமரிப்பில் வேற்று மதத்தினரும் அனுமதிக்கப்பட்டனரா, வக்ஃப் சொத்துக்கள் மீதான அரசாங்கத்தின் உரிமைகோரல்களை அரசு அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்ய முடியுமா? என பல கேள்விகள் கேட்கப்பட்டன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எழுதும்?
விசாரணையின் முதல் நாளில், தலைமை நீதிபதி பி.ஆர். கவய் பேசும்போது, “எந்தவொரு சட்டத்தையும் செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனுதாக்கல் செய்யும்போது, அதற்கான காரணங்கள் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும், ஏனெனில் நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றும் போது, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.
துஷார் மேத்தாவும் இதே கருத்தைப் பலமுறை வலியுறுத்தினார். “ஒவ்வொரு பிரிவையும் படிக்கும்போது, இந்த விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவையா, இதற்கு இடைக்காலத் தடை தேவையா என்பதை நாம் கவனமாக அவதானிக்க வேண்டும்” என்று சொன்னார்.
எந்தவொரு சட்டத்திற்கும் இடைக்காலத் தடை விதிக்க, மூன்று விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஒரு சட்டம் ‘முதல் பார்வையில்’ அரசியலமைப்பிற்கு விரோதமானதா, அதாவது சட்டத்தின் விதிகளை அவதானிக்கும்போது, அது அரசியலமைப்பிற்கு எதிரானதாகத் தெரிகிறதா? என்று கவனிக்க வேண்டும்.
இரண்டாவதாக, தடை விதிக்கப்பட்டால், அது இரு தரப்பினருக்கும் எதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும். மூன்றாவதாக, தடை விதிக்கப்படாவிட்டால், எந்தவொரு தரப்பினருக்காவது ஈடுசெய்ய முடியாத இழப்புகள் ஏற்படுமா? என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த மூன்று அடிப்படை விசயங்களையும் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, வக்ஃப் சொத்து தொடர்பான முக்கியமான உரிமைகளை பின்னர் திரும்பப் பெறவே முடியாத வகையில் மாற்றும் பல விதிகள் திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ளன என்று கபில் சிபல் கூறினார். “வக்ஃப் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வக்ஃப் சொத்து தொடர்பான முக்கியமான உரிமைகளை பின்னர் திரும்பப் பெறவே முடியாத வகையில் மாற்றும் பல விதிகள் திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ளன என்று கபில் சிபல் கூறுகிறார்மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பல விதிகள் இந்த சட்டத் திருத்தத்தில் உள்ளன, அவற்றை எதிர்காலத்தில் மாற்ற முடியாது என்று கபில் சிபல் கூறினார். உதாரணமாக, சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம். இதைத்தவிர, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் மாற்றப்படுவதால், வக்ஃபில் பெரிய மாற்றம் ஏற்படும், அதை பிறகு மாற்றமுடியாது என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திருத்தத்தால் பல அடிப்படை உரிமைகள் மீறப்படும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். தனது மதத்தைப் பின்பற்றுவதற்கும், ஒரு மத நிறுவனத்தை நடத்துவதற்கும் உள்ள உரிமையைப் போலவே, சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமையும் உள்ளது.
இந்தக் கருத்துகளை மறுத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த கருத்துக்கள் அனைத்துமே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் வைக்கப்பட்டதாகக் கூறினார். “வக்ஃப் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடந்தது, எனவே இந்த கட்டத்தில் நீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும், வக்ஃப் சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து சர்ச்சைகள் இருப்பதாகவும், அதனால்தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் துஷார் மேத்தா கூறினார்.
இதற்கு எதிராக பேசிய ராஜீவ் தவான், எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண, அது விகிதாசாரமாக இருப்பது அவசியம், அதாவது, அதில் இணக்கம் தேவை என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக, அதிகபட்ச சொத்துகளை அதன் கட்டுப்பாட்டில் வக்ஃப் வாரியம் வைத்துள்ளது.வக்ஃப் பதிவு மற்றும் ‘பயனர் வாரியாக வக்ஃப்’
வக்ஃப் சொத்துக்களைப் பதிவு செய்வது உச்ச நீதிமன்ற அமர்வு முன் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு முன் வக்ஃபு பதிவு செய்வது கட்டாயமா இல்லையா என்று இரு தரப்பினரிடமும் சட்ட அமர்வு கேட்டது.
“யாராவது பதிவு செய்யவில்லை என்றால், அதற்கான தண்டனை என்ன?” என்று நீதிபதி கவய் கேட்டார்.
ஆறு மாதங்களுக்குள் வக்ஃப் பதிவு செய்யப்படாவிட்டால், அந்த சொத்து தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் தொடங்க முடியாது என்று புதிய திருத்தம் கூறுகிறது.
இது குறிப்பாக ‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) என்பதை பாதிக்கும் என்று மனுதாரர்கள் கூறினர்.
எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்களில், கிட்டத்தட்ட பாதி ‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) என்றும், அவை பொதுவாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும் அபிஷேக் மனு சிங்வி கூறினார். ‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) என்பது நீண்ட காலமாக வக்ஃப் சொத்துக்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சொத்துக்கள் ஆகும், எனவே அவை தானாகவே வக்ஃப் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
1923 முதல் வக்ஃபு பதிவு செய்வது கட்டாயம் என்றும், எனவே இதுவரை பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலனைப் பெறக்கூடாது என்றும் அரசு வாதிடுகிறது.
இது குறித்து துஷார் மேத்தா கூறுகையில், “இதற்கு முன்பும் இந்த சிக்கல் இருந்து வந்தது. மக்கள் வக்ஃப்களை உருவாக்கினாலும், அவற்றைப் பதிவு செய்யவில்லை, இதுவொரு பெரிய பிரச்னையாக இருந்தது,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லியின் தரியாகஞ்ச் பகுதியில் உள்ள டெல்லி வக்ஃப் வாரிய அலுவலகம்கடந்த பத்தாண்டுகளாக சட்டப் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், பதிவு செய்யாத ஒருவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி கவய் மனுதாரர்களிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர்களின் வழக்கறிஞர், வக்ஃபு பதிவு செய்யவில்லை என்றால், முன்னர் அதற்கு எந்த உறுதியான அபராதமும் இல்லை. மேலும், ‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) சொத்துகளுக்கு பொதுவாக எந்த ஆவணங்களும் இருப்பதில்லை என்று அவர் கூறினார். இது பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில், ‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) சொத்துக்களை பதிவு செய்வது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது என்றும் கபில் சிபல் கூறினார்.
முன்னதாக, மாநிலத்தில் எவ்வளவு வக்ஃப் சொத்துக்கள் உள்ளன என்பதைக் கண்டறிய மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற சட்டப் பிரிவு இருந்தது, ஆனால் இன்றுவரை கணக்கெடுப்பை மிகச் சில மாநிலங்கள் மட்டுமே மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“மாநிலங்கள் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால், அதற்கான தண்டனை வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.
‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) சொத்து தொடர்பாக ஏதேனும் தகராறு ஏற்பட்டால், அது அரசாங்கச் சொத்து என்று இந்தத் திருத்தம் கூறுகிறது. எனவே அந்த சொத்து யாருக்குச் சொந்தமானது என்பது முடிவு செய்யப்படும் வரை, அது வக்ஃப்பாகக் கருதப்படாது.
இந்த முடிவை எடுக்க, அரசாங்கம் மாவட்ட ஆட்சியருக்கு மேல் பதவியில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்கும், இதற்கு மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தகராறுகளை தீர்க்க நீண்ட காலம் ஆகலாம் என்றும், பிரச்னை தீரும் வரை அந்த குறிப்பிட்ட சொத்து வக்ஃப்பாக கருதப்படாது என்றும் அவர் கூறுகிறார். மேலும், அரசு அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள் எனும்போது அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது.
இது குறித்து பல வாதங்களை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல், இந்த விசயத்தில் உரிய நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார். அரசாங்க பதிவேடுகளில் யாருடைய பெயர் இருக்க வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்வார்கள் என்றும், அது சொத்தின் உரிமையாளரை மாற்றாது என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இதுபற்றி சட்டத் திருத்தத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். எந்தவொரு ஒரு சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மையும், அந்தச் சட்டத்தைப் படிப்பதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது, நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்து அல்ல என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லியில் உள்ள ஜாமா மஸ்ஜித்வக்ஃப் இஸ்லாத்தின் ஒருங்கிணைந்த பகுதியா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதிய சட்டத்தின்படி, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியத்தில் நியமிக்கலாம்புதிய வக்ஃபு திருத்தங்கள், அரசியலமைப்பு சாசனத்தின் 25 மற்றும் 26 வது பிரிவுகளுக்கு எதிரானவை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். இந்த இரண்டு பிரிவுகளும், இந்திய குடிமக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், எந்தவொரு மத நிறுவனத்தையும் நடத்துவதற்கும் அடிப்படை உரிமையைக் கொடுக்கின்றன.
இது குறித்து பல வாதங்களை முன்வைத்த மனுதாரர்கள், வக்ஃப் மற்றும் ‘பயனர் வாரியாக வக்ஃப்’ (Waqf by Users) ஆகியவை இஸ்லாத்தின் முக்கிய பகுதி என்றும், அவற்றைச் சிதைப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்றும் கூறினார்கள்.
இருப்பினும், தான-தர்மம் செய்வது என்பது எல்லா மதங்களிலும் நடப்பதே என்றும், ஆனால் அது எந்தவொரு மதத்தின் அடிப்படைப் பகுதியாக இருப்பதில்லை என்றும் துஷார் மேத்தா கூறினார்.
வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்கலாம் என்று தற்போது கூறப்படும் நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன.
இந்து, சீக்கியம் மற்றும் பிற மதங்களில், அந்தந்த மதங்களின் சொத்து எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை அந்த மதத்தை சாராமல், வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தீர்மானிக்க முடியாது என்று கபில் சிபல் கூறினார். ஆனால், வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருக்கலாம் என்று வக்ஃப் திருத்தச் சட்டம் கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இந்து வாரியம் மத நடவடிக்கைகளையும் கவனித்துக்கொள்கிறது, ஆனால் வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியம், வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தது. அதனால்தான் பிற மதங்களின் வாரியங்களில், அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வக்ஃப் வாரியமும் கவுன்சிலும் ‘மதச்சார்பற்ற’ பணிகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளன என்று துஷார் மேத்தா கூறினார். மசூதிகளின் தொழுகை தொடர்பான நடவடிக்கைகளிலும் அவர்கள் தலையிடவில்லை, மாறாக வக்ஃப் சொத்துக்களின் பராமரிப்பில் மட்டுமே மாற்றங்களைச் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியத்தில் அதிகபட்சமாக இரண்டு இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அரசாங்கம் நியமிக்கும் என அவர் கூறுகிறார்.
இருப்பினும், அரசாங்கம் இந்த வாதத்தை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான சட்ட அமர்வின் முன் முன்வைத்தபோது, அரசாங்கத்தின் திருத்தத்தில் இது எங்கும் எழுதப்படவில்லை என்று அவர் வாய்மொழியாக தனது கருத்தை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இஸ்லாமியர் அல்லாத இருவரை நியமிப்பது அவசியம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதும், இரண்டு என்பது, அதிகபட்சமான எண்ணிக்கை அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளதுஇருதரப்பும் முரண்படும் வக்ஃப் சட்டத் திருத்தத்தின் பிற அம்சங்கள்
இது தவிர, சட்டத் திருத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் முரண்படும் வேறு பல அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டன.
முதலாவதாக, வக்ஃப்பை உருவாக்குபவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, எந்தவொரு தொல்பொருள் தளத்திலோ அல்லது பழங்கால நினைவுச்சின்னத்திலோ வக்ஃப் இருப்பதைத் தடை செய்வது.
மூன்றாவதாக, பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் வக்ஃப்பில் சொத்துக்களை வழங்குவதைத் தடை செய்யும் பிரிவு.
“வக்ஃப் மூலமும் யாருடைய சொத்துக்களையும் அவர்களிடமிருந்து பறிக்கக்கூடாது என்பதற்காகவும், புராதன கட்டடங்களை எந்தத் தடையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று துஷார் மேத்தா கூறினார்.
இருப்பினும், இது சாதாரண பொதுமக்களின் சொத்துக்களின் மீதான உரிமைகளைக் குறைப்பதாக மனுதாரர்கள் விமர்சிக்கின்றனர். ஜாமா மசூதி போன்ற பல பழைய மசூதிகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் வருகின்றன, ஆனால் அவை வக்ஃப் சொத்துக்கள், என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ஆனால் இது அங்கு சென்று தொழுகை நடத்துவதற்கான உங்கள் உரிமையைப் பறித்துவிடுமா?” என்று நீதிபதி கவய் கேட்டார். இதற்கு பதிலளித்த கபில் சிபல், “ஆம், இது நடக்கும்” என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை மே 24 முதல் தொடங்கியது. பொதுவாக, விடுமுறை நாட்களில், நீதிமன்றம் விசாரணை முடிந்த வழக்குகளை பரிசீலித்து, விடுமுறைக்குப் பிறகு தீர்ப்பை அறிவிக்கும். எனவே அடுத்த மாதத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வரக்கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு