தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் – தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை குறி வைக்கிறாரா?

பட மூலாதாரம், janasenaparty/fb

எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் சென்னையில் ஒரு நாடு ஒரு தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதற்கு முன்பும் அவர் தமிழக அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

சென்னை திருவான்மியூரில் தமிழக பா.ஜ.க. நடத்திய ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்க கூட்டத்தில் ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், தி.மு.கவை விமர்சித்தார். “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நானும் தென் மாநிலத்தை சேர்ந்தவன்தான். என்னால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரங்களில் சில கவலைகள் இருக்கலாம். அதைப் போக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், janasenaparty

தமிழ்நாடு அரசியல் குறித்து பவன் கல்யாண் கருத்துத் தெரிவிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து தீவிரமான கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பான மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசும்போது, “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்” என்று குறிப்பிட்டார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு எழுந்தாலும் பவன் கல்யாணின் எதிர்ப்பு கவனிக்கத்தக்கதாக இருந்தது. திருப்பதியில் செய்தியாளர்களிடம் தமிழில் பேசிய பவன் கல்யாண், “தமிழ்நாட்டில் சிலர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் மாதிரி அதனை நாசம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த மாதிரி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் முதல் ஆளும் இல்லை. கடைசி ஆளும் இல்லை. உங்களை மாதிரி ஆட்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்கவும் முடியாது” என்றார்.

பட மூலாதாரம், janasenaparty

கடந்த பிப்ரவரியில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “விஜய் அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் ஏற்கெனவே வரவேற்பு தெரிவித்துள்ளேன். தமிழ்நாட்டு அரசியல் களத்துக்கு யார் வந்தாலும் அதனை நான் வரவேற்கிறேன். ஆனால், அப்படி அரசியலுக்கு வருபவர்கள் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

இதற்குப் பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஜன சேனா கட்சியின் 12வது ஆண்டு துவக்க விழாவில் பேசிய பவன் கல்யாண் திடீரென தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை குறித்துப் பேசினார். “தமிழ்நாடு தொடர்ந்து இந்தியை நிராகரிக்கிறது. அவர்களுக்கு இந்தி மொழி தேவையில்லை என்கிறார்கள். அப்படியென்றால், ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? பீகாரிலிருந்து வரும் தொழிலாளர்களையும் நம்பியிருக்கிறார்கள். இருந்தும் இந்தியை வெறுக்கிறோம் என்று கூறுகிறார்கள். இது எப்படி நியாயமானதாக இருக்கும்?” என்றார். இதற்கு தி.மு.க. தரப்பினர் பதிலடி கொடுத்தனர். அதற்கு மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்தார் பவன் கல்யாண்.

இந்நிலையில்தான் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார் பவன் கல்யாண். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுப்பதுதான் திட்டம் என்கிறார் தி.மு.கவிலிருந்து வெளியேறி தற்போது பவன் கல்யாணுக்கு நெருக்கமாகச் செயல்பட்டுவருபவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். “தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் சுமார் 18 முதல் 20 சதவீதம்வரை இருக்கிறார்கள். இவர்கள் மொழிவாரி சிறுபான்மையினர் என்பதால் தொடர்ந்து தி.மு.கவுக்குத்தான் வாக்களித்துவந்தார்கள். ஆனால், பவன் கல்யாண் களத்தில் இறங்கினால் அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேரும். அதனை நோக்கமாக வைத்துத்தான் அவர் செயல்படுகிறார். ஜன சேனாவின் தமிழகப் பிரிவை ஆரம்பிப்பது குறித்து பவன் கல்யாண் யோசித்து முடிவெடுப்பார்” என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இவர் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பவன் கல்யாணைச் சந்தித்து ஆலோசனைகளை நடத்திவருகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஆனால், இதுபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் பலிக்காது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். “தமிழ்நாட்டில் ஒரு ஜாதிக் கட்சியோ, ஒரு மொழி அடிப்படையிலான கட்சியையோ துவங்கி வெற்றிகரமாக செயல்படுவது இயலாத காரியம். தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை பா.ஜ.கவுக்கு இழுக்க நினைக்கிறார்கள். ஆனால், ஆந்திராவில் இருந்து வரும் ஒருவரால் அது முடியுமா என்பது கேள்விக்குறிதான். பா.ஜ.க. பேசாத எதை அவர் பேசி, வாக்குகளை ஈர்க்கப் போகிறார்? அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்காக அவர் பிரச்சாரம் செய்தால் அதைப் பார்க்க கூட்டம் கூடலாம். அதைத் தாண்டி தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை அவர் ஈர்ப்பாரா என்பது சந்தேகம்தான்” என்கிறார் அவர்.

தேர்தல் நெருங்கும்போது ஜன சேனாவின் தமிழகப் பிரிவை துவங்கி, அ.தி.மு.க. கூட்டணியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகமுள்ள இடங்களில் போட்டியிடலாம். ஆனால், அதற்காக அந்த மக்களின் வாக்குகள் மாறுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன். “தி.மு.கவிலிருந்து வெளியேறிய சிலர் இந்த முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து பவன் கல்யாணுக்கு தமிழகத்தில் பெரிய ஆதரவு இருக்க வாய்ப்பில்லை” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், janasenaparty

ஆனால், இதுபோன்ற முடிவுகள் குறித்துப் பேச இன்னும் காலம் இருக்கிறது என்கிறது ஜன சேனா கட்சி. இது குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான அஜய் குமார் வேமுலபதி, இப்போதைக்கு கட்சியின் பிரிவை தமிழ்நாட்டில் துவங்கும் எண்ணமில்லை என்கிறார். “பவன் கல்யாண் தமிழ்நாட்டில் பல ஆண்டு காலம் வசித்திருக்கிறார். உள்ளூர் அரசியல் கலாச்சாரம் அவருக்குத் தெரியும். தமிழும் நன்றாகத் தெரியும். ஆனால், கட்சி ஆரம்பிப்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. காலம் கூடிவரும்போது அது குறித்து முடிவுசெய்வோம்” என்கிறார் அவர்.

தே.ஜ.கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணிக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் செயல்படுவோம் என்கிறார் அவர். “பவன் கல்யாணைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களிடம் அவர் மிகப் பிரபலமாக இருக்கிறார். பரந்த பார்வையில் பார்த்தால், அவரது பிரபலம் என்பது தெலுங்கு பேசும் மக்களையும் தாண்டியது. ஆகவே தமிழக மக்களும் அவரை அறிந்திருக்கிறார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எல்லா விவகாரங்களிலும் அவரது கருத்து என்ன என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். தவிர, நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம். தமிழ்நாட்டில் எங்களால் அந்தக் கூட்டணிக்கு பலன் கிடைத்தால் நல்லதுதானே..” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images/prajarajyam/janasenaparty

தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சிவின் சகோதரரான பவன் கல்யாண், தன் சகோதரரைப் போலவே திரைப்படங்களில் நடித்துவந்தார். 2008ஆம் ஆண்டில் சிரஞ்சிவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கியபோது அதன் இளைஞர் பிரிவான யுவராஜ்ஜியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தக் கட்சிக்காக மிகத் தீவிரமான பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால், இந்தக் கட்சி தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தபோது, கட்சியை காங்கிரசுடன் இணைக்க சிரஞ்சீவி முடிவுசெய்தார். இதில் விருப்பமில்லாத பவன் கல்யாண் சில காலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். 2014ஆம் ஆண்டில் ஜன சேனா என்ற கட்சியைத் துவங்கினார் பவன் கல்யாண். 2014ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாத பவன் கல்யாண், தெலுங்கு தேசம் – பா.ஜ.க. கூட்டணிக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

2019ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோது, இடதுசாரிக் கட்சிகளுடனும் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் இணைந்து தேர்தலைச் சந்தித்த பவன் கல்யாண், மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் ஜன சேனா கட்சிக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பவன் கல்யாணே போட்டியிட்ட இரு இடங்களிலும் தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்துப் போட்டியிட்ட பவன் கல்யாண், 2020ல் மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதாகத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜன சேனா ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

இந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜன சேனா கட்சிக்கு 21 சட்டமன்றத் தொகுதிகளும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளும் கிடைத்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் பவன் கல்யாண் பதவியேற்றார்.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் சுமார் 42 லட்சத்து 34 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு