உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  வெளிநாட்டு மாணவர்கள் இணைவதற்கு  தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகளவில் புகழ்பெற்றது. இப்பல்கலைகழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடைவிதித்து அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலைக்கழக வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனவும், இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

“அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வல்லுநர்களை உருவாக்கும் ஹார்வர்டின் திறனைப் பராமரிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் இருக்கிறோம். மேலும் அவர்கள் பல்கலைக்கழகத்தையும், இந்த நாட்டையும் அளவிட முடியாத அளவுக்கு மேம்படுத்துவார்கள்” என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024-2025 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்களைச் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சேர்த்துள்ளது. இது அதன் மொத்த சேர்க்கையில் 27% ஆகும். ஒவ்வொரு ஆண்டும், 500-800 இந்திய மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஹார்வர்டில் படிக்கிறார்கள். தற்போது, ​​இந்தியாவிலிருந்து 788 மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர்.

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கான $2.2 பில்லியன் மானியங்களையும், $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளம் ஒன்றில், “ஹார்வர்டை இனி ஒரு நல்ல கற்றல் இடமாகக் கூட கருத முடியாது, மேலும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் எந்த பட்டியலிலும் கருதக்கூடாது” என ட்ரம்ப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.