யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அடியவர்கள் அன்பளிப்பாக கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியது யார் ? என கேட்டு  , ஆலய பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

அதன் போது, ஆலயத்தின் தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா?, கோவிலில் களவு போனமை தொடர்பிலான பொலிஸ் முறைப்பாட்டை தலைவர் வாபஸ் வாங்க முற்பட்டது ஏன்?, தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். அதனை அடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி ஆலயத்தின் தற்போதைய நிர்வாக சபையினரையும், ஆலய பக்தர்களையும் ஆலய சூழலில் சந்தித்து பிரச்சனை தொடர்பில் பேசவுள்ளதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.