இலங்கை காணி அமைச்சினால்; வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பேச்சு நடாத்த அனுர அரசு முற்பேட்டுள்ளநிலையில் வர்த்தமானியை விலக்க கோரவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

மார்ச் 28, வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வடக்கு கடலோரப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த காணி அரசால் கையகப்படுத்தப்படும் என நில உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை சூறையாடும் திட்டம் எனவும், அவற்றின் உரிமையை நிரூபிப்பது கடினமான விடயம் எனவும் கூறி, வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து, பிரதமர் வடக்கு மற்றும் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

மே 20ஆம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதம், தமிழர்களின் எதிர்ப்புகளுக்கு காரணமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாளை மே 23ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் குழு அறையில் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.