உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. 

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன், இந்த குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியையும் களுத்துறை குற்றப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில், கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் பயாகல பகுதியின் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

குறித்த சந்தேகநபர்கள் பல பகுதிகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.