யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மழை அனர்த்தத்தால் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/03 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜே/06 கிராம சேவகர் பிரிவில் அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இதேநேரம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/304 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் ஜே/305 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.