நியூயார்க்: புரூக்ளின் பாலம் மீது 277 பேருடன் சென்ற கடற்படை கப்பல் மோதியது – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, நியூயார்க்கில் புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதி நிற்கும் காட்சி. 2 நிமிடங்களுக்கு முன்னர்

நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 19 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக எரிக் ஆடம்ஸ் கூறினார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்தபோது அதன் உயரமான கம்பங்கள் பாலத்தின் மீது மோதியதை காட்சிகள் காட்டுகின்றன.

கம்பங்களின் சில பகுதிகள் கப்பலின் மேல்தளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மோதலின் போது சில பணியாளர்கள் கம்பங்களின் மீது நின்று கொண்டிருந்தனர் என்றும், இதனால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கப்பலில் இருந்த 277 பேரில், 19 பேர் காயமடைந்தனர், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் 2 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முன்னதாக, புரூக்ளின் பாலத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மேயர் கூறியிருந்தார்.

இந்த மோதலால் யாரும் தண்ணீரில் விழவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

22 பேர் காயமடைந்ததாக மெக்சிகோ கடற்படை ஏற்கனவே தெரிவித்திருந்தது. கப்பல் சேதமடைந்ததை உறுதிப்படுத்திய மெக்சிகோ கடற்படை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியது.

குவாடெமோக் பயிற்சிக் கப்பல் தனது இரண்டு கம்பங்களின் மேற்பகுதியை இழந்துவிட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நியூயார்க் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,

“இயந்திரக் கோளாறு” மற்றும் மின்வெட்டு காரணமாக அந்த கப்பல், பாலத்தின் ஒரு தூணில் மோதியிருக்கலாம் என்று நியூயார்க் காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

கப்பல் வருவதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அது பாலத்தின் மீது மோதியதால் கரையில் இருந்து விரைந்து வெளியேறிவிட்டனர்.

புரூக்ளின் பாலம், மன்ஹாட்டனில் உள்ள தெற்கு தெரு துறைமுகம் மற்றும் புரூக்ளினில் உள்ள டம்போ ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களிடம் நியூயார்க் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

“விபத்து நடந்த இடத்தின் சுற்றுப்புறப் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலையும், அவசர கால வாகனங்கள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதையும் எதிர்பார்க்கலாம்” என்று நியூயார்க் காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மெக்சிகோ கடற்படையின் கூற்றுப்படி, 297 அடி நீளம் (91 மீ) மற்றும் 40 அடி (12 மீ) அகலம் கொண்ட இந்தக் கப்பல், 1982 ஆம் ஆண்டு முதல் முறையாக கடலில் பயணித்தது.

ஒவ்வொரு ஆண்டும் கடற்படை இராணுவப் பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும் இது கடலில் பயணிக்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி 277 பேருடன் மெக்சிகோ துறைமுகமான அகபுல்கோவிலிருந்து புறப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதன் இறுதி இலக்கு ஐஸ்லாந்து செல்வதாக இருந்தது.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு