தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், அந்தக் கட்சிக்கும் நாங்கள் தடைகளை ஏற்படுத்த நேரிடுமென என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய கட்சிகளைவிட தேசிய மக்கள் சக்திக்கே அதிகமான சபைகளில் பெரும்பான்மை இருக்கிறது.
அதனால் அந்த சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், அந்த கட்சிக்கு நாங்களும் தடைகளை ஏற்படுத்த நேரிடும்.
அதனால் மக்களின் தீர்மானத்துக்கமைய பெரும்பான்மை பலம் இருக்கும் சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தடையாக இருக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் 267 சபைகளை வெற்றி பெற்றுள்ளதுடன் அதில் 120 சபைகளில் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சியமைக்க முடியும்.
அதன் பிரகாரம் 32 சபைகளில் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றனர். அந்த சபைகளில் எந்த தடையும் இன்றி ஆட்சியமைக்க முடியும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 14 சபைகளில் பெரும்பான்மை கிடைத்துள்ளபோதும் அதில் 13 சபைகளில் அவர்களுக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாது.
அரசாங்கத்துக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாமல் இருக்கும் ஓரிரு சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேவையான கலந்துரையாடல்களை தற்போது மேற்கொண்டு வருகிறோம். என்றார்.