யாழ்.மாநகரசபைக்கான முதல்வராக தமது விசுவாசியான விரிவுரையாளர் கபிலனை கதிரையிலமர்த்த பாடுபடும் தேசிய மக்கள் சக்தி மறுபுறம் கொழும்பு மாநகரசபையில் பிரதி முதல்வர் பதவியை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்க பின்னடித்துவருகின்றது.
அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது.
எனினும் அதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சுயேட்சைக் குழுக்கள் அனைத்தும் 69 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆளும் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 48 பேரில் 12 பேர் தமிழர்கள்
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
எனினும் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் பதவி ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பிரதி முதல்வர்; பதவி தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளும் கட்சிக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.