தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குரிய வழிவகைகள் செய்ய வேண்டும் என தாம் தமிழரசு கட்சியின் செயலாளரிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள சித்தார்த்தனின் இல்லத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பையடுத்தே தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.