தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தமிழர் பிரதேசங்களின் சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் கணிசமான ஆசனங்களையும் பெற்றுள்ளார்கள். அவர்களுடன் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைக்க கூடாது.
தேசிய மக்கள் சக்தியினரை புறக்கணிக்க வேண்டும் என நாம் உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் மக்களிடம் கோரி வந்தன அதனை மக்கள் ஏற்று பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியை புறக்கணித்துள்ளார்கள்.
தற்போது சபைகளில் ஆட்சி அமைக்கும் போது , அவர்களாக ஆதரவு வழங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆதரவு தருகிறோம் என்பவரை ஆதரவு தராதே என கூற முடியாது.
ஆனால் ஆதரவு தாருங்கள் , துணை பதவிகளோ , இந்த சபைக்கு ஆதரவு தாருங்கள் , அந்த சபைக்கு நாம் ஆதரவு தருகிறோம் என்பது போலான டீல்கள் செய்து, அந்த கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தால் , அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என மேலும் தெரிவித்தார்.