வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ? என வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் , தேசிய தலைவருக்கு சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர்களை பதிப்போம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
குறித்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று , செய்வார்கள் எனில் , அதனை கடற்தொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என பாடலில் யார் குறிப்பிட்டார்கள் என குறிப்பிடாமல் மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.