Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பகுதியில், பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபர், ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.
இத்தகைய சூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைது செய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென பொலிஸாரிடம் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய 24 மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைது செய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.
அந்தவகையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.