இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் பலி, நால்வர் காயம் !
பதுளை – மஹியங்கனை வீதியில் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இ.போ.ச பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தெஹியத்தகண்டியவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று பதுளையிலிருந்து ரிதிபனை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 79 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தின் போது பெண்ணொருவரும் மூன்று நபர்களும் காயமடைந்துள்ள நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.