அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்ணை மிரட்டிய ஈ.பி.டி.பி பிரமுகர்

by admin

பொருளாதார அபிவிருத்தி உத்தோயோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய சனசமூக நிலையத்தை சேர்ந்த பெண்ணொருவரை , தன்னை ஈ.பி.டி.பி யின் பிரதிநிதி என தெரிவித்த நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். 

குறித்த மிரட்டல் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சனசமூக நிலையம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் நவாலி வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் , குறித்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதியான பெண்ணொருவரை சந்தித்து, ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் , உங்களுக்கான திட்டம் வரும் போது , அதற்கு உரிய ஒப்பந்தம் உங்கள் சனசமூக நிலையத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அவ்விடத்தில் இருந்து , அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வெளியேறி சென்றதை அடுத்து, குறித்த பெண்ணை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் , தன்னை ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதி என கூறி , பொருளாதார உத்தியோகஸ்தருடன் என்ன பிரச்சனை என கேட்டு , அப்பெண்ணை மிரட்டியுள்ளார். 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடமும் முறையிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்