வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை பெற புதிய ஏற்பாடு!

by admin

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கவும் தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்துக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் திட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர், குடியுரிமை நிறுத்தப்பட்ட இலங்கையர்களின், இலங்கை அல்லாத மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோரும் வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்களாக மாறுவர்.

திட்டத்திற்கு அனுமதி
இந்நிலையில், விண்ணப்பம் செய்யும் ஒருவர், விசாவிற்கு 1,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் இலங்கை அல்லாத மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தலா 400 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும் என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாத வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பல முறையீடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் தனது கொள்கைக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

பெறுநர்களின் உரிமைகள்
தற்போதைய தேவையின்படி, முதல் வருடத்தில் 3,000 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 10,000 விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு விசாக்கள் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு அதன் பிறகு புதுப்பிக்கப்படும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், பொதுச் சேவையில் சேரவும், வியாபாரத்தில் ஈடுபடவும், இலங்கையில் முதலீடு செய்யவும் முடியும்.

அத்துடன், விசாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்