இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் தீவிர போராட்டம், 100க்கும் மேற்பட்டோர் கைது – என்ன நடக்கிறது?
அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது அமெரிக்காவின் உயர்கல்வி வளாகங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து சுமார் 1,200 பேரைக் கொன்றது. அதற்குப் பதிலடியாக காஸாவின்மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதுவரை 34,000க்கும் அதிகமான பாலத்தீனர்களை கொன்றிருக்கிறது. காஸாவில் மனிதாபிமான சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தச்சம்பவங்களைக் கண்டித்தும், காஸாவில் அமைதி வேண்டியும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை ‘யூத வெறுப்பாளர்கள்’ என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவர்கள் கைது, வன்முறை
முதலில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.
பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்ட முகாம்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டம் நடத்தியதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரத்தில், போராட்டக்காரர்களை கைது செய்யுமாறு மாகாண துருப்புகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
அட்லாண்டா நகரத்தில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.
போராட்டம் எப்படித் துவங்கியது?
முதலில் போராட்டத்தைத் துவங்கியது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில், பாலத்தீனத்தை ஆதரித்து மாணவர்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடனர். இதனால் இந்தப் பல்கலைக்கழகத்தின்மீது யூத எதிர்ப்புக் குற்றமும் சாட்டப்பட்டது.
கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் போராட்டத் தளத்தை அகற்றுமாறு போலிசாரிடம் கேட்டதை அடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட மாணவப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இந்தக் கைதுகள் மாணவர்களின் போராட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. கைதுகள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும் மாணவர்கள் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான இல்ஹான் ஓமரின் மகளும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்டார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த இயக்கம் வெகுசில மாணவர்களுடன் தொடங்கியது, ஆனால் இந்தக் கைதுகள் காரணமாக விரைவாகப் பரவியது, என்றார்.
கடந்த வியாழன் அன்று கொலம்பியாவில் பிபிசியிடம், “இது வெறும் 70 மாணவர்களுடன் தொடங்கிய இயக்கம்” என்று கூறினார்.
“கொலம்பியா பல்கலைக்கழகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் இப்போது தேசிய அளவில் பரவியுள்ளது,” என்றார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா எங்கிலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். ஹார்வார்ட், யேல், எமரி, தெற்கு கலிபோர்னியா, ஜார்ஜ்டவுன், டெக்சாஸ், நியூயார்க், எமெர்சன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.
பட்டமளிப்பு விழா ரத்து
லாஸ் ஏஞ்சல்ஸில் நகரத்தில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California – USC), பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி எதிர்வரும் மே 10ஆம் தேதி நடக்கவிருந்த முக்கிய பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளது.
அந்தப் பல்கலைக்கழகம், ஓர் அறிக்கையில் பட்டமளிப்பு விழா அன்று, வளாகத்திற்கு “பாரம்பரியமாக மாணவர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 65,000 பேர் வருவார்கள். பல்கலைக் கழகத்தால் முக்கிய மேடை விழாவை நடத்த முடியாது,” என்று கூறியது.
இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த புதன்கிழமை, அத்துமீறி நுழைந்ததற்காகக் குறைந்தது 93 பேரைக் கைது செய்த போலீசார், போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாமை அகற்ற உத்தரவிட்டனர்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், குறிப்பிடப்படாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் மாணவியான அஸ்னா தபஸ்ஸும் நிகழ்த்தவிருந்த பட்டமளிப்பு விழா உரை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்திருந்தது.
கலவரமாக மாறிய அமைதிப் போராட்டம்
அட்லாண்டா நகரில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பாலத்தீனத்தினர்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி, அப்பகுதியில் ஒரு காவல்துறை பயிற்சி மையம் அமையவிருப்பதை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர். இந்தப் பயிற்சி மையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அன்று எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.
போராட்டம் நடத்தும் மாணவர்களைக் கட்டுப்படுத்த ரசாயன எரிச்சலூட்டிகளைப் பயன்படுத்தியதாக அப்பகுதியின் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்படுவதுபோல மாணவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.
போலீசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட எமரி பல்கலைக் கழகத்தின் தத்துவத்துறைத் தலைவர் நோயல் மெச்-அஃபீ, முதலில் போராட்டம் அமைதியானதாக இருந்ததாகத் தெரிவித்தார். மாணவர்கள் முன்னேறி நடக்கத் துவங்கியதும், காவல்துறையினரும் செயல்படத் துவங்கினர் என்றார். “அமைதியான போராட்டமாக இருந்தது, திடீரென ஒரு நிமிடத்தில் கலவரமாக மாறிவிட்டது,” என்றார் அவர்.
கன்னெடிகட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் போராட்டத் தலைவரும் சட்டக்கல்வி மாணவருமான சிஸாடோ மிமுரா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், தங்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலரும் காஸாவில் நடக்கும் இன அழித்தொழிப்பிற்கு நிதியும் ஆயுதங்களும் வழங்குவது குறித்து போராட்டக்காரர்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.