பிரதமர் நரேந்திர மோதி இஸ்லாமியர்கள் குறித்து என்ன சொன்னார்? சர்ச்சை ஏன்?

நரேந்திர மோதி, பாஜக, காங்கிரஸ், இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், ANI

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து சொன்ன கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது பிரசார உரையில் ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக மோதி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் இஸ்லாமியர்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். அதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் கட்சி, மோதி ‘நாட்டில் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகக்’ கூறியுள்ளது.

பிரதமர் மோதியின் உரை முடிந்த சிறிது நேரத்திலேயே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்வன் கேரா ஓர் வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அதில் மோதிக்கு சவால் விடுத்த அவர், “எங்கள் தேர்தல் அறிக்கையில் இந்து-முஸ்லிம் என்று எங்காவது எழுதப்பட்டிருந்தால், அதைக் காட்டுங்கள்,” என்று கூறினார்.

பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோதி பேசுகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் மற்றும் எரிவாயு வழங்கிய பிறகு, ஒவ்வொரு வீட்டையும் சூரிய ஆற்றல் இல்லமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்றார்.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்றும், பழங்குடியின குடும்பங்கள், தலித் குடும்பங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் இதன் மூலம் மிகப்பெரிய பலனைப் பெறுவார்கள் என்றும் மோதி தனது உரையில் கூறினார்.

எல்லைகளைக் காக்கவும், தேவைப்பட்டால் பாதாள உலகத்திற்கும் சென்று எதிரிகளை அழிக்கக் கூடிய வலுவான அரசு நாட்டிற்குத் தேவை என்று மோதி தனது உரையில் கூறினார்.

மேலும் அவர், “கடந்தகால சாதனை இல்லாதவருக்கு இவ்வளவு பெரிய நாட்டைக் கொடுக்க முடியுமா? மோடி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். 23 ஆண்டுகள் ஆகின்றன. குஜராத்தில் 13 ஆண்டுகள். துங்கர்பூர்-பன்ஸ்வாரா மக்கள் என்னை நேசத்தோடு பார்க்கிறார்கள்,” என்றார்.

இஸ்லாமியர்கள் குறித்து மோதி என்ன சொன்னார்?

தனது உரையில், மோதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தாக்கிப் பேசினார். நாட்டிலுள்ள பெண்களின் தங்கத்தைக் கணக்கிட்டு அதை விநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புவதாக கூறினார்.

“பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இதில் உங்களுக்குச் சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றார்.

மேலும், தனது உரையில், “முன்பு, அவர்களது அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினர். அதாவது சொத்துக்களை வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்? அதிக குழந்தை பெற்றவர்களுக்கு. நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?” என்றார்.

“தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. சகோதர, சகோதரிகளே, இந்த ‘அர்பன் நக்சல்’ எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்,” என்றார்.

பவன் கேரா, நரேந்திர மோதி, பாஜக, காங்கிரஸ், இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், X/ Pawan Khera

படக்குறிப்பு, காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கேரா

காங்கிரஸ் கட்சியின் எதிர்வினை என்ன?

மோதியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பிரதமர் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோதி பேசும் பொய்களின் தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது. பயம் காரணமாக அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறார்,” என்று பதிவிட்டிருக்கிறார்.

“காங்கிரசின் ‘புரட்சிகரமான தேர்தல் அறிக்கை’க்கு அபரிமிதமான ஆதரவு வரத்துவங்கியுள்ளது. நாடு தனது பிரச்னைகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கும். வேலைவாய்ப்பு, குடும்பம் மற்றும் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும். இந்தியா திசைதிரும்பாது,” என்று பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கேரா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் “நாட்டின் பிரதமர் இன்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற, நீங்கள் பொதுமக்களிடம் பொய் சொல்கிறீர்கள். உங்கள் உத்தரவாதங்கள் பொய், உங்கள் அறிக்கைகள் பொய், உங்கள் வாக்குறுதிகள் பொய்யானவை,” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துகிறீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘முஸ்லிம்’, ‘இந்து’ என்ற வார்த்தைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்,” என்றார்.

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீதி குறித்த பேச்சுதான் இருக்கிறது. இளைஞர்களுக்கு நீதி, பெண்களுக்கு நீதி, பழங்குடியினருக்கு நீதி, தொழிலாளர்களுக்கு நீதி என்று பேசப்படுகிறது. அதில் பிரதமருக்கு ஆட்சேபனை இருக்கிறது. ஏன்? எங்கள் தேர்தல் அறிக்கை நீதியை காட்டுகிறது. பிரதமருக்கு இது அவரது கடந்த பத்து வருட செயல்களைக் காட்டுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் ‘இந்து-முஸ்லிம்’ விளையாட்டு மட்டும் தான் செய்திருக்கிறார். அதற்காக அவர் வெட்கப்படவேண்டும்,” என்றார்.

பவன் கேரா மேலும் கூறுகையில், “இப்படி பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒருவர் வெட்கப்பட வேண்டும். பிரதமரே, உங்கள் பொய்களால் மக்கள் எங்களின் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு, அதில் ‘இந்து’ என்று எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் பொய்களைத் தேடுகிறார்கள். மற்றபடி இதுபோன்ற வார்த்தைகள் எங்கள் அறிக்கையிலும் இல்லை, எங்கள் மனதிலும் இல்லை, இந்த சமூகத்திலும் இல்லை,” என்றார்.

நரேந்திர மோதி, பாஜக, காங்கிரஸ், இஸ்லாம், முஸ்லிம்கள், மல்லிகார்ஜுன கார்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

‘கண்ணியமாக ஓய்வு பெறுங்கள் பிரதமர் அவர்களே’

தனது வீடியோ பதிவில் பவன் கேரா, “இது உங்க மனநிலையில் மட்டும்தான் இருக்கிறது., பிரதமர் அவர்களே பொய் சொல்வதை நிறுத்துங்கள். இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. கண்ணியமாக ஒய்வு பெறுங்கள்,” என்றார்.

“உங்கள் இருக்கையில், உங்களுக்கு முன் படித்தவர்கள் பலர் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். உங்களைப்போல யாரும் பொய் சொன்னதில்லை. உங்களுக்குப் பிறகும் நிறைய நல்லவர்கள் வருவார்கள். யாரும் இப்படிப் பொய் சொல்ல மாட்டார்கள். நீங்கள் சொல்லும் பொய்களால் உங்கள் பெயர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சேரும். மன்னிக்கவும், இதுபோன்ற மொழியைக் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம்,” என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “நாட்டில் ஜனநாயகம், அரசியல் சாசனம் ஆகியவை அழிந்தால், மக்களுக்கு எதுவும் மிச்சம் இருக்காது. பாபாசாகேப் அம்பேத்கரும், ஜவஹர்லால் நேருவும் அனைத்து மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை அளித்தனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மரியாதை அளித்தனர். ஆனால் நரேந்திர மோதி ஏழைகளின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறார்,” என்றார்.

“இப்போதெல்லாம் நரேந்திர மோதி ‘மக்களுக்காக தான் செய்யும் பணி வெறும் ‘டிரெய்லர்’ என்கிறார். டிரெய்லரிலேயே இவ்வளவு பிரச்னைகள் இருந்தால், ‘படம்’ எப்படி இருக்கும்?” என்று எள்ளலாகக் கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி., பிரதமர் மோதியின் உரையின் சில பகுதிகளைப் பகிர்ந்து, “இவர் இந்த நாட்டின் பிரதமராக இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம். அதைவிடப் பெரிய சோகம் என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக உயிருடன் இல்லை,” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அவர், “தோல்வி பயம் காரணமாக, இந்தியப் பிரதமர் வெறுப்பின் விதைகளை வெளிப்படையாக விதைக்கிறார். 18 ஆண்டுகள் முன்பு மன்மோகன் சிங்கின் கூறியதின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து அதை பொருத்தமற்ற சூழ்நிலையில் பயன்படுத்துகிறார். இதற்குத் தேர்தல் ஆணையமும் பணிந்து செல்கிறது,” என்று பதிவிட்டிருக்கிறார்.

மன்மோகன் சிங், நரேந்திர மோதி, பாஜக, காங்கிரஸ், இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் இஸ்லாமியர்கள் பற்றி என்ன சொன்னார்?

கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஓர் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், “விவசாயம், நீர்ப்பாசனம்-நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பில் பொது முதலீட்டின் தேவை ஆகியவை நமது கூட்டு முன்னுரிமைகள் என்பது தெளிவாக உள்ளது,” என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். “பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் பிரதானமானவை,” என்றும் அவர் கூறியிருந்தார்.

“பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். புதிய திட்டங்களை கொண்டு வந்து, சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள், முன்னேற்றம் அடையவும், வளர்ச்சியின் பலன்களைப் பெறவும் அவர்கள் வளங்களில் முதல் பாத்தியதை பெற வேண்டும்,” என்றார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மன்மோகன் சிங் இந்த உரையை ஆங்கிலத்தில் ஆற்றினார். அதில் அவர் ‘உரிமைகள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர் ஆங்கிலத்தில் ‘claim’ (பாத்தியதை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்த உரை பிரதம மந்திரி அலுவலகத்தின் காப்பகத்தில் உள்ளது.