தொழிலதிபரின் பயணப் பொதியைத் திருடிச் சென்ற தம்பதியருக்கு விளக்கமறியல்!

by admin

தொழிலதிபரின் பயணப் பொதியைத் திருடிச் சென்ற தம்பதியருக்கு விளக்கமறியல்! on Sunday, April 21, 2024

தொழிலதிபர் ஒருவரின் பயணப் பொதியைத் திருடிச் சென்ற தம்பதியரை விமான நிலைய பொலிஸார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதனையடுத்து எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதான தம்பதியர் 36 மற்றும் 35 வயதுடையவர்கள் இருவரும் களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றும் சந்தர்ப்பத்தில் இவரது பயணப்பொதியை திருடிய தம்பதியினர அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் .

இந்நிலையில் இந்த தொழிலதிபர் பயணப்பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள்ளார். அவரது பயணப்பொதியில் 2,510 அமெரிக்க டொலர்களும், 398,500 இலங்கை ரூபாவும் இருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட 2,510 அமெரிக்க டொலர்களும், 398,500 இலங்கை ரூபாவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர் நேற்று சனிக்கிழமை (20) ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மே மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடைய செய்திகள்