பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது விபத்துக்குள்ளானதாக, கடற்படை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
மெர்லின் Mk4 ரக உலங்குவானூர்தி அதிகாலை 4 மணிக்குச் சற்று முன்பு ஒரு வயலில் விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
டெவோனில் உள்ள சோர்டன் அருகே இன்று அதிகாலை விபத்துக்குள்ளான ராயல் நேவியின் மெர்லின் Mk4 உலங்குவானூர்தியில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கடற்படைத் தலைமைத் தளபதி க்வின் ஜென்கின்ஸ் ஒரு அறிக்கையில் இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்தினார்.
ராயல் நேவியின் இணையதளத்தின்படி, மெர்லின் உலங்குவார்னூர்திகள் முதன்மையாக நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போருக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், சரக்குப் பரிமாற்றம் மற்றும் கடல்சார் ரோந்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றில் பொதுவாக நான்கு பேர் கொண்ட குழு இருக்கும், மேலும் 24 வீரர்கள் வரை ஏற்றிச் செல்லும் திறன் அவற்றுக்கு உண்டு.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்த மரணங்கள் முற்றிலும் துயரமானவை என்று கூறியதுடன், உயிரிழந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்குத் தனது எண்ணங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது வழங்கப்படும் என்றும் ஜென்கின்ஸ் தெரிவித்தார்.
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
இங்கிலாந்து ரோயல் நேவி உலங்குவானூர்தி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்