பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தக்கவைப்பதே புதிய சட்டவரைவு முன்மொழியப்பட்டதன் நோக்கமா? ; சர்வ ஜன நீதி அமைப்பு கேள்வி

Homeசெய்திகள்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தக்கவைப்பதே புதிய சட்டவரைவு முன்மொழியப்பட்டதன் நோக்கமா? ; சர்வ ஜன நீதி அமைப்பு கேள்வி

புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்த

கிரீன்லாந்தில் கனடா தூதரகத்தைத் திறந்தது! பிரான்சும் திறக்கிறது!
மருத்துவர்கள் கோத்தா விசுவாசிகளாக உள்ளனர்!
சுவிட்சர்லாந்தில் அதிகமான மக்கள் பகுதிநேர வேலை செய்கிறார்கள்


புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரேனும் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற கேள்வி எழுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் சர்வ ஜன நீதி அமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனவும், தற்போது புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டவரைவைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் எனவும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு வாபஸ் பெறப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி பேராசிரியர் ஜயதேவ உடன்கொட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, சட்டத்தரணிகளான ஏ.எம்.பாயிஸ், பவானி பொன்சேகா, ஏர்மிஸா ரீகல், நதீஷானி பெரேரா, ஜெருஷா குரொசெற் தம்பையா, ரவிந்திரன் நிலோஷன் மற்றும் பெனிஸ்லஸ் துஷான் ஆகியோரின் கையெழுத்துடன் சர்வ ஜன நீதி  அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதனை புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் ஊடாகப் பதிலீடு செய்தல் என்பன தொடர்பில் வாத, பிரதிவாதங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக அரசாங்கம் அளித்த அதன் தேர்தல் வாக்குறுதியை நாம் கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.
இச்சட்டமானது சுமார் நான்கு தசாப்தகாலமாக மிகமோசமான மீறல்களின்போது தண்டனைகளிலிருந்து விடுபடும் கலாசாரம் மேலோங்குவதற்குப் பங்களிப்புச் செய்வதுடன், அதனைப் பதிலீடு செய்யும் வகையில் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் அந்நிலை தொடர்வதற்கு இடமளிக்கும் என்ற அச்சம் நிலவுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டவரைவை நாம் முற்றாக எதிர்ப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என பல தசாப்தகாலமாக முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு உருவான அரகலய  மக்கள் எழுச்சிப்போராட்டத்துடன் மேலும் ஆதரவு பெருகியது. அவ்வேளையில் இக்கோரிக்கைக்கு தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் ஆதரவளித்தனர்.
ஆனால் அவர்கள் ஆட்சிபீடமேறியதன் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் என்பதிலிருந்து அதனைப் பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்தல் என்பதை நோக்கி நகர்வதானது பெரிதும் அதிருப்தி அளிக்கின்றது. அதுமாத்திரமன்றி புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பது, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரேனும் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் வரை, அச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம். அத்தோடு மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நேர்மையான தன்முனைப்பை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல அரசியல் தரப்புக்களிடமும் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COMMENTS