கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், இலங்கைக்கான புதிய பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் Major General (Retd.) Dr. Nayyar Naseer அவர்களை உத்தியோகபூர்வமாக இலங்கையிலுள்ள பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை (25) இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது, கல்முனை மற்றும் கிழக்கு மாகாண மக்களின் தற்போதைய தேவைகள், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, அத்துடன் சர்வதேச அளவில் பேசுபொருளாக இருக்கும் ஈரான் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
சர்வதேச பிரச்சினைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு மூலமே சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே பாக்கிஸ்தானின் நிலைப்பாடு என உயர்ஸ்தானிகர் தெளிவாக குறிப்பிட்டார்.
மேலும், கிழக்கு மாகாணத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாக்கிஸ்தான் தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களையும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ததைப் போன்று, தாமும் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு நேரில் வருகை தருவேன் என்றும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.
இதன் போது உரையாற்றிய ரஹ்மத் மன்சூர் அவர்கள், நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் போன்று, கல்முனை மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கும் கல்வி, சமூக மற்றும் மனிதாபிமான சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென பணிவுடன் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பில் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் Counsellor மதிப்பிற்குரிய Mr. Noman Rashid Kayani அவர்களும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பு, இலங்கை – பாக்கிஸ்தான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, கிழக்கு மாகாண மக்களின் எதிர்கால அபிவிருத்திக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் முக்கியமான சந்திப்பாக அமைந்தது.