அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனிநபர் விருதுகளில் ஒட்டுமொத்த ஆதிக்கத்தையும் செலுத்தியுள்ளார். 5 முறை மேடை ஏறிய அவர், மொத்தம் 55 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும், ஒரு டாடா சியரா காரையும் வென்று அசத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஏலத்தில் வைபவ்வை 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், நேற்று ஒரே இரவில் அவர் வென்ற பரிசுத் தொகை மட்டும் 55 லட்சம் ரூபாயாகும். அதாவது, தனது ஏலத் தொகையில் பாதியை அவர் பரிசாகவே வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி வென்ற 5 விருதுகளும் அதற்கான பரிசுத் தொகைகளும்:
மதிப்புமிக்க வீரர் (MVP) – 15 லட்சம் ரூபாய்: சீசனின் மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கான இந்த விருதுடன் அவருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 436.5 புள்ளிகளைப் பெற்று இந்த விருதைத் தட்டிச் சென்றார்.
ஆரஞ்சு தொப்பி – 10 லட்சம் ரூபாய்: இந்த சீசனில் 776 ரன்கள் குவித்ததற்காக அவருக்கு ஆரஞ்சு தொப்பியுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது.
சூப்பர் ஸ்டிரைக்கர் – 10 லட்சம் ரூபாய் மற்றும் டாடா சியரா கார்: சீசன் முழுவதும் 237.31 என்ற அசுர வேக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதற்காக இந்த விருதும், காரும் வழங்கப்பட்டது.
சூப்பர் சிக்ஸஸ் – 10 லட்சம் ரூபாய்: கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து இந்த சீசனில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டதற்காக அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது.
வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரர் – 10 லட்சம் ரூபாய்: இந்த சீசனின் மிகச் சிறந்த வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதுடன் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிவேக சதத்தைப் பதிவு செய்தார். மேலும், பந்துகளை எதிர்கொண்ட கணக்கின்படி ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு கோலியின் சர்ப்ரைஸ் பரிசு.. சச்சின் பாராட்டிய சில மணி நேரத்தில் அடுத்த மகிழ்ச்சி
ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் அடித்த 12 சிக்ஸர்கள், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர் சாதனையாகும். 15 வயதிலேயே ஐபிஎல் தொடரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வைபவ்வின் இந்த அசாத்திய திறமைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.