சண்டிகர்: 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியின் உச்சத்தைக் காட்டினார். ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களிலேயே வெறும் 10 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ரசிகர்களை மிரள வைத்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களைக் கடந்த வைபவ், கிரிக்கெட் வரலாற்றில் பல பிரம்மாண்ட சாதனைகளைத் தன்வசமாக்கியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 600 ரன்களை எட்டிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார். இதற்கு முன் 2018-ம் ஆண்டு ரிஷப் பண்ட் 600 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையைத் தற்போது 15 வயதே ஆன வைபவ் முறியடித்துள்ளார். மேலும், பதின் பருவ வயதில் (Teenager) ஒரு டி20 தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற தேவ்தத் படிக்கல்லின் (580 ரன்கள்) சாதனையையும் அவர் தகர்த்துள்ளார்.

மிக முக்கியமாக, ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர் அடித்த கிறிஸ் கெயிலின் 14 ஆண்டுகால சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள வைபவ், 60 சிக்ஸர்களுக்கும் மேல் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி – 60 சிக்ஸர்கள் (2026)*
கிறிஸ் கெயில் – 59 சிக்ஸர்கள் (2012)
ஆண்ட்ரே ரசல் – 52 சிக்ஸர்கள் (2019)
கிறிஸ் கெயில் – 51 சிக்ஸர்கள் (2013)
ஜோஸ் பட்லர் – 45 சிக்ஸர்கள் (2022)
இது மட்டுமின்றி 16 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ், சுரேஷ் ரெய்னாவின் 12 வருட சாதனை ஒன்றையும் சமன் செய்தார். 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அறிசாதம் அடித்து இருந்தார். அதுவே ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக இருந்தது. அந்த சாதனையை சமன் செய்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
149 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மெகா சாதனை.. வில்லியம்சன், டாம் லாதம் புதிய மைல்கல்
தனது 15 வயதிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைச் சிதறடித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கையாக உருவெடுத்துள்ளதை இந்த ஆட்டம் மீண்டும் உறுதி செய்துள்ளது. எலிமினேட்டர் போன்ற நெருக்கடியான போட்டியில் அவர் காட்டிய இந்தத் துணிச்சல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.