அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியை தாண்டி, மற்றொருபுறம் இந்த ஆண்டின் ‘ஆரஞ்சு தொப்பி’ யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. தற்போது அந்தப் பெருமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுப்மன் கில், சாய் சுதர்சன் செய்த சொதப்பலால் வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் என்ற சாதனை செய்யப் போவது உறுதி ஆகி இருக்கிறது.
இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இறுதிப்போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் 700 ரன்களுக்கு மேல் ரன் குவித்து இருந்ததால் அவரை முந்தும் வாய்ப்பு இருந்தது.

ஆனால், பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சாய் சுதர்சன் 12 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சுப்மன் கில் 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இவர்கள் இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறியதால், வைபவ் சூர்யவன்ஷியின் சாதனையை எட்டிப்பிடிக்க முடியாமல் போனது.
பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகப் புயலெனக் கிளம்பினார். பிளே-ஆப் சுற்று வரை மொத்தம் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 776 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார். இதில் 72 சிக்ஸர்களை விளாசி கிறிஸ் கெய்லின் சாதனையையும் அவர் தகர்த்தார். மிக இளம் வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, முதல் சீசனிலேயே ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றி அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரின் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியல் இதோ:
வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான்) – 776 ரன்கள்
சுப்மன் கில் (குஜராத்) – 732 ரன்கள்
சாய் சுதர்சன் (குஜராத்) – 722 ரன்கள்
IPL 2026 Final: ஆர்சிபிக்கு ஆரம்பமே வெற்றி.. குஜராத் கேப்டன் சுப்மன் கில் காலி.. சோலி முடிஞ்சிது?
இறுதிப்போட்டியில் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் ஆட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வைபவ் சூர்யவன்ஷியே இந்த ஆண்டின் ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர் என்பது உறுதியானது. 15 வயதில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து இந்த உயரிய விருதைப் பெற்றுள்ள வைபவ்விற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரமாக அவர் உருவெடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.