அகமதாபாத்: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி, ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த வெற்றி கொண்டாட்டங்களுக்கு நடுவே, களத்தில் விராட் கோலி குருனல் பாண்டியாவின் மகனுடன் பகிர்ந்து கொண்ட ஒரு நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆர்சிபியின் வெற்றிக்குப் பின், கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பரிசளிப்பு விழாவிற்காகக் காத்திருந்தனர். அப்போது, குர்னல் பாண்டியா தனது மகனுடன் அவர்கள் அருகே நடந்து வந்ததைக் கண்ட கோலி, உடனடியாக அந்தச் சிறுவனை நிறுத்தினார்.

ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அந்தக் குழந்தையை அன்புடன் அணைத்து, விளையாட்டாக கன்னங்களை கிள்ளி மகிழ்ந்தார். சிறுவனுடன் கோலி பேச, அனுஷ்கா புன்னகையுடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரிப்பன் பேப்பர்களை எடுத்து முட்டிக்கால் போட்ட குர்னல் பாண்டியா தனது மகன் மீது எடுத்து தூவினார். இதனால் அந்த சிறுவன் துள்ளி குதித்து மைதானத்தில் ஓடியதை காண கண் கோடி வேண்டும்.
IPL 2026: 776 ரன்கள் அடிச்சும் பத்தல.. அடுத்த சீசன் இன்னும் பலமாக திரும்புவேன்- வைபவ் சூர்யவன்ஷி
இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் பரவி அன்றைய இரவின் மறக்க முடியாத தருணமானது.பெங்களூரு அணி இந்த நெகிழ்ச்சியான தருணங்களுக்கு முன்பு ஒரு வரலாற்று மைல்கல் சாதனையைப் படைத்தது. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 பட்டங்களை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மட்டுமே இச்சாதனையை இதற்கு முன் நிகழ்த்தியுள்ளன. இந்த வெற்றி ஆர்சிபியின் நிலையை மேலும் பலப்படுத்தியது.
சாதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், பெரிய அளவிலான பொதுக் கொண்டாட்டங்கள் உடனடியாகத் திட்டமிடப்படவில்லை. வெற்றிக்குப் பிறகு வெளியான அறிக்கையில், கொண்டாட்டங்கள் ஹோட்டல் மற்றும் டிரஸ்ஸிங் ரூமுக்குள்ளேயே நடைபெறும் என அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும், அணி உடனடியாக பெங்களூருவுக்குப் பயணிக்காமல், அகமதாபாத்திலேயே தங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
IPL 2026: அதிக ரன்கள், அதிக சிக்சர், அதிக விக்கெட் வீழ்த்திய டாப் வீரர்கள் முழு பட்டியல்
ஆர்சிபி கொண்டாட்டத்தில் இருக்கும் வேளையில், இறுதிப் போட்டிக்குப் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜிடி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் கோளாறு ஏற்பட்டு புகை பரவியது. இதனால் உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் சேதமின்றி, அனைவரும் பத்திரமாக மாற்று வாகனத்தில் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.