← முகப்பு செய்திகள்

Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On

முல்லான்பூர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட்டின் ஆட்ட அணுகுமுறை குறித்தும், முக்கியமான டெஸ்ட் போட்டிகளின் இறுதிக்கட்ட தருணங்களில் அவர் தேர்வு செய்யும் மோசமான ஷாட்கள் குறித்தும் அஸ்வின் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். முல்லான்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு, 81 ரன்களில் பண்ட் ஆட்டமிழந்த பிறகு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

லாங்-ஆஃப் மற்றும் லாங்-ஆன் திசைகளில் பீல்டர்கள் இருந்தபோதிலும், பந்தை எல்லைக்கோட்டிற்கு பறக்கவிட முயன்ற பண்ட், இறுதியில் சதத்தை தவறவிட்டார். தனது 50 டெஸ்ட் போட்டிகளில், 80 முதல் 99 ரன்களுக்கு இடைப்பட்ட ஸ்கோரில் பண்ட் ஆட்டமிழப்பது இது ஒன்பதாவது முறையாகும்.

தனது யூடியூப் சேனலில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் குறித்து விரிவாகப் பேசிய அஸ்வின், "பண்ட் இத்தனை முறை 80 மற்றும் 90-களில் ஆட்டமிழப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. அவர் ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் பேட்டர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் 80 ரன்களை எட்டிய பிறகு, அடுத்த 20 ரன்களை நிதானமாக அடித்து சதத்தை எட்டக் கூடாதா?

தவறான நேரத்தில் அவர் விளையாடும் பொறுப்பற்ற ஷாட்களால் இந்திய அணி பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்டராக, அவர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவர் இந்த 80-களையே சதங்களாக மாற்றியிருந்தால், அவரது புள்ளிவிவரங்கள் பிரமிக்கத்தக்க வகையில் இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அஸ்வின், "எல்லா பேட்டர்களும் தவறு செய்வது இயல்புதான், ஆனால் பண்ட் மீண்டும் மீண்டும் ஒரே தவறைச் செய்வது வருத்தமளிக்கிறது. பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும், அதே தவறை அவர் தொடர்ந்து செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டதால், இனி வரும் காலங்களில் அணியின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டியது அவசியம்" என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

ரிஷப் பண்ட் தற்போதைய உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டர் என்றே தான் கருதுவதாக அஸ்வின் நம்புகிறார். பண்ட்டின் தற்காப்பு ஆட்டம் (Defense) மிகவும் நேர்த்தியானது, இது சுனில் கவாஸ்கரையே கவர்ந்துள்ளது. பந்து எவ்வளவு வேகத்தில் வந்தாலும், அதை எதிர்கொள்ள பண்ட்டிடம் போதிய கால அவகாசம் இருப்பதை அஸ்வின் சுட்டிக்காட்டினார். "அவர் தடுப்பாட்டம் ஆடும்போது, பந்து சிதறி ஓட வேண்டும் என்று கெஞ்சுவது போல மிக நேர்த்தியாக இருக்கும்," என்று அஸ்வின் பாராட்டினார்.

பலரும் பண்ட்டின் ஆட்டத்தை 'இயல்பான ஆட்டம்’ (Natural Game) என்று முத்திரை குத்தினாலும், அதை அஸ்வின் மறுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள ஷாட்களை தேர்தெடுப்பதே உண்மையான ஆட்டம் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பவுண்டரியின் எல்லையில் பீல்டர்கள் இருக்கும்போது, அவர்களைத் தாண்டி சிக்ஸர் அடிக்க முயல்வது அறிவார்ந்த அணுகுமுறை கிடையாது என்றும் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

IND vs AFG: சதமடித்தும் ராகுலை திட்டிய அஸ்வின்.. ஃபார்மில் இல்லை என்றால்… அஸ்வின் கருத்து

இத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், ரிஷப் பண்ட் தனது 50 டெஸ்ட் போட்டிகளில் 43.37 சராசரியுடன் எட்டு சதங்களை அடித்து அசத்தலான சாதனையைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில், பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா 564 ரன்கள் குவித்து, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net