வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வாடகை கார் சாரதி ஒருவரை அச்சுறுத்தி 38,500 ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பொரளை கோதமிபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கோதமி வீதி, பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்களாவர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் 600 மில்லி கிராம் மற்றும் 12 கிராம் 360 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின்படி, சந்தேகநபர்கள் பல குற்றங்களைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி இராஜகிரிய பகுதியில் இருந்து கலபலுவாவ நோக்கி பயணித்த வாடகை கார் ஒன்றில் ஏறி, சாரதியிடமிருந்து சுமார் 80,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
அன்றையதினம், கலபாலுவாவ பகுதியில் இருந்து ஒபேசேகரபுர நோக்கி மற்றொரு காரில் பயணித்து, அந்த சாரதியின் 40,000 ரூபாய் பணம், தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு புளூடூத் ஹேண்ட்ஸ்ஃப்ரீ ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 07 ஆம் திகதி பொரளை கோதமிபுர பகுதியில் வாடகை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து 3,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசி ஒன்றைக் கொள்ளையடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த இரு சந்தேக நபர்களில் ஒருவர், இதற்கு முன்னர் 5,500 ரூபாய் பணம் மற்றும் கைபேசி ஒன்றைத் திருடியமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவராவார்.
மேலும், இக்கொள்ளைச் சம்பவங்களைச் செய்வதற்காக வந்திருந்த மற்றுமொரு சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (31) வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.