போதைப்பொருள் வழக்கில் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்ஸின் சகோதர் ஜான் பிரிட்டோவுக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியது. இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னர் ஜான் பிரிட்டோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: யூடியூப்பர் மாரிதாஸ் என்பவர் என்னை பற்றி தவறான அவதூறு பரப்பி உள்ளார். நான் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசூழற்சி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய தங்கை லால்குடி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். என்னைப் பற்றியும் என் சகோதரி பற்றியும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் என்னை இணைத்து தவறாக யூடியூப்பர் மாரிதாஸ் சித்தரித்து உள்ளார். போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஜான் பிரிட்டோ நான் இல்லை. அது வேற யாரோ. கேரளத்தில் லாட்டரி சம்பந்தமான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆனால் போதைப்பொருள் தொடர்பாக எந்த வழக்கும் தன் மீது இல்லை.
நான் தற்போது பாஜகவில் இருக்கிறேன். பொய்யான தகவல்களால் என்னுடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. என்னுடைய பெயரை கெடுப்பதற்காகவே இதுபோன்ற செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் திமுக ஐடி விங்க் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது.
கேரளத்தில் லாட்டரி வழக்கில் என்னுடைய சகோதரி பேரும் என்னுடைய பேரு தான் இருக்கிறது. அது நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இதுவரை 51 யூடியூப்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். என்னை பற்றி youtube இல் வந்துள்ள தவறான பதிவுகளை நீக்க கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் நான் இருக்கிறேன். இன்னும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள்" என்று ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.